அதனை தொடர்ந்து, அணிவகுப்பு கமாண்டர் எம்.அஞ்சனா தலைமையில் பயிற்சி பெற்ற ராணுவ அதிகாரிகளின் அணிவகுப்பு குழுவினர் சாரை சாரையாக வளாகத்திற்குள் நுழைந்தனர்.
முதலில் சென்னை ராணுவ அதிகாரிகள் பயிற்சி மையத்தின் தலைமை பயிற்சியாளர் மேஜர் ஜெனரல் கோபால் கிருஷ்ண முரளி, பயிற்சி மையத்தின் பொறுப்பு அதிகாரி லெப்டினண்ட் ஜெனரல் ரவீந்திர பிரசாத் சாகிப் மற்றும் சிறப்பு விருந்தினரான இந்திய ராணுவ பயிற்சி மைய அதிகாரி லெப்டினண்ட் ஜெனரல் சஞ்சீவ் மதோக் ஆகியோருக்கு அணிவகுப்பு வீரர்கள் தனித்தனியாக வணக்கம் செலுத்தினர்.
பின்னர், சிறப்பு விருந்தினர் லெப்டினண்ட் ஜெனரல் சஞ்சீவ் மதோக் திறந்த ஜீப்பில் சென்று ராணுவ அதிகாரிகளின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். அதைத் தொடர்ந்து, பயிற்சியின் போது அனைத்து பிரிவிலும் திறமையாக திகழ்ந்தவர்களுக்கு விருது மற்றும் பதக்கங்கள் வழங்கப்பட்டன.
‘வீர வாள்’ விருது
அதன்படி, அணிவகுப்பு கமாண்டர் எம்.அஞ்சனாவுக்கு ‘வீர வாள்’ விருதும், தங்கப்பதக்கமும் வழங்கப்பட்டது. மேலும், ராணுவ பயிற்சி அதிகாரி குமார் அபிஷேக்கிற்கு வெள்ளிப்பதக்கமும், மாதவி ராய்க்கு வெண்கல பதக்கமும் அளிக்கப்பட்டது.
அதன் பின்னர் பயிற்சி அதிகாரிகளின் பதவி ஏற்பு விழா நடைபெற்றது. விழாவின் போது, ராணுவ அதிகாரிகளின் ‘ரேங்கை’ குறிக்கும் வகையில் பயிற்சி அதிகாரிகளின் சீருடையின் தோள்பட்டையில் துணியால் மறைக்கப்பட்டிருந்த 2 நட்சத்திர அடையாளங்கள் அவர்களின் பெற்றோர் முன்னிலையில் திறக்கப்பட்டது.
முதல் வணக்கம்
இந்த நட்சத்திரங்கள் திறக்கப்பட்ட தருணத்தில், பயிற்சி அதிகாரிகள் தங்களின் பயிற்சியின் கடைசி காலடியையும், புதிதாக பொறுப்பேற்க உள்ள லெப்டினண்ட் பதவியின் முதல் காலடியையும் ஒரே நேரத்தில் எடுத்து வைத்து, பயிற்சியின் மூலம் பட்டை தீட்டப்பட்ட வைரங்களை போன்று லெப்டினண்ட் அதிகாரியாக பதவி ஏற்ற உற்சாக வெள்ளத்தில் ஜொலித்தனர்.
அதைத் தொடர்ந்து மூத்த ராணுவ அதிகாரிகள் தங்களது இளவல்களை வரவேற்கும் விதமாக 185 லெப்டினண்ட் அதிகாரிகளுக்கும் தங்கள் வணக்கத்தை தெரிவித்தனர். அதற்கு பதில் அளிக்கும் வகையிலும், சிறப்பு விருந்தினர்களை வணங்கும் வகையிலும் 185 அதிகாரிகளும், லெப்டினண்ட் பதவி பெற்ற பின் தங்களது முதல் வணக்கத்தை தெரிவித்தனர்.
தேசிய கொடிக்கு வணக்கம்
மேலும், பதவி ஏற்பிற்கான உறுதிமொழியை எடுத்துக் கொண்டதுடன், தேசிய கொடிக்கும் தங்கள் வணக்கத்தை தெரிவித்து, தேசிய கீதத்துடன் தங்கள் பயிற்சி மையத்தில் இருந்து லெப்டினண்ட் ஜெனரல்களாக திரும்பினார்கள்.
