ஆசிரியர் நியமனங்களில் ஊழல் நடைபெறாமல் இருக்க பணி நியமன ஆணைகளை வழங்க
அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கூறியுள்ளார்.
இதுகுறித்து, தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–
ஒப்புதலுக்கு லஞ்சம்
இந்தியாவிலேயே கல்வித்துறையில் முன்னோடி மாநிலமாக தமிழகம் திகழ்ந்து
வந்ததற்கு மிகப்பெரிய பின்னடைவு தற்போதைய ஆட்சியில் ஏற்பட்டு வருகிறது.
தென்மாவட்டங்களில் சிறுபான்மையினர் நடத்தும் பள்ளிகளில் ஆசிரியர்
நியமனங்களுக்கு கல்வி அதிகாரிகளிடம் முன் அனுமதி பெற வேண்டிய அவசியம்
இல்லை. பணிநியமனம் செய்துவிட்டு, மாவட்ட கல்வி அலுவலரிடம் ஒப்புதல் பெற்றிட
வேண்டும். இது காலந்தொட்டு நடக்கும் நடைமுறையாகும்.
தற்போது 62
ஆசிரியர் பணி நியமன ஒப்புதலுக்காக இடைநிலை ஆசிரியர் பணிக்கு ரூ.3.5 லட்சம்
கொடுத்தால் தான் ஒப்புதல் வழங்கப்படும் என்று மாவட்ட கல்வி அலுவலர்கள்
கூறுகின்றனர். இதன் காரணமாக 2013–14–ம் கல்வியாண்டில் நியமனம் செய்யப்பட்ட
ஆசிரியர்களுக்கு பல மாதங்களாகியும் ஒப்புதல் வழங்கப்படாததோடு, சம்பளமும்
தரப்படாமல் உள்ளது.
மன உளைச்சல்
மாவட்டத்தில் கல்வித்துறை செம்மையாக செயல்படுகிறதா என்பதை
கண்காணிக்க வேண்டிய கல்வி அலுவலர்கள் பள்ளி கல்வித்துறை அமைச்சர் சார்பாக
புரோக்கர்களாக செயல்பட்டு வசூல் வேட்டை நடத்தி, புதிதாக நியமிக்கப்பட்ட
ஆசிரியர்களை கொடுமைப்படுத்தி, மனஉளைச்சலுக்கு உள்ளாக்கி வருகின்றனர்.
இந்த
லஞ்ச வேட்டையில் இந்த அதிகாரிகள் பலரோடு பேசிய ஒலி நாடாவை கேட்கின்ற
வாய்ப்பு எனக்கு ஏற்பட்டது. இந்த ஒலி நாடாவை ஆதாரமாக வைத்து தமிழக லஞ்ச
ஒழிப்புத் துறையினர் உடனடியாக சம்மந்தப்பட்ட கல்வி அதிகாரிகளையும், இந்த
லஞ்ச வேட்டையை நடத்துவதற்கு காரணமான கல்வி அமைச்சர் கே.சி.வீரமணியை
பதவிநீக்கம் செய்வதோடு, கைது செய்யப்பட வேண்டும். இவர்களை ஒரு நிமிடம் கூட
பணியில் தொடர அனுமதிக்கக் கூடாது. அப்படி தொடர்வது தமிழகத்தில்
கல்வித்துறையையே சீரழிக்கிற வாய்ப்பு ஏற்பட்டு விடும்.
நடவடிக்கை
இக்கொடுமை குறித்து தமிழ்நாடு தொடக்க பள்ளி ஆசிரியர் கூட்டணியைச்
சேர்ந்தவர்கள் பலமுறை கல்வி அதிகாரிகளை சந்தித்து முறையிட்டதற்கு தீர்வு
காணாமல், அதற்கு மாறாக மிரட்டி அச்சுறுத்துகிற வேலையை கல்வி அதிகாரிகள்
செய்து வருகின்றனர்.
எனவே, ஆசிரியர் நியமனங்களில் எவ்வித ஊழலும்
நடைபெறாமல் பணி நியமன ஆணை வழங்குவதற்கு தமிழக முதல்–அமைச்சர் உடனடியாக
நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.