செல்லப் பிராணிகள்
பிற உயிர்களிடத்திலும் அன்பு செலுத்தும் விதமாக நாய், பூனை போன்ற செல்லப் பிராணிகளை குடும்பத்தில் ஒருவரை போல மக்கள் வீடுகளில் வளர்த்து வந்தனர். ஆனால் பாசமாக வளர்த்து வரும் பிராணிகள் பிடிக்காமல் போனாலோ, அதன் தோற்றத்தில் குறைபாடு ஏற்பட்டாலோ, நோய் தாக்குதலுக்கு ஆளாகும்போதோ அந்த பிராணிகள் மீது வெறுப்பு அடைந்துவிடுகிறார்கள்.
பகட்டு கவுரவத்திற்காக
இதுகுறித்து புளூகிராஸ் சொசைட்டி அமைப்பின் பொது மேலாளர் டான் வில்லியம் ‘தினத்தந்தி’ நிருபரிடம் கூறியதாவது:-
பிராணிகளும் நம்மைப் போல உயிரினம் தான். நமக்கு இருப்பது போன்றே அன்பு, பாசம், விசுவாசம், நன்றி உள்ளிட்ட எல்லா குணநலன்களும் பிராணிகளுக்கும் இருக்கின்றன. ஆனால் சமீபகாலமாக மக்களிடத்தில் இருந்துவந்த விலங்குகளின் மீதான பாசம் குறைந்து வருகிறது என்று சொல்லும் அளவுக்கு நிலைமை மோசமடைந்து வருகிறது.
முன்பு விலங்குகளின் மீதான பாசத்தில் நாய், பூனை போன்ற பிராணிகளை வீட்டில் வளர்த்தார்கள். ஆனால் தற்போது பகட்டு கவுரவத்திற்காக பிராணிகளை வளர்ப்பதை வாடிக்கையாக கொண்டு இருக்கிறார்கள். பிறரை பார்த்தோ அல்லது பிறர் பார்க்க வேண்டும் என்பதற்காகவோ வெளிநாட்டு நாய்கள் மற்றும் உயர்ரக நாய்களை வாங்கி வளர்க்கிறார்கள்.
124 பிராணிகள் மீட்பு
ஆனால் இந்த வகை நாய்கள் சில நேரங்களில் எஜமானர்களின் ஆணைகளுக்கு கீழ்படியாதபோது அவைகளின் மீது வெறுப்பு அடைகிறார்கள். சென்னை போன்ற நகரங்களின் சீதோஷ்ணநிலை வெளிநாட்டு நாய்களை பாதிக்கும். இதனால் முடி உதிர்வு, தோல் நோய் போன்ற சில பாதிப்புகளால் நாய் அவலட்சணமாக மாறிவிடும். ஒரு சிலர் தான் அந்த நிலையிலும் அவற்றுக்கு உரிய சிகிச்சை அளித்து பாதுகாக்கிறார்கள்.
ஆனால் பெரும்பாலானோர் இதுபோன்று பாதிக்கப்பட்ட நாய்களை வெறுத்து தெருவில் அனாதையாக விட்டுவிடுகிறார்கள். இன்னும் சிலர் தங்கள் நாய்களை இரவிலோ அல்லது அதிகாலையிலோ எங்கள் நிறுவன வாயிற்கதவில் கட்டிப்போட்டு சென்று விடுகின்றனர். கடந்த 2லு மாதங்களில் மட்டும் சென்னையில் பொதுமக்களால் அனாதையாக விடப்பட்ட 124 செல்லப் பிராணிகளை மீட்டு உள்ளோம். அவற்றுக்கு நாங்கள் சிகிச்சை அளித்து பாதுகாத்து வருகிறோம்.
நாய்களுக்கும் மன உளைச்சல்
இந்த நாய்களை மீட்டு சிகிச்சை அளிப்பதால் ஏற்படும் பிரச்சினைகள் பலருக்கும் தெரிவதில்லை? நாய், பூனை போன்ற செல்லப் பிராணிகள் எப்போதுமே பாசத்துக்காக ஏங்குபவை. தனது எஜமானரை பார்க்க வேண்டும், பழைய பாசத்தை மீண்டும் பெறவேண்டும், பழைய இடத்துக்கு மீண்டும் செல்ல வேண்டும் என்ற மனஉளைச்சல் அவைகளுக்கும் ஏற்படும்.
