தமிழக சட்டசபையில் நிதிநிலை அறிக்கை (பட்ஜெட்) மீதான விவாதம் 31-ந் தேதி
வரை நான்கு நாட்கள் நடக்கும் என்று சபாநாயகர் ப.தனபால் கூறினார்.
அலுவல் ஆய்வு குழு
தமிழக சட்டசபையில் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்து அதை வாசித்தார். அதைத் தொடர்ந்து சபாநாயகர் ப.தனபால் தலைமையில் அலுவல் ஆய்வு குழு கூட்டம் நடைபெற்றது.
இநத கூட்டத்தில் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அவை முன்னவர் அமைச்சர்
நத்தம் விஸ்வநாதன், அரசு கொறடா மனோகரன், சக்கரபாணி (தி.மு.க. கொறடா),
சவுந்தரராஜன் (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு), ஆறுமுகம் (இந்திய கம்யூனிஸ்டு),
கோபிநாத் (காங்கிரஸ்), ஜவாருல்லா (மனிதநேய மக்கள் கட்சி), டாக்டர்
கிருஷ்ணசாமி (புதிய தமிழகம்) கலந்து கொண்டனர். சுமார் 30 நிமிடங்கள்
கூட்டம் நீடித்தது.அலுவல் ஆய்வு குழு
தமிழக சட்டசபையில் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்து அதை வாசித்தார். அதைத் தொடர்ந்து சபாநாயகர் ப.தனபால் தலைமையில் அலுவல் ஆய்வு குழு கூட்டம் நடைபெற்றது.
பொது விவாதம்
அதைத் தொடர்ந்து நிருபர்களுக்கு, சபாநாயகர் ப.தனபால் அளித்த பேட்டி வருமாறு:-
26-ந் தேதி (இன்று) சட்டசபை கூடாது. 27-ந் தேதி (நாளை) நடக்கும் கூட்டத்தில் இரங்கல் குறிப்புகள் வாசிக்கப்படும். அதைத் தொடர்ந்து பட்ஜெட் மீது எம்.எல்.ஏ.க்களின் பொது விவாதம் தொடங்கும்.
முன்பண மானிய கோரிக்கை
28-ந் தேதி 2015-16-ம் ஆண்டுக்கான முன்பண மானிய கோரிக்கைகள் அவையில் வைக்கப்படும். 2014-15-ம் ஆண்டுக்கான இறுதி துணை பட்ஜெட் அறிக்கை அளிக்கப்படும். அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ள துணை மானிய கோரிக்கைகள் விவாதமின்றி வாக்கெடுப்புக்கு விடப்படும்.
அந்த துணை மானிய கோரிக்கைகள் குறித்த நிதி ஒதுக்கத்துக்கான சட்ட முன்வடிவு அறிமுகம் செய்யப்படும். அந்த சட்ட முன்வடிவு ஆய்வு செய்யப்பட்டு விவாதமின்றி நிறைவேற்றப்படும்.
விவாதமின்றி வாக்கெடுப்பு
2015-16-ம் ஆண்டு செலவுக்கான முன்பண மானிய கோரிக்கைகள் மீது விவாதம் நடக்காமல் வாக்கெடுப்பு நடத்தப்படும். இந்த முன்பண மானிய கோரிக்கைகள் குறித்த நிதி ஒதுக்க சட்ட முன்வடிவு அறிமுகம் செய்யப்பட்டு, ஆய்வுக்கு விடப்படும். பின்னர் விவாதமின்றி நிறைவேற்றப்படும். அதன் பின்னர் 28-ந் தேதி பட்ஜெட் மீதான பொது விவாதம் தொடர்ந்து நடக்கும்.
31-ந் தேதி முடியும்
29-ந் தேதி ஞாயிற்றுக்கிழமை என்பதால் அன்று விடுமுறை நாளாகும். 30, 31-ந் தேதிகளில் பட்ஜெட் மீதான எம்.எல்.ஏ.க்கள் பொது விவாதம் தொடரும். 31-ந் தேதி எம்.எல்.ஏ.க்களின் விவாதம் முடிந்ததும் முதல்-அமைச்சர் பதிலளித்து பேசுவார். அதோடு சட்டசபை நிகழ்ச்சிகள் முடிவுக்கு வரும்.
27-ந் தேதி முதல் 31-ந் தேதி வரை நான்கு நாட்கள் நடக்கும் சட்டசபை கூட்டத்தொடரில் கேள்வி நேரம் உண்டு. 31-ந் தேதி முதல்-அமைச்சரின் பதிலுரையோடு சட்டசபை நிகழ்ச்சிகள் முடிவுவடைவதை தொடர்ந்து, அடுத்ததாக நடத்தப்பட வேண்டிய நிகழ்ச்சிகள் மற்றும் அவை நடத்தப்பட வேண்டிய நாட்கள் குறித்து, மீண்டும் அலுவல் ஆய்வு குழு கூடி முடிவு செய்யும்.
இவ்வாறு அவர் கூறினார்.
தே.மு.தி.க.வுக்கு அனுமதி?
பட்ஜெட் மீதான பொதுவிவாதத்துக்கு சம்பந்தப்பட்ட அமைச்சர் பதிலளித்ததும் தொடர்ந்து ஒவ்வொரு துறைக்குமான மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் தொடர்ச்சியாக நடைபெறுமே? இந்த முறை ஏன் அதை தொடர்ச்சியாக நடத்தவில்லை? என்று நிருபர்கள் கேட்டனர். அதற்கு சபாநாயகர் பதனபால், “எல்லாவற்றையும் அலுவல் ஆய்வு குழுதான் முடிவு செய்யும்” என்று பதிலளித்தார்.
தே.மு.தி.க. எம்.எல்.ஏ.க்களை அவையில் கலந்து கொள்ள அனுமதிக்க வேண்டும் என்று அலுவல் ஆய்வு குழு கூட்டத்தில் சில கட்சிகள் கேட்டுக்கொண்டுள்ளதே? என்று கேட்டதற்கு, “அலுவல் ஆய்வு குழு கூட்டத்தில் அதுபற்றி விவாதிக்க முடியாது” என்று சபாநாயகர் கூறினார்.
சட்டசபை நிகழ்ச்சியில் கலந்துகொள்ள முடியாத நிலையில் தே.மு.தி.க. எம்.எல்.ஏ.க்கள் ஆர்ப்பாட்டம் நடத்தி, கூட்டத்தொடரில் கலந்துகொள்ள அனுமதிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளனரே என்று கேட்டதற்கு, “பார்க்கலாம்” என்று சபாநாயகர் ப.தனபால் பதிலளித்தார்.
வெளிநடப்பு
அலுவல் ஆய்வு குழு கூட்டத்தில் இருந்து தி.மு.க.வும், புதிய தமிழகம் கட்சியும் வெளிநடப்பு செய்தன. இதுபற்றி தி.மு.க. கொறடா சக்கரபாணி கூறும்போது, “பட்ஜெட் விவாதத்தை மேலும் 2 நாட்கள் நடத்த வேண்டும் என்றும், மானிய கோரிக்கை மீதான விவாதத்தை தொடர்ச்சியாக நடத்த வேண்டும் என்றும் கேட்டோம். தே.மு.தி.க. எம்.எல்.ஏ.க்களை அவைக்குள் வர அனுமதிக்கும்படி கூறினோம். எந்த கோரிக்கையையும் ஏற்காததால் வெளிநடப்பு செய்கிறோம்” என்று குறிப்பிட்டார்.