தமிழ்நாடு அரசுப் பணியாளர்
தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) உள்ளிட்ட போட்டித் தேர்வுகளுக்கு
தயாராகும்போது வெற்றி குறித்து யோசிக்கக் கூடாது என தமிழக அரசின்
சுற்றுச்சூழல்-வனத் துறைச் செயலாளர் வெ.இறையன்பு தெரிவித்தார்.
இந்திய இளைஞர் சங்கம், ராஜாஜி பொதுநல மையம், புதிய
தலைமுறை அறக்கட்டளை ஆகியவற்றின் சார்பில் "தமிழ்நாடு அரசுப் பணியாளர்
தேர்வுகளை வெல்வது எப்படி' என்ற கருத்தரங்கம் சென்னையில் ஞாயிற்றுக்கிழமை
நடைபெற்றது.
இதில் வெ.இறையன்பு பேசியது:
வேலைக்கான போட்டித் தேர்வுகளும், பள்ளி அல்லது
கல்லூரித் தேர்வுகளும் ஒன்றல்ல. பள்ளித் தேர்வுகளில் தேர்ச்சி பெற குறைந்த
மதிப்பெண் எடுத்தாலே போதும். போட்டித் தேர்வுகளில் பிற மாணவர்களை விட
கூடுதலாக ஒரு மதிப்பெண் எடுத்தால் மட்டுமே தேர்வு பெற முடியும்.
எனவே, போட்டித் தேர்வுகளுக்காக மாணவர்கள் தங்களைத்
தயார்படுத்தும்போது, சம்பந்தப்பட்ட தலைப்புகள், பாடங்களில் உள்ள சிறந்த
புத்தகங்களைப் படிக்க வேண்டும். போட்டித் தேர்வுகளில் ஒவ்வொரு
மதிப்பெண்ணும் முக்கியத்துவம் வாய்ந்தவை.
இந்தத் தேர்வுகளில் அறிவைச் சோதிக்கும் வகையில் 30
சதவீதமும், புரிந்துகொள்ளும் திறனைச் சோதிக்கும் வகையில் 30 முதல் 40
சதவீதமும், மாணவர்களின் பகுப்பாய்வு செய்யும் திறனைச் சோதிக்கும் வகையில்
30 முதல் 40 சதவீதமும் கேள்விகள் இடம்பெற்றிருக்கும்.
இந்தத் தேர்வுகளுக்குத் தயாராகும்போது வெற்றியைப் பற்றி
யோசிக்கக் கூடாது. படிப்பதன் மூலம் பல புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்ள
வேண்டும். படிப்பதை ரசித்துச் செய்தாலே தானாக வெற்றி கிடைக்கும் என்றார்
அவர்.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் உறுப்பினர்
செயலர் எஸ்.பன்னீர்செல்வம்: விண்ணப்பத்தைச் சரியான விவரங்களுடன் பூர்த்தி
செய்தாலே 50 சதவீதம் வெற்றி பெற்றுவிட்டதாகக் கருத வேண்டும்.
எழுத்துத் தேர்வில் நன்றாக செய்திருந்தாலே தேர்வு
பெறுவதற்கு 95 சதவீத வாய்ப்புள்ளது. அதேபோல், இப்போது நேர்முகத் தேர்வுகள்
சிசிடிவி மூலம் கண்காணிக்கப்படுகின்றன. எனவே, நேர்முகத் தேர்வுகளில் தவறு
செய்வதற்கு வாய்ப்பில்லை.
டி.என்.பி.எஸ்.சி. வெளிப்படைத்தன்மையோடு இயங்குவதை
உறுதி செய்ய பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இணைய வழி விண்ணப்பம்
உள்ளிட்ட பல்வேறு சீர்திருத்தங்களை தேர்வாணையத்தில் அறிமுகப்படுத்தியவர்
நடராஜ் என்றார் அவர்.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் முன்னாள்
தலைவரும், முன்னாள் போலீஸ் டி.ஜி.பி.யுமான ஆர்.நடராஜ்: நன்றாக பயிற்சி
செய்வதில்தான் வெற்றி அடங்கியிருக்கிறது. காவல் துறை, ராணுவம் ஆகியவற்றில்
ஒரு பொன்மொழி உண்டு. பயிற்சியில் நன்றாக வியர்வை சிந்தினால், களத்தில்
குறைவாக ரத்தம் சிந்தலாம் என்பது. அது நிச்சயம் போட்டித் தேர்வுகளுக்கும்
பொருந்தும். தேர்வர்கள் நிறைய மீண்டும், மீண்டும் எழுதிப் பார்க்க
வேண்டும். பாடத்திட்டம் எப்படி இருக்கிறது, முன்பு வந்த கேள்விகள் எப்படி
உள்ளன, அந்தக் கேள்விகளை நாம் நன்றாக மனதில் வாங்கிக் கொள்ள வேண்டும்.
தேர்வு எழுதுவது, விடையளிப்பது உள்பட எந்தவொரு விஷயத்தையும் மூன்றாகப்
பிரித்துக்கொண்டு அணுகினால் வெற்றி நிச்சயம், என்றார் அவர்.
ராஜாஜி பொதுநல மையத்தின் அறங்காவலரும், ஓய்வு பெற்ற
ஐ.ஏ.எஸ். அதிகாரியுமான பி.எஸ்.ராகவன், ராஜாஜி பொதுநல மையத்தின் தலைவர்
ஜி.நாராயணசுவாமி, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் முன்னாள்
உறுப்பினர் கே.எம்.ரவி, ராணி மேரி கல்லூரியின் முதல்வர் ஆர்.அக்தர் பேகம்,
புதிய தலைமுறை அறக்கட்டளையின் கௌரவ அமைப்பாளர் ஜி.ஜே.அருள் வீரமணி
உள்ளிட்டோர் இதில் பங்கேற்றனர்.








