"ஒன்றுபட்ட இந்தியாவை உணர்த்தும் காவியம் மகாபாரதம்' என்றார் "தினமணி' ஆசிரியர் கே. வைத்தியநாதன்.தஞ்சாவூர் அ. வீரையா வாண்டையார் நினைவு ஸ்ரீ புஷ்பம்
கல்லூரி தமிழ் உயராய்வு மையம், தமிழ்ப் பல்கலைக்கழக இலக்கியத் துறை
சார்பில் வியாழக்கிழமை நடைபெற்ற "தேசிய ஒருமைப்பாட்டு நோக்கில் மகாபாரதம்'
என்ற இரு நாள் தேசியக் கருத்தரங்கத் தொடக்க விழாவில் ஆய்வுக் கோவையை
வெளியிட்டு அவர் மேலும் பேசியது:
"இந்தத் தலைப்பு தமிழகம் தொலைத்துவிட்ட இரு பெரும் மாண்புகளான தேசியம், ஆன்மிகத்தை மீட்டெடுக்கும் வகையில் உள்ளது.
உலகில் இந்நாள் வரை எழுதப்பட்ட மிகப்பெரிய சரித்திரம்
மகாபாரதமே. ஒரு லட்சம் பாடல்களை உடைய இக்காவியத்தில் 18 லட்சம் சொற்கள்
உள்ளன. இப்படியொரு இலக்கியம் உலகில் இதுவரை எழுதப்படவில்லை.
கிரேக்க இதிகாசங்களான ஹோமரின் இல்லியட், ஒடிஸ்ஸி
இரண்டையும் சேர்த்ததைவிடப் பத்து மடங்கு நீளம் கொண்ட காவியம் மகாபாரதம்.
ராமாயணத்தைவிட நான்கு மடங்கு பெரிது. 400-க்கும் அதிகமான கதாபாத்திரங்களைக்
கொண்ட மகாபாரதத்தில் உள்ள கிளைக் கதைகள்தான் நள சரித்திரம். சாகுந்தலம்,
ஹரிச்சந்திரன் வரலாறு, யயாதி, பரசுராமன் கதைகள் ஆகியவை. ராமாயணமேகூட
மகாபாரதத்தில் வன பர்வத்தில் பாண்டவர்களைச் சந்திக்க வரும் முனிவர்
ஒருவரால் சொல்லப்படும் கதைதான்.
பல கதைகள், கிளைக் கதைகளை உள்ளடக்கிய மகாபாரதம்
எழுதப்பட அடிப்படைக் காரணம் கதை சொல்ல வேண்டும் என்பதற்கோ, கிருஷ்ணனின்
பெருமையை எடுத்துரைக்கவோ அல்ல.
மிகப் பெரிய தத்துவத்தை எழுதிப் பதிவு செய்து வைக்க
அந்தக் காலத்தில் ஏடுகளோ, புத்தகங்களோ இல்லை. வாய்மொழியாகத்தான் தலைமுறை
தலைமுறையாக சொல்லிக்கொண்டே போனார்கள். அந்தச் சூழ்நிலையில் தத்துவத்தையும்,
நீதியையும் மட்டுமே கூறினால் எடுபடாது.
இதை அடுத்தடுத்த தலைமுறைகளுக்குக் கொண்டு செல்வதற்காக
அப்போது நம் மூதாதையர்கள் கண்டுபிடித்த முறை மனனம் செய்வது. மனனம்
மறந்துவிடாமல் இருக்க அற்புதமான கதையாக உருவாக்கப்பட்டதுதான் மகாபாரதம்.
ஆன்மாவின் கடைத்தேற்றத்திற்காக பகவத் கீதை,
அரசர்களுக்கு ராஜநீதியை உணர்த்துவதற்காக விதுர நீதி, மானிடர்களுக்கு
தர்மத்தை எடுத்துரைப்பதற்காக தர்ம உபதேசம் ஆகியவற்றை மக்கள் மனதில்
நிலைக்கச் செய்வதற்காக உருவாக்கப்பட்ட இதிகாசம்தான் மகாபாரதம். இதுதான்
மகாபாரதத்தின் ஆழ்ந்த கருத்து. இப்படிப்பட்ட மிகப் பெரிய காவியம் தேசிய
ஒருமைப்பாட்டுக்கு வழிவகுத்திருப்பது வியப்பில் ஆழ்த்துகிறது.