அப்போது, அவர்கள் உற்சாக வெள்ளத்தில் ஒருவரை ஒருவர் கட்டிப்பிடித்தும், தங்கள் பயிற்சி பெற்ற இடத்தின் மண்ணை முத்தமிட்டு மரியாதை செலுத்தியும், தேசிய கொடியின் மூவர்ணம் கொண்ட பலூன்களை பறக்க விட்டும், கலர் தாள்களை பறக்கவிட்டும், பட்டாசுகளை வெடித்தும் மகிழ்ச்சி அடைந்தனர்.
‘செல்பி’ எடுத்து மகிழ்ச்சி
அந்த மகிழ்ச்சிக்கு மகிழ்ச்சி சேர்க்கும் வகையில், லெப்டினண்ட்டுகளின் பெற்றோரும், உறவினர்களும் தங்கள் குழந்தைகளை கட்டி அணைத்து முத்தமிட்டும், தோள்களில் தூக்கியும் உற்சாக வெள்ளத்தில் குதூகலம் அடைந்தனர்.
மேலும் அவர்கள் இந்த மகிழ்ச்சியான தினத்தை என்றும் நினைவில் ஏந்திக் கொள்ளும் விதமாக தங்கள் குழந்தைகளுடன் தங்கள் செல்போன்கள் மூலம் விதம் விதமாக ‘செல்பி’ எடுத்தும், கேமராக்களில் புகைப்படம் எடுத்தும் மகிழ்ந்தனர்.
7-வது தலைமுறை
நேற்று நடைபெற்ற இந்த பதவி ஏற்பு விழாவில், துப்பாக்கி சூட்டில் உயிர் இழந்த உத்திரபிரேதசம் மாநிலத்தை சேர்ந்த ராணுவ வீரர் ஒருவரின் மனைவி ருச்சி வர்மாவும் லெப்டினண்டாக பதவி ஏற்றுக் கொண்டார். இவருக்கு 5 வயதில் அக்சவ் என்ற மகன் ஒருவர் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் உத்திரப்பிரதேசத்தை சேர்ந்த அர்ஜுன் சிங் சவுகான் என்பவர் தனது குடும்பத்தில் 7-வது தலைமுறையாக ராணுவ அதிகாரியாக பதவி ஏற்றுக் கொண்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
தாம்பரம் அதிகாரி பேட்டி
பதவி ஏற்பு விழாவில் லெப்டினண்டாக பதவி ஏற்றுக் கொண்ட தாம்பரத்தை சேர்ந்த சக்தி குமார் நிருபர்களிடம் கூறியதாவது:-
நான் பி.இ. முடித்து தகவல் தொழில் நுட்பம் துறையில் பணிபுரிந்தேன். எனது குடும்பத்தில் எங்கள் தாத்தா பிரிட்டிஷ் ஆட்சி காலத்திலேயே ரெயில் என்ஜின் டிரைவராக பணிபுரிந்துள்ளார். இப்போதும் எனது தந்தை ராஜ்குமார், தாயார் குமாரி உள்பட பலர் ரெயில்வேயில் பணிபுரிந்து வருகின்றனர். நான் தான் முதல் முறையாக ராணுவ அதிகாரியாக பதவி ஏற்றுள்ளேன்.
நான் மாணவனாக இருக்கும் போது, என்.சி.சி.யில் சேர்ந்து இருந்தேன். என்.சி.சி.யில் சேர்ந்தவர்கள் அனைவருக்கும் ராணுவத்தில் சேர வேண்டும் என்ற ஆசை வரும். அதன்படி, நானும் ராணுவத்தில் சேர ஆசைப்பட்டு தற்போது லெப்டினண்டாக பதவி ஏற்றுள்ளேன்.
இந்திய ராணுவத்தில் பெரும்பாலும் வடமாநிலத்தை சேர்ந்தவர்களே அதிக அளவில் பங்கேற்கின்றனர். தமிழகத்தில் இருந்து ஏராளமானோர் ராணுவத்தில் இருந்தாலும் உயர் பதவிகளில் குறைந்த அளவிலானவர்களே உள்ளனர். எனவே ராணுவ அதிகாரிகள் பதவியில் தமிழகத்தில் இருந்து அதிக அளவில் சேர்வதற்கு கல்லூரி மாணவர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.








