ஐ.ஐ.டி. மாணவர் அமைப்புக்கு தடை விதிக்கப்பட்டதை கண்டித்து சென்னையில்
பல்வேறு மாணவர் அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். 150 பேர் கைது
செய்யப்பட்டனர்.
அங்கீகாரம் ரத்து
சென்னை ஐ.ஐ.டி.யில் இயங்கி வந்த அம்பேத்கர் பெரியார் மாணவர் வட்டம் என்ற அமைப்பை சேர்ந்த மாணவர்கள் பிரதமர் நரேந்திர மோடியையும், மத்திய அரசின் கொள்கைகளையும் விமர்சித்து துண்டு பிரசுரங்கள் விநியோகித்ததற்காக மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறைக்கு புகார் கடிதம் அனுப்பப்பட்டது.
அந்த புகார் கடிதம் குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்கும்படி மத்திய
மனிதவள மேம்பாட்டுத்துறை உத்தரவிட்டதாக கூறப்படுகிறது. அதன் அடிப்படையில்
அம்பேத்கர் பெரியார் மாணவர் வட்டம் அமைப்பிற்கான அங்கீகாரத்தை ரத்து செய்து
ஐ.ஐ.டி. உத்தரவிட்டது.அங்கீகாரம் ரத்து
சென்னை ஐ.ஐ.டி.யில் இயங்கி வந்த அம்பேத்கர் பெரியார் மாணவர் வட்டம் என்ற அமைப்பை சேர்ந்த மாணவர்கள் பிரதமர் நரேந்திர மோடியையும், மத்திய அரசின் கொள்கைகளையும் விமர்சித்து துண்டு பிரசுரங்கள் விநியோகித்ததற்காக மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறைக்கு புகார் கடிதம் அனுப்பப்பட்டது.
முற்றுகை போராட்டம்
அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டதை கண்டித்து நேற்று காலை சென்னை ஐ.ஐ.டி. வளாகம் முன்பு முற்றுகை போராட்டம் நடத்துவதாக இந்திய ஜனநாயக சங்கம், இந்திய மாணவர் சங்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் அறிவித்து இருந்தன. இதையொட்டி 100-க்கும் மேற்பட்ட போலீசார் சென்னை ஐ.ஐ.டி.யின் இரு நுழைவு வாயில்கள் முன்பாகவும் குவிக்கப்பட்டு இருந்தனர். மேலும் இரும்பு தடுப்பு வேலிகளை கொண்டு இரு வாயில்களையும் அடைத்து வைத்து இருந்தனர்.
அறிவித்தபடி நேற்று காலையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், இந்திய மாணவர் சங்கம் உள்ளிட்ட பல்வேறு மாணவர்கள் அமைப்பை சேர்ந்தவர்கள் சென்னை ஐ.ஐ.டி. முன்பாக கூடுவதற்காக வந்தனர். அவர்களை ஐ.ஐ.டி. முன்பு செல்ல முடியாதபடி போலீசார் தடுத்தனர்.
தள்ளு முள்ளு
போலீசார் தடுத்ததால் ஐ.ஐ.டி. நுழைவு வாயிலை அடைவதற்கு முன்பாகவே இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினரும் இந்திய மாணவர் சங்கத்தினரும் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து தடை ஏற்பட்டது. வாகனங்கள் செல்ல முடியாதபடி நின்றன. அப்போது சாலை மறியலில் ஈடுபட்டவர்களை அப்புறப்படுத்தி கைது செய்து போலீஸ் வேனில் ஏற்ற போலீசார் முயற்சி செய்தனர். அவர்களின் முயற்சிக்கு போராட்டம் நடத்தியவர்கள் ஒத்துழைக்காமல் இருந்தனர். அவர்களை போலீசார் குண்டு கட்டாக தூக்கி போலீஸ் வேனில் ஏற்றினார்கள்.
