குரூப் 4 தேர்வு முடிவுகள், அடுத்த
மாத இறுதியில் வெளியிடப்படும் என்று தமிழ்நாடு அரசுப் பணியாளர்
தேர்வாணையத்தின் (டி.என்.பி.எஸ்.சி.) தலைவர் பாலசுப்பிரமணியம்
தெரிவித்தார்.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் உதவி
வேளாண்மை அதிகாரி பணியிடத்தில் காலியாக உள்ள 417 பணியிடங்களை
நிரப்புவதற்கான அறிவிப்பு கடந்த ஜனவரி 30 ஆம் தேதி வெளியிடப்பட்டது.
தேர்வுக்கு விண்ணப்பிக்க பிப்ரவரி 27 ஆம் தேதி கடைசி நாள் என்று
அறிவிக்கப்பட்டது.
மொத்தம் 4 ஆயிரத்து 378 பேர் தேர்வுக்கு விண்ணப்பித்து
இருந்தனர். இவர்களுக்கான எழுத்துத் தேர்வு சென்னை, மதுரை, திருச்சி, கோவை,
சேலம், திருநெல்வேலி ஆகிய 6 இடங்களில் சனிக்கிழமை நடைபெற்றது.
சென்னையில் ராயபுரம், வண்ணாரப்பேட்டை ஆகிய 2 இடங்களில்
தேர்வு நடந்தது. ராயபுரம் பழனிச்சாமி மேல்நிலைப்பள்ளியில் நடந்த தேர்வை
டி.என்.பி.எஸ்.சி. தலைவர் பாலசுப்பிரமணியம் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசியது:
சனிக்கிழமை காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை முதல்
தாள் தேர்வும், பிற்பகல் 2.30 மணி முதல் மாலை 4.30 மணி வரை இரண்டாம் தாள்
தேர்வும் நடைபெற்றது.
தேர்வு நடந்த மையங்களுக்கு வெளியே பலத்த போலீஸ்
பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. தேர்வு முடிவுகளை 3 மாதத்தில் வெளியிட
நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், குரூப் 4 தேர்வுக்கான முடிவுகள் அடுத்த
மாதம் இறுதியில் வெளியிடப்படும் என்று தெரிவித்தார்.








