பிளஸ் 2 கணித வினாத்தாள் வாட்ஸ்-அப்பில்
அனுப்பப்பட்ட விவகாரத்தில் அலுவலகப் பணியாளர்கள் 2 பேரை தாற்காலிக பணி
நீக்கம் செய்ததை ரத்து செய்ய வேண்டும் என்று பள்ளிக் கல்வித் துறை நிர்வாக
அலுவலர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி கிருஷ்ணகிரியில் செவ்வாய்க்கிழமை நடைபெற
உள்ள கண்டன ஆர்ப்பாட்டம் தொடர்பான விளக்கக் கூட்டம் சென்னை டி.பி.ஐ.
வளாகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் சங்கத்தின்
மாநிலத் தலைவர் எம்.வி.பால்ராஜ், பொதுச்செயலாளர் ஏ.எஸ். ராஜேந்திரபிரசாத்,
அமைப்புச் செயலாளர் சீனிவாசன் உள்ளிட்டோர் பேசியது:
அறைக் கண்காணிப்பாளரிடமிருந்து செல்லிடப்பேசியை வாங்கி வைப்பது
முதன்மைக் கண்காணிப்பாளரின் பொறுப்பாகும். ஆனால், அந்தக் குறிப்பிட்ட
தேர்வு மையத்தில் இந்த நடைமுறை கடைப்பிடிக்கப்படவில்லை. இந்த வேலையை
செய்யத் தவறிய முதன்மைக் கண்காணிப்பாளர், துறை அலுவலர் ஆகியோர் மீது
நடவடிக்கை எடுப்பதை விட்டுவிட்டு, தேர்வு மையத்தில் எந்தப் பொறுப்பும்
வகிக்காத அலுவலகப் பணியாளர்கள் தாற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களது தாற்காலிக பணி நீக்கத்தை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். இதை
வலியுறுத்தி கிருஷ்ணகிரி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலக வளாகத்தில்
ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது என்று அவர்கள் தெரிவித்தனர்.