தேசிய ஒருமைப்பாட்டுக்கு அடையாளமாகத் திகழ்ந்து,
தேசியத்தின் அடிப்படை உணர்வுகளையும் வெளிப்படுத்தும் காவியம் இது. அன்பு,
பாசம், உணர்ச்சி இவற்றையெல்லாம் இந்தியாவில்தான் பார்க்க முடியும். உலகில்
வேறு எந்த நாட்டிலும் பார்க்க முடியாது. மகாபாரதத்தில் காணப்படும்
"யட்சப்பிரச்னம்' பகுதி உணர்வின் உன்னதத்தை உணர்த்துகிறது.
யட்சப்பிரச்னத்தில் வரும் "யட்சனின் கேள்விகளும்,
தருமனின் பதில்களும்' என்ற பகுதியை மாணவர்கள் அவசியம் படிக்க வேண்டும்.
இதில் வாழ்க்கையின் பொருளும் வாழ்வின் சூட்சுமமும்
தெளிவுப்படுத்தப்படுகிறது.
மகாபாரதத்தில் உள்ள ஒவ்வொரு கருத்தையும் பார்த்தால், அது காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை இணைக்கும் விதமாக இருக்கிறது.
நமது தேசியத்தின் ஒருமைப்பாடு அதுதான். ஒன்றுபட்ட
இந்தியாவை உணர்த்தும் காவியமாக அது திகழ்கிறது. மகாபாரதப் போரில் மீன்
கொடியுடன் பாண்டிய மன்னன் கலந்துகொண்ட செய்தி காணக் கிடைக்கிறது.
மகாபாரதத்தில் வரும் காந்தாரம் என்ற பகுதியே இன்றைய ஆப்கானிஸ்தான்.
இதன் மூலம் இந்தியாவின் எல்லையை உணர முடிகிறது.
தமிழகத்தின் எல்லையை தொல்காப்பியம் காட்டுவதுபோல இந்தியாவின் எல்லையை
மகாபாரதம் வரையறுக்கிறது.
அன்றைய பாரதம் எந்தெந்தப் பகுதிகளை உள்ளடக்கியிருந்தது என்பதற்கு நமக்கு காணக் கிடைக்கும் ஒரே சான்று வியாசரின் மகாபாரதம்தான்.
ஒவ்வொரு இந்தியனின் உணர்வையும் பிரதிபலிக்கும் காவியம் மகாபாரதம்.
இந்தியாவிற்கு பாரதம் என்கிற பெயரே பாண்டவ,
கெüரவர்களின் மூதாதையரான பரதன் என்கிற மன்னனிலிருந்துதான்
கிடைத்திருக்கிறது எனும்போதே இந்திய தேசியம் என்பதன் அடிப்படையே மகாபாரதம்
என்பதாகிறது.
இந்தியாவின் பண்பு, கலாசாரம், உணர்வு ரீதியாக அன்றும், இன்றும், என்றும் ஒன்றாகத்தான் இருக்கிறது என்றார் வைத்தியநாதன்.
வாழ்க்கைக்கான உதாரணம் மகாபாரதம்: ஸ்ரீ புஷ்பம் தன்னாட்சி கல்லூரித் தாளாளர் பேச்சு
வாழ்க்கையை எப்படி வாழ வேண்டும் என்பதற்கான உதாரணம்
மகாபாரதம் என்றார் அ. வீரையா வாண்டையார் நினைவு ஸ்ரீ புஷ்பம் தன்னாட்சிக்
கல்லூரியின் செயலரும், தாளாளருமான கி. துளசி ஐயா வாண்டையார்.