அந்த ஏக்கத்தில் நாய்களும் தங்கள் வாழ்க்கையை வெறுத்துவிடும். எந்த சிகிச்சை அளித்தாலும், இதுபோன்ற எண்ணத்தில் உள்ள நாய்களின் மனநிலையை மாற்றுவது மிக கடினம். சாப்பிடாமல் பட்டினி கிடப்பது, சுவரில் மோதிக்கொள்வது, இடைவிடாமல் குரைப்பது உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்டு சில நாட்களில் இறந்துவிடும்.
1,259 பிராணிகள் மீட்பு
இந்த வருட தொடக்கத்தில் இருந்து சாலை விபத்து மற்றும் நோய் தாக்குதலுக்கு ஆளான நாய், பூனை, கன்றுக்குட்டி, மாடு உள்ளிட்ட 1,259 பிராணிகளை நாங்கள் மீட்டுள்ளோம். இதில் குதிரை, ஆந்தை, கிளி, பாம்பு, குரங்கு, நீர்ப்பறவைகள் போன்ற உயிரினங்களும் அடங்கும். விபத்தில் சிக்கி உயிருக்கு போராடிய 893 நாய்கள் 2லு மாதங்களில் மீட்கப்பட்டுள்ளது.
மாநகராட்சி கேட்டுக்கொண்டதற்கு இணங்க இந்த வருடத்தில் 1,956 நாய்கள் மற்றும் 52 பூனைகளுக்கு கருத்தடை ஆபரேஷன் செய்து உள்ளோம். ஆக இந்த வருடத்தில் மட்டும் மொத்தம் 1,259 பிராணிகளை மீட்டு சிகிச்சை அளித்துள்ளோம். இந்த பிராணிகள் உரிய பராமரிப்புடன் பாதுகாக்கப்பட்டு வருகிறது.
இலவசமாக தத்து எடுக்கலாம்
மாதம் ஒருமுறை பிராணிகள் தத்து கொடுக்கும் நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. இந்த நாளில் பிராணிகளின் மீது உண்மையான பாசம் கொண்டவர்கள் கலந்துகொண்டு, தங்களுக்கு பிடித்தமான பிராணிகளை இலவசமாக எடுத்துச் செல்லலாம். இந்த பிராணிகளை உண்மையிலேயே நல்ல எண்ணத்துடன் வளர்க்கிறார்களா? என்று எங்கள் உறுப்பினர்கள் மூலம் கண்காணிப்போம். தத்தெடுப்பு நிகழ்ச்சி எப்போது நடக்கும் என்ற விவரத்தை ‘ஆன்-லைன்’ அல்லது ‘பேஸ்-புக்’ மூலமாக வெளிப்படுத்துவோம்.
தினமும் எங்களுக்கு பொதுமக்களிடமிருந்து சராசரியாக 150 தொலைபேசி அழைப்புகள் வருகின்றன. ஆனால் எங்களது சேவைகளில் தாமதம் ஏற்படுவதாக மக்கள் கூறுவதையும் நாங்கள் உணர்கிறோம். எங்களிடம் உள்ள வாகன வசதிகளும், ஆட்களின் எண்ணிக்கையும் குறைவு. எங்கள் அமைப்புக்கு அரசின் உதவி கிடையாது.
ஒருவேளை உதவிகள் கிடைத்தால் இன்னும் சிறப்பாக பணிபுரிய முடியும், இன்னும் அதிகமான பிராணிகளை காப்பாற்ற முடியும். எங்களுக்கு வரும் அழைப்புகளில் பொதுமக்களுக்கு மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தும் என்று கருதுபவைகளுக்கு மட்டுமே முன்னுரிமை கொடுக்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.








