நாடு முழுவதும் செயல்பட்டு வரும் 16 ஐ.ஐ.டி-க்களில் போதுமான அளவில் பேராசிரியர்கள் இல்லாதபோது மீண்டும் மீண்டும் புதிய ஐ.ஐ.டி.க்களை ஆரம்பிப்பது அர்த்தமில்லாதது. எனவே மத்திய அரசு முதலில் ஆசிரியர் பற்றாக்குறையை போக்கிவிட்டு பிறகு அறிவிப்புகளை வெளியிடுவதே பயனளிக்கும். புதிய ஐ.ஐ.டி.க்களுக்கு தரமான ஆசிரியர்கள் கிடைப்பது கடினமானது என டெல்லி ஐ.ஐ.டியின் முன்னாள் இயக்குனர் கொத்தாரி அதிருப்தி தெரிவித்துள்ளார்.
கடந்த வாரம் மக்களவையில் கேள்வி நேரத்தின் போது இது சம்பந்தமாக கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அளிக்கப்பட்ட பதில் பின்வருமாறு:-
நாடு முழுவதுமுள்ள 16 ஐ.ஐ.டிக்களில் 6 மட்டுமே 10:1 என்ற ஆசிரியர்-மாணவர் விகிதாச்சார விதிமுறைகளை பூர்த்தி செய்துள்ளது. அவையனைத்தும் 2008-ம் ஆண்டு உருவாக்கப்பட்டவை. ஐதராபாத் மற்றும் ஜோத்பூர் ஐ.ஐ.டிக்கள் 16:1 மற்றும் 17:1 என்ற விகிதத்தில் உள்ளன. ஆனால், மீதமுள்ள 8 ஐ.ஐ.டிக்களும் 41 சதவீதம் அளவுக்கு கடுமையான ஆசிரியர் பற்றாக்குறையால் தவித்து வருகிறது. சராசரியாக, ஐ.ஐ.டி-களில் 32%, ஐ.ஐ.எம்.களில் 22%, என்.ஐ.டி.க்களில் 25 சதவீதம் அளவுக்கும் ஆசிரியர் பற்றாக்குறை உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
ஐ.ஐ.டி-களுக்கு தகுதியான ஆசிரியர்கள் கிடைப்பது சவாலாக இருக்கிறதா?
டெல்லி ஐ.ஐ.டியின் முன்னாள் இயக்குனர் கொத்தாரி...
கல்வியின் தரத்தை மேம்படுத்த கடுமையான விதிமுறைகள் இருப்பதும், பேராசிரியர்களுக்கு ஊக்கத்தொகைகள் வழங்கப்படாததாலும் பலர் ஐ.ஐ.டிக்களின் பெரிய பொசிஷன்களுக்கு விண்ணப்பிப்பதே இல்லை. ரிசர்ச் பேப்பர்களை சமர்ப்பிப்பது, புத்தகங்கள் எழுதுவது, பாடம் நடத்துவது உள்ளிட்டவை நல்ல பேராசிரியர்களின் தகுதிகளாகும். ஆனால், தற்போது ஐ.ஐ.டி-க்களிலும், என்.ஐ.டி-க்களிலும் கடுமையான விதிமுறைகள் இருப்பதால் பெரும்பாலான ஆசிரியர்கள் வேலையை மாற்றிக் கொள்கின்றனர். விதிமுறைகளுக்கு பயந்து புதிதாக வரும் ப்ரெஷ்ஷர்களும் விண்ணப்பிக்க தயங்குகின்றனர்.
சென்னை, ஐ.ஐ.டி.யின் முன்னாள் இயக்குனர் பாஸ்கர் ராமமூர்த்தி....
ஆண்டுதோறும் ஐ.ஐ.டி.க்கள் ஆசிரியர்களை தேர்வு செய்துகொண்டுதான் இருக்கிறது. ஒவ்வொரு ஐ.ஐ.டியிலும் சராசரியாக 30 புதிய ஆசிரியர்கள் ஆண்டுதோறும் தேர்வாகி கொண்டுதான் இருக்கிறார்கள். 10 ஆசிரியர்கள் ஓய்வு பெற்றால் புதிதாக 20 ஆசிரியர்களை தேர்வு செய்கின்றன. எனினும், ஆசிரியர் பற்றாக்குறை சரியாக இன்னும் 5 ஆண்டுகள் ஆகும்.
பெங்களூரு ஐ.ஐ.எம்.-ன் முன்னாள் இயக்குனர் ஜெ.பிலிப்...
ஐ.ஐ.எம்.-களிலும் பேராசிரியர்களுக்கு பற்றாக்குறையாகவே இருக்கிறது. எம்.பி.ஏ. படித்துவிட்டு வரும் மாணவர்களில் பெரும்பாலானோர் பி.எச்.டி-யை தேர்ந்தெடுப்பதில்லை. மாறாக, பிற வேலைகளுக்கு செல்வதையே விரும்புகின்றனர்.
இப்படி பல காரணங்கள் இருந்தாலும், சர்வதேச அளவில் முதல் 100 இடங்களுக்குள் இந்திய கல்வி நிறுவனங்கள் இடம்பெறாதது குறித்து அவ்வப்போது ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி பல்வேறு சந்தர்ப்பங்களில் கவலை தெரிவித்து வருவது நினைவுகூரத்தக்கது.