"தேசிய ஒருமைப்பாட்டு நோக்கில் மகாபாரதம்' என்ற தலைப்பிலான தேசிய கருத்தரங்கம் வியாழக்கிழமை கல்லூரிக் கூட்டரங்கில் தொடங்கியது.
அவர் பேசியது:
மகாபாரதத்துக்கு ஜெயம் என்றொரு பெயரும் உண்டு. நாம்
எழுதுவதும், சொல்வதும் ஒழுங்குபட இருக்க, அது நெஞ்சில் நிறுத்தும் வகையில்
இருக்க வேண்டும். மகாபாரதத்தில் பீஷ்மர் போல ஐம்புலன்களையும் அடக்க
வேண்டும். அதற்கு ஒழுக்கம் அவசியம். துரியோதனன் மிகவும் நல்லவன்,
யோக்கியன். ஆனால் அவனுடைய கோபம், வேகம், பாண்டவர்களை ஒழித்துக்கட்ட செய்த
காரியங்கள் அழிவுக்கு காரணமாயின.
கிருஷ்ணரிடம் அர்ஜுனனும், துரியோதனும் உதவிகேட்கச்
சென்றபோது, முதலில் அர்ஜுனனை கிருஷ்ணர் பார்த்து "என்ன விஷயம்' என்று
கேட்டபோது, "அண்ணன் துரியோதனன் வந்துள்ளார்' என்று மரியாதையாக கிருஷ்ணரிடம்
கூறுகிறார் அர்ஜுனன். அதுதான் மனிதநேயம். மகாபாரதத்திலிருந்து
அப்படிப்பட்ட விஷயங்களைத்தான் நாம் கற்றுக் கொள்ள வேண்டும். மரியாதை,
ஒழுக்கம், செயல், நடத்தை ஆகியவற்றை மகாபாரதம் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
வாழ்க்கையை நாம் எப்படி வாழ வேண்டும் என்பதற்கு உதாரணமாக மகாபாரதம் உள்ளது.
தூய மனத்தோடு நன்மையை விரும்புவோர் உயர்வர். நல்லது
செய்தால் நன்மை தேடி வரும். மனிதர்களுக்கு அவர்களுடைய எண்ணமே நண்பன்,
தீமையே எதிரி. ஆசிரியர்கள் அனைவரும் மகாபாரதம் படிக்க வேண்டும் என்றார் கி.
துளசி ஐயா வாண்டையார்.
கல்லூரி முதல்வர் உ. பாலசுப்பிரமணியன் பேசியது:
உலகில் எந்த இதிகாசத்திலும் இல்லாத வகையில் 1.20 லட்சம்
சுலோகங்கள் மகாபாரதத்தில் உள்ளன. வாழ்க்கையின் அனைத்து அம்சங்களையும்
உள்ளடக்கிய உன்னத அறிவுக்களஞ்சியம் இது. வாழ்வியல் செய்திகளை ராமாயணமும்,
மகாபாரதமும் கொண்டுள்ளன. ஆகையால் அவற்றை அனைவரும் படிக்க வேண்டும் என்றார்
அவர்.
கல்லூரியின் கலைப்புலத் தலைவர் ந. ராஜேந்திரன்
பேசுகையில், சாமானியர்களும், மாணவர்களும் தெரிந்து கொள்ள
வேண்டுமென்பதற்காக, 20 ஆண்டுகள் தொடர்ந்து தினந்தோறும் இரவு நேரங்களில்
மகாபாரதம், ராமாயணம், பெரியபுராணம், திருக்குறள் ஆகியவற்றை துளசி ஐயா
வாண்டையார் எளிமையாக, அனைவருக்கும் புரியும் வகையில் சொல்லிக் கொடுத்து
வந்தார் என்றார்.
தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழக இலக்கியத் துறைத் தலைவர்
க. திலகவதி, ஸ்ரீ புஷ்பம் கல்லூரியின் தமிழ் உயராய்வு மைய
ஒருங்கிணைப்பாளர் கோ.வெ. நடராஜன், தமிழ்த்துறை இணைப் பேராசிரியர் வீ.
சிவபாதம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.








