பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–
தமிழ்நாட்டில்
12–ம் வகுப்புப் பொதுத் தேர்வுகள் நடத்தி முடிக்கப்பட்டு, அதன்பின்னர்
10–ம் வகுப்புப் பொதுத்தேர்வுகள் நடத்தப்படுவது தான் வழக்கம். ஆனால்,
நடப்பாண்டில் புதுமை படைப்பதாக நினைத்துக் கொண்டு 12–ம் வகுப்பு மற்றும்
10–ம் வகுப்புப் பொதுத் தேர்வுகளை தமிழக அரசின் தேர்வுத்துறை ஒரே நேரத்தில்
நடத்தி வருகிறது. இதனால் தேவையற்ற குழப்பங்கள் ஏற்பட்டிருக்கின்றன.
அரசு
உயர்நிலைப் பள்ளிகளிலும், மேல்நிலைப் பள்ளிகளிலும் பணியாற்றும் அனைத்து
பட்டதாரி மற்றும் முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களும் தேர்வுப் பணிக்கும்,
விடைத்தாள் திருத்தும் பணிக்கும் அனுப்பப்பட்டு விட்டதால் அப்பள்ளிகளில் 6,
7, 8, 9 ஆகிய வகுப்புகளில் பயிலும் 35 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவ,
மாணவியருக்கு பாடம் நடத்த ஆசிரியர்கள் இல்லை. ஒரு கல்வியாண்டில் 37 நாட்கள்
(26 வேலை நாட்கள்) 4 வகுப்புகளின் மாணவர்களுக்கு பாடம் நடத்தாமல் இருப்பது
மாணவர்களுக்கு செய்யும் மிகப்பெரிய துரோகமாகும்.
கடந்த ஆண்டுகளில்
நடத்தப்பட்டதைப் போலவே இந்த ஆண்டும் 12–ம் வகுப்பு மற்றும் 10–ம் வகுப்புப்
பொதுத் தேர்வுகள் தனித்தனியாக நடத்தப்பட்டிருந்தால் இந்தநிலை
ஏற்பட்டிருக்காது. இனி வரும் ஆண்டுகளில் கடந்த கால நடைமுறையே
கடைபிடிக்கப்படுவதை அரசு உறுதி செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.