இந்த நூற்றாண்டில் இந்திய இளைஞர்களே உலகின் முன்னோடிகளாக விளங்குவார்கள் என தமிழக ஆளுநர் கே.ரோசய்யா தெரிவித்தார்.
சென்னையில், திறமையான இந்தியாவிற்கு தொழில் பயிற்சி, உயர்கல்வியின் பங்களிப்பு குறித்து தேசியக் கருத்தரங்கு புதன்கிழமை நடைபெற்றது.
இந்தக் கருத்தரங்கை இந்திய தொழிலாளர்,வேலைவாய்ப்பு
அமைச்சகம், தேசிய திறன் மேம்பாட்டு நிறுவனம், தமிழக அரசு, அசோசாம் நிறுவனம்
உள்ளிட்ட நிறுவனங்கள் சார்பில் நடத்தப்பட்டது. இதில், உயர்கல்வி,
தொழில்பயிற்சி நிறுவனங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டு இந்திய
வளர்ச்சியில் இளைஞர்களின் பொறுப்பு குறித்து பேசினர்.
கருத்தரங்கில் கலந்து கொண்ட தமிழக ஆளுநர் ரோசய்யா பேசியது:
கலாசாரம், பாரம்பரிய மிக்க இந்தியாவுக்கு ஒளிமயமான
எதிர்காலம் அமைய உள்ளது. இந்திய மக்கள்தொகையில் 50 சதவீதம் பேர் 25
வயதிற்குள்ளாகவும், 65 சதவீதத்தினர் 35 வயதிற்குள்ளாகவும் உள்ளனர்.
பொருளாதாரம், அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சியில்
உலகளவில் கடும் போட்டி நிலவி வருகிறது. இந்தப் போட்டியை இந்திய இளைஞர்கள்
எளிதில் சமாளித்து வெற்றி பெறுவார்கள். 2030-இல் உலக வளர்ச்சியில் இந்திய
இளைஞர்களின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக அமையும்.
கல்வியில் மாற்றத்தை கொண்டு வருவதன் மூலம் இந்தியாவில்
இளைஞர்கள் சக்தி எழுச்சி பெறும். தேசிய கல்வியியல் வளர்ச்சியில்
தொழில்பயிற்சி மிக அவசியமானது. கல்வியும், தொழில்பயிற்சியும் இணைந்தால்தான்
இளைஞர்கள் இசைவுத் தன்மை, தன்னம்பிக்கை, சூழலை கையாளும் திறமை, புதிய
படைப்பாற்றல் உள்ளிட்ட திறமைகளைப் பெறுவர்.
19-ஆம் நூற்றாண்டில் இங்கிலாந்து, 20-ஆம் நூற்றாண்டில்
அமெரிக்கா என்பதை விட 21-ஆம் நூற்றாண்டில் இந்திய இளைஞர்கள் உலகின்
முன்னோடிகளாக இருப்பார்கள் என்றார்.








