மேலும் அந்த மாணவர்கள் மீண்டும் தேர்வு எழுத நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தேர்வு எழுத அனுமதி மறுப்பு
தமிழகத்தில் கடந்த 19-ந்தேதி எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு தமிழ் முதல் தாளுடன் தொடங்கியது. நாகை மாவட்டம் பூம்புகார் அருகே கீழபெரும்பள்ளம் கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த 6 மாணவ-மாணவிகளுக்கு வருகை பதிவு குறைவாக உள்ளது என்று காரணம் கூறி தமிழ் முதல் தாள் தேர்வு எழுத அனுமதி மறுக்கப்பட்டது.
இதுகுறித்து தகவல் அறிந்த நாகை மாவட்ட கல்வி அலுவலர் ரெங்கராஜன், பள்ளிக்கு நேரில் சென்று பள்ளி நிர்வாகத்திடமும், மாணவ-மாணவிகள் மற்றும் பெற்றோர்களிடமும் பேச்சுவார்த்தை நடத்தினார். பின்னர் மாவட்ட கல்வி அலுவலர், உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.
பணி இடைநீக்கம்
இந்த நிலையில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு எழுத 6 மாணவ-மாணவிகளுக்கு அனுமதி மறுத்த தலைமை ஆசிரியை பட்டுஷீலா அற்புதராணி மற்றும் மாணவர்களின் வகுப்பு ஆசிரியர் ஆனந்தன், அறிவியல் செய்முறை ஆசிரியர் பரமநாதன் ஆகியோரை பணி இடைநீக்கம் செய்து மாவட்ட கல்வி அலுவலர் ரெங்கராஜன் நேற்று உத்தரவிட்டார்.
பாதிக்கப்பட்ட 6 மாணவ- மாணவிகளும் நாளை (இன்று) நடைபெறும் தமிழ் 2-ம் தாள் தேர்வையும், இதர தேர்வுகளையும் எழுத அனுமதிக்கப்படுவதாக தெரிவித்தார்.








