பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுப் பணியில் ஈடுபட உள்ள 2,720 ஆசிரியர்களுக்கு பணி நியமன ஆணையை சி.இ.ஓ., வழங்கினார்.பத்தாம்
வகுப்பு பொதுத் தேர்வு வரும் 19ம் தேதி துவங்குகிறது. கடலூர்
மாவட்டத்தில், கடலூர் மற்றும் விருத்தாசலம் கல்வி மாவட்டங்களில் உள்ள 410
உயர் நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் படிக்கும் 42 ஆயிரத்து 227 மாணவ,
மாணவிகள் பத்தாம் வகுப்பு தேர்வு எழுத உள்ளனர்.இதற்காக கடலூர் கல்வி
மாவட்டத்தைச் சேர்ந்த 29 ஆயிரத்து 415 மாணவ, மாணவியர்களுக்காக 69
மையங்களும், விருத்தாசலம் கல்வி மாவட்டத்தைச் சேர்ந்த 12 ஆயிரத்து 812
மாணவ, மாணவியர்களுக்கு 41 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.
தேர்வுப்பணியில் 110 தலைமை கண்காணிப்பாளர்களும், 110 பேர் துறை
அலுவலர்களாகவும், 2,200 பேர் அறை கண்காணிப்பாளர்களாகவும், 300 பேர்
பறக்கும் படை பணியிலும் ஈடுபடுத்தப்பட உள்ளனர். இவர்களுக்கு நேற்று
கடலூரில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் பணி நியமன ஆணைகளை மாவட்ட முதன்மைக்
கல்வி அலுவலர் பாலமுரளி வழங்கினார். பின்னர் தேர்வு பணியை திறம்பட
மேற்கொள்ள ஆலோசனை வழங்கினார்.
கூட்டத்தில், மாவட்டக் கல்வி
அலுவலர்கள் கடலூர் செல்வராஜ், விருத்தாசலம் தமிழ்ச்செல்வி, மெட்ரிக் பள்ளி
ஆய்வாளர் பிச்சையப்பன், சி.இ.ஓ.,வின் நேர்முக உதவியார் ராஜேந்திரன்
உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.