குரூப் 2 காலிப் பணியிடங்களை
நிரப்ப நடந்த எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான சான்றிதழ்
சரிபார்ப்பு வரும் 26-ஆம் தேதி தொடங்குகிறது.
இதுகுறித்து தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின்
(டி.என்.பி.எஸ்.சி.,) செயலாளர் விஜயகுமார் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட
அறிவிப்பு:
கடந்த 2013-14-ஆம் ஆண்டுக்கான குரூப் 2 தொகுதியில்
1,130 காலிப் பணியிடங்களுக்கான முதல்நிலை எழுத்துத் தேர்வு கடந்த 2013-ஆம்
ஆண்டு டிசம்பரில் நடைபெற்றது. முதன்மை எழுத்துத் தேர்வு கடந்த ஆண்டு
நவம்பரில் நடந்தது.
இத்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களில் சான்றிதழ்
சரிபார்ப்புக்கு 5,635 பேர் அழைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கான சான்றிதழ்
சரிபார்ப்பு வருகிற 26-ஆம் தேதி முதல் மே 8-ஆம் தேதி வரை சென்னை பிரேசர்
பாலச் சாலையில் அமைந்துள்ள தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய
அலுவலகத்தில் நடைபெற உள்ளது.
சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்பட்டுள்ள
விண்ணப்பதாரர்களுக்கான கடிதம் அஞ்சல் மூலம் அனுப்பப்பட உள்ளது.
அழைப்புக்கான விவரம் (Notice of Certificate Verification) தேர்வாணையத்தின்
இணையதளத்திலும் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
விண்ணப்பதாரர்கள், அழைப்புக் கடிதத்தை தேர்வாணைய
இணையதளத்திலிருந்தும் (www.tnpsc.gov.in) பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
அனைவரும் அவர்களுக்கென ஒதுக்கப்பட்டுள்ள நாள்களில் சான்றிதழ் சரிபார்ப்பில்
கலந்து கொள்ள வேண்டும். ஒதுக்கப்பட்ட நாள், நேரத்தில் சான்றிதழ்
சரிபார்ப்பில் கலந்து கொள்ளத் தவறும் விண்ணப்பதாரர்களுக்கு மறுவாய்ப்பு
வழங்கப்படாது.








