தமிழகத்தில், ஆண்டுதோறும், பட்ஜெட்டின் போது பள்ளிகள் தரம் உயர்த்தப்படுகின்றன. இப்படி, கடந்த ஆறு ஆண்டுகளில், தரம் உயர்த்தப்பட்ட, 1,250 பள்ளிகள், பெயரளவில் உயர்நிலைப் பள்ளிகளாக செயல்படுவதால், மாணவ, மாணவியர் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர். இப்பள்ளிகளில், ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை மட்டும், போதுமான வகுப்பறைகள் உள்ளன. ஆறாம் வகுப்பு முதல், 10ம் வகுப்பு வரையிலான வகுப்புகளுக்கு புதிய கட்டடங்கள், வகுப்பறை மற்றும் கழிப்பறை வசதி இல்லை. கடந்த 2009 - 10ல், தரம் உயர்த்தப்பட்ட, 710 உயர்நிலைப் பள்ளிகளுக்கு, புதிய கட்டடம் கட்ட, மத்திய அரசின் அனைவருக்கும் இடைநிலைக் கல்வி திட்டம் மூலம், தலா, 49 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டது.
இதனால், ஆறு முதல், 10 வரையிலான வகுப்புகளுக்கு, 1,250 பள்ளிகளில் திறந்தவெளி, மரத்தடி மற்றும் கூடாரங்கள் மூலம் பாடங்கள் நடத்தப்படுகின்றன; ஆய்வக வசதியும் இல்லை. ஆறாம் வகுப்பு முதல், 10ம் வகுப்பு வரை படிக்கும் மாணவியருக்கு, பாதுகாப்பான தண்ணீர் வசதியுடன் கூடிய, கழிப்பறைகள் கட்டாயம் தேவை என்ற நிலையில், இந்த பள்ளிகளில் தண்ணீர் வசதியுடன் கூடிய கழிப்பறைகள் இன்றி, மாணவியர் கடும் இன்னலுக்கு ஆளாகின்றனர்.
இதுகுறித்து, தமிழ்நாடு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் சங்க, மாநில பொதுச் செயலர் சாமி சத்தியமூர்த்தி கூறியதாவது:தரம் உயர்த்தப்பட்ட உயர்நிலைப் பள்ளிகளில், வகுப்பறைக்கான புதிய கட்டடங்கள், ஆய்வகம் மற்றும் கழிப்பறை வசதி செய்து தரக்கோரி, ஆறு ஆண்டுகளாக, கல்வித் துறை அதிகாரிகளிடம் மனு அளித்துள்ளோம்.








