அரசு கலை, அறிவியல் கல்லூரி உதவி
பேராசிரியர் நேரடி நியமனத்துக்கான நேர்முகத் தேர்வு வருகிற 25-ஆம் தேதி
நடத்தப்பட உள்ளதாக ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.
அன்றைய தினம் வணிகவியல் (கணினி அப்ளிகேஷன்), வணிகவியல்
(ஐபி), கணினி தொழில்நுட்பம் உள்ளிட்ட மூன்று பாடப் பிரிவுகளுக்கான உதவி
பேராசிரியர் நியமனத்துக்கு நேர்முகத் தேர்வு நடத்தப்பட உள்ளது.
தமிழக அரசு 28-5-2013 அன்று வெளியிட்ட அறிவிப்பின்
அடிப்படையில், அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் காலியாக உள்ள உதவி
பேராசிரியர் பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்புவதற்கான பணிகளை
ஆசிரியர் தேர்வு வாரியம் மேற்கொண்டு வருகிறது.
2013 நவம்பர் 25 முதல் டிசம்பர் 6-ஆம் தேதி வரை
விண்ணப்பதாரர்களின் சான்றிதழ் சரிபார்ப்புகள் மேற்கொள்ளப்பட்டன. பின்னர்,
2014 ஜூலை 1 முதல் 7-ஆம் தேதி வரை சிறப்பு முகாம் நடத்தப்பட்டு,
3-4-2009-க்கு முன்னர் எம்.ஃபில். முடித்த விண்ணப்பதாரர்களின் பணி அனுபவம்
உள்ளிட்ட விவரங்கள் பெறப்பட்டு, கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டன.
இந்த விவரங்களின் அடிப்படையில் இறுதித் தகுதிப்
பட்டியல் வெளியிடப்பட்டது. இந்தத் தகுதிப் பட்டியலிலிருந்து ஒரு
பணியிடத்துக்கு 5 பேர் என்ற விகிதத்தில் விண்ணப்பதாரர்கள் தேர்வு
செய்யப்பட்டு நேர்முகத் தேர்வுக்கு இப்போது அழைக்கப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள செய்தி:
உதவி பேராசிரியர் நேரடி நியமனத்துக்கான நேர்முகத்
தேர்வு வருகிற 25-ஆம் தேதி நடத்தப்பட உள்ளது. அன்றைய தினம் வணிகவியல்
(கணினி அப்ளிகேஷன்), வணிகவியல் (ஐபி), கணினி தொழில்நுட்பம் உள்ளிட்ட மூன்று
பாடப் பிரிவுகளுக்கான உதவி பேராசிரியர் நியமனத்துக்கான நேர்முகத் தேர்வு
நடத்தப்படும்.
இதற்கான அழைப்புக் கடிதங்கள் தகுதியான
விண்ணப்பதாரர்களுக்கு தபால் மூலம் அனுப்பப்பட்டுள்ளது. அழைப்புக் கடிதம்
கிடைக்கப் பெறாதவர்கள், ஆசிரியர் தேர்வு வாரிய இணைதளத்திலிருந்து
பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
சான்றிதழ் சரிபார்ப்புக்கான மதிப்பெண்ணில் வேறுபாடு
இருப்பது தெரியவந்தால், நேர்முகத் தேர்வு தேதிக்கு மூன்று நாள்களுக்கு
முன்னர் விண்ணப்பதாரர்கள் தெரியப்படுத்த வேண்டும் எனத்
தெரிவிக்கப்பட்டுள்ளது.








