மத்திய இடைநிலை கல்வி வாரியத்தின் (சிபிஎஸ்இ) 10ம் வகுப்பு மற்றும் 12ம்
வகுப்புக்கான, தற்காலிக தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. சிபிஎஸ்இ
படிக்கும் மாணவர்களுக்கான தேர்வு அட்டவணை முன்னதாகவே இணைய தளங்களில்
வெளியிடப்படுவது வழக்கம்.ஆனால் இந்த ஆண்டு சற்று தாமதமாக வெளியாகும் என்று
தெரிகிறது. கடந்த ஆண்டை பொறுத்தவரை சிபிஎஸ்இ நடத்திய 10ம் வகுப்பு தேர்வை
12,871 பள்ளிகள் மூலம் 13 லட்சத்து 28 ஆயிரத்து 970 பேர் எழுதினர்.
அவர்களுக்காக நாடு முழுவதும் 3,253 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டன. அதேபோல
பிளஸ் 2 தேர்வில் நாடு முழுவதும் 8,602 பள்ளிகளைச் சேர்ந்த 10 லட்சத்து 29
ஆயிரத்து 874 பேர் எழுதினர். அவர்களுக்காக மொத்தம் 3,039 தேர்வு மையங்கள்
அமைக்கப்பட்டன.
2015ம் ஆண்டுக்கான தேர்வுகள் மார்ச் மாதம் தொடங்க உள்ள நிலையில் தற்காலிக
தேர்வு அட்டவணையை சிபிஎஸ்இ தயாரித்துள்ளது. மேலும், அந்த அட்டவணை குறித்து
அனைத்து சிபிஎஸ்இ பள்ளிகளிடம் கருத்து கேட்டுள்ளது. அதில் திருத்தம் ஏதாவது
இருந்தால் மாற்றி அமைத்து பிப்ரவரியில் இறுதித் தேர்வு அட்டவணையை
வெளியிடுவார்கள். தற்காலிக தேர்வு அட்டவணைப்படி, 12ம் வகுப்பு தேர்வுகள்
வரும் மார்ச் 1ம் தேதி தொடங்கி ஏப்ரல் 16ம் தேதி முடிகிறது. பத்தாம்
வகுப்பு தேர்வுகள் மார்ச் 3 ம் தேதி தொடங்கி 14ம் தேதி முடிகிறது.







