சமையல் எரிவாயு நேரடி மானியத் திட்டத்தில் இணையாத வாடிக்கையாளர்களுக்கு ஜூன் 30-ஆம் தேதி வரை கூடுதல் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசின் சமையல் எரிவாயு நேரடி மானியத் திட்டம்,
தமிழகம் உள்பட நாடு முழுவதும் கடந்த ஜனவரி 1-ஆம் தேதி அமல்படுத்தப்பட்டது.
தமிழகத்தைப் பொருத்தவரை 1.53 கோடி சமையல் எரிவாயு இணைப்புகள் உள்ளன.
இவற்றில் தற்போதைய நிலவரப்படி, சுமார் 1.32 கோடிக்கும்
அதிகமான (86 சதவீதம்) வாடிக்கையாளர்கள் நேரடி மானியத் திட்டத்தில்
இணைந்துள்ளனர். அவர்கள் அனைவருக்கும் மானியத் தொகை வழங்கப்பட்டு வருகிறது.
இது தவிர, சுமார் 15 லட்சத்துக்கும் அதிகமானோர் இன்னும் இந்தத் திட்டத்தில் இணையவில்லை.
அவர்களையும் இந்தத் திட்டத்தில் இணைக்க தற்போது எரிவாயு
உருளை விநியோகஸ்தர்கள் மூலம் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன.
எனினும், சமையல் எரிவாயு நேரடி மானியத் திட்டத்தில் இணைவதற்கான கால அவகாசம்
மார்ச் 31-ஆம் தேதியுடன் முடிவடைந்தது.
கூடுதல் அவகாசம்
எனவே, இதுவரை இந்தத் திட்டத்தில் இணையாத
வாடிக்கையாளர்களும் இணையும் வகையில் ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் ஜூன் 30-ஆம்
தேதி வரை கூடுதல் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.
எனினும், ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் நேரடி மானியத்
திட்டத்தில் இணையாத வாடிக்கையாளர்களுக்கு மானியமில்லாத விலையிலேயே எரிவாயு
உருளைகள் வழங்கப்படும்.
மானியம் எப்போது கிடைக்கும்?
ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் நேரடி மானியத் திட்டத்தில் சேர
விண்ணப்பிக்கும் வாடிக்கையாளர்களுக்கு, அவர்கள் இந்தத் திட்டத்தில் இணைந்த
பிறகு மானியத் தொகை வழங்கப்படும்.
நேரடி மானியத் திட்டத்தில் சேரும் வரை, இத்தகைய
வாடிக்கையாளர்களின் மானியத் தொகை எண்ணெய் நிறுவனங்களின் கணக்கில் இருப்பு
வைக்கப்பட்டு வழங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.