அப்போது போலீசாருக்கும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் மற்றும் இந்திய மாணவர் சங்கத்தினருக்கும் தள்ளு முள்ளு ஏற்பட்டது. அப்போது நிர்வாகிகள் தாமு, லெனின் மற்றும் மாணவ-மாணவிகள் உள்பட பலரை போலீசார் வலுக்கட்டாயமாக ரோட்டில் இருந்து அப்புறப்படுத்தி வேனில் ஏற்றினார்கள். இந்த தள்ளு முள்ளு 15 நிமிடம் வரை நீடித்தது. இதில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தை சேர்ந்த 3 பேருக்கு லேசான காயம் ஏற்பட்டது. கைது செய்யப்படுவதற்கு முன்பாக போராட்டக்காரர்கள் கூறுகையில் மாணவர் அமைப்புக்கு அங்கீகாரம் கொடுக்கும் வரையில் போராட்டம் தொடரும் என்று தெரிவித்தனர். போராட்டம் நடத்திய அனைவரும் கைது செய்யப்பட்டு வேனில் ஏற்றப்பட்டனர்.
தொடர்ந்து போராட்டம்
அதைத்தொடர்ந்து நேற்று பிற்பகல் ஐ.ஐ.டி. நுழைவு வாயில் அருகே, கேம்பஸ் பிரண்ட் ஆப் இந்தியா என்ற அமைப்பு உள்ளிட்ட பல்வேறு மாணவர் அமைப்புகள் முற்றுகை போராட்டம் நடத்தினார்கள்.
இந்த போராட்டத்திற்கு கேம்பஸ் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் மாநில பொதுச் செயலாளர் முஸ்தபா தலைமை தாங்கினார். அப்போது அம்பேத்கர் பெரியார் வாசிப்பு வட்டத்துக்கு மீண்டும் அங்கீகாரம் வழங்க வேண்டும் என்று குரல் எழுப்பினார்கள்.
அடுத்து இளைஞர் காங்கிரஸ் சார்பில் மத்திய கைலாஷ் கோவில் முன்பாக போராட்டம் நடத்தினார்கள். அவர்களும் ஐ.ஐ.டி.யில் அம்பேத்கர் பெரியார் மாணவர் வாசகம் வட்ட அமைப்பின் அங்கீகாரம் ரத்து செய்ததை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். அவர்களை போலீசார் கைது செய்யாமல் அப்புறப்படுத்தினார்கள்.
ரத்தை ஆதரித்து போராட்டம்
முன்னதாக சென்னை ஐ.ஐ.டி.யில் அம்பேத்கர் பெரியார் மாணவர் வாசகம் வட்ட அமைப்பின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டது சரிதான் என்பதை வலியுறுத்தி இந்து மக்கள் கட்சி மாநில தலைவர் அர்ஜூன் சம்பத் சென்னை ஐ.ஐ.டி. முன்பாக தொண்டர்களுடன் ஆர்ப்பாட்டம் செய்தார். உடனே அவர் உள்பட 7 பேர்களை போலீசார் கைது செய்தனர்.
மொத்தத்தில் நேற்று காலை முதல் மாலை வரை சென்னை ஐ.ஐ.டி. முன்பாக பல்வேறு மாணவர் அமைப்புகள் போராட்டம் நடத்திய வண்ணம் இருந்தனர். மொத்தத்தில் 150-க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டனர்.
ஐ.பி.எஸ். அதிகாரி
சென்னை ஐ.ஐ.டி.யில் அம்பேத்கர் பெரியார் மாணவர் வட்ட அமைப்பு அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டதை நீக்கவேண்டும் என்று கோரிக்கை விடுத்து காரக்பூர் ஐ.ஐ.டி.யில் படித்த முன்னாள் மாணவரும் உத்தரபிரதேச ஐ.பி.எஸ். அதிகாரியுமான அமிதாப் தாகூர் சென்னை ஐ.ஐ.டி.க்கு ஒரு ஒரு இ.மெயில் அனுப்பி உள்ளார்.







