பார்வையற்றோரை சராசரி மனிதர் அல்ல என்றும் அதனால் விரிவுரையாளர் பணிக்கு
அவர்களை தேர்வு செய்ய முடியாது என்றும், பதில் மனு தாக்கல் செய்த
பள்ளிக்கல்வித்துறை செயலர் சபீதாவுக்கு, சென்னை ஐகோர்ட்டு கடும் கண்டனம்
தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு பார்வையற்ற ஆசிரியர்கள் சங்கத்தின்
சார்பில், சென்னை ஐகோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில்
கூறியிருப்பதாவது:–
விரிவுரையாளர் பணி
ஆசிரியர் கல்வியியல், ஆராய்ச்சி மற்றும் பயிற்சி இயக்குனரகம்
மற்றும் மாவட்ட ஆசிரியர் கல்வியியல், ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம்
ஆகியவைகளுக்கு விரிவுரையாளர் பதவிகளுக்கு கடந்த 2009–ம் ஆண்டு ஆசிரியர்
தேர்வு வாரியம் அறிவிப்பு வெளியிட்டது. மொத்தம் 195 விரிவுரையாளர்
பதவிகளில், பார்வையற்ற ஆசிரியர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படாது என்று விளக்க
குறிப்பேட்டில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
தமிழக சமூக நலத்துறை
கடந்த 1981–ம் ஆண்டு பிறப்பித்த அரசாணையின்படி, அரசு பணியில்
மாற்றுத்திறனாளிகளுக்கு 3 சதவீதம் இடஒதுக்கீடு வழங்க வேண்டும். ஆனால், இந்த
அரசாணைக்கு எதிராக மாற்றுத்திறனாளிகளுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது.
இது சட்டவிரோதமாகும். எனவே விரிவுரையாளர் பணிக்கான இந்த அறிவிப்பை ரத்து
செய்யவேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.
சராசரி மனிதர்கள் அல்ல
இந்த மனு தலைமை நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல், நீதிபதி
எம்.எம்.சுந்தரேஷ் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர்
சார்பில் வக்கீல் கோவி ராமலிங்கம் ஆஜராகி வாதிட்டார். இந்த வழக்கில், தமிழக
பள்ளிக்கல்வித்துறை செயலர் சபீதா சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில்
மனுவில், ‘1 முதல் 5 வகுப்பு வரை பாடம் எடுக்கும் ஆசிரியர்கள் வகுப்பு
எடுக்கவேண்டிய விரிவுரையாளர், உடலை அசைத்து முகபாவனையுடன் பாடம்
நடத்தவேண்டும்.
மேலும், களப்பயிற்சிக்கும் மாணவர்களை அழைத்துச் செல்ல
வேண்டும். இவற்றையெல்லாம் சராசரியான நபர்களால்தான் செய்ய முடியும்
என்பதால், பார்வையற்றோர், காதுகேளாதவர் ஆகியோருக்கு வாய்ப்பு வழங்க
முடியாது’ என்று கூறப்பட்டு இருந்தது.
எத்தனை இடங்கள்?
இதையடுத்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:–
பார்வையற்றோர்
சராசரி மனிதரே கிடையாது என்று அரசு தரப்பில் பதில் மனுவில் கூறியுள்ளார்.
தமிழக அரசு சார்பில் இப்படியொரு பதில் மனுவை தாக்கல் செய்த
பள்ளிக்கல்வித்துறை செயலர் சபீதாவுக்கு கடும் கண்டனம்
தெரிவித்துக்கொள்கின்றோம்.
இந்த பிரச்சினையை இப்படியே எங்களால்
விட்டு விட முடியாது. இடஒதுக்கீட்டின்கீழ் பார்வையற்றோருக்கு வழங்கவேண்டிய
பணியிடங்கள் எத்தனை? அதில் எத்தனை இடங்கள் இதுவரை நிரப்பப்பட்டுள்ளது?
எத்தனை இடங்கள் காலியாக உள்ளது? என்பது உள்ளிட்ட அனைத்து விவரங்களையும்
அறிக்கையாக பள்ளிக்கல்வித்துறை செயலர் சபீதா நேரில் ஆஜராகி வருகிற ஏப்ரல்
1–ந்தேதிக்குள் தாக்கல் செய்யவேண்டும். இந்த வழக்கை பைசல் செய்கிறோம்.
இவ்வாறு நீதிபதிகள் கூறியுள்ளனர்.