தேசிய நல்லாசிரியர் விருதுக்கான ஆசிரியர்களை பரிந்துரைக்க, மாவட்டந்தோறும்
தேர்வுக்குழு அமைக்க, பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டு உள்ளது.உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது:கல்வி மாவட்டத்துக்கு ஒருவர் வீதம், தேசிய
விருதுக்கான ஆசிரியரை தேர்வு செய்ய வேண்டும்; அவர், துாய்மையான கல்வி
பணியில் ஈடுபட்டிருக்க வேண்டும்; எவ்வித ஒழுங்கு நடவடிக்கைக்கும் உள்ளாகி
இருக்கக் கூடாது.
இதற்கு முன், டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது பெற்ற ஆசிரியர்களை மட்டுமே,
தேசிய விருதுக்கு தேர்வு செய்ய வேண்டும். தகுதியான ஆசிரியரை தேர்வு செய்ய,
தேர்வுக்குழு அமைக்க வேண்டும். துவக்க, நடுநிலைப் பள்ளி ஆசிரியர்களை தேர்வு
செய்ய, மாவட்ட தொடக்க கல்வி அலுவலர், தேர்வுக்குழு தலைவராகவும்; மாவட்ட
ஆசிரியர் பயிற்சி நிறுவன முதல்வர், முதுநிலை உதவி தொடக்க கல்வி அலுவலர் என,
இரு உறுப்பினர்களும் இருக்க வேண்டும்.
தகுதியான ஆசிரியர்கள் பணிபுரியும் பள்ளிக்கு நேரில் சென்று, ஆய்வு நடத்தி,
நடவடிக்கைகளை கவனித்து, இக்குழு மதிப்பிட வேண்டும். முறைகேட்டுக்கு
இடமளிக்காமல் செயல்பட வேண்டும்.தேர்வு அறிக்கையை, வரும் 20ம் தேதிக்குள்,
பள்ளி கல்வி இயக்குனரக இணை இயக்குனருக்கு அனுப்ப வேண்டும்.இவ்வாறு,
உத்தரவில் கூறப்பட்டு உள்ளது.







