அரசுப் பள்ளிகளில் ஆய்வக உதவியாளர் பணி நியமனத்துக்கான போட்டித் தேர்வுக்கு
விண்ணப்பிக்க புதன்கிழமை (மே 6) கடைசி நாளாகும். இந்தத் தேர்வுக்கு
செவ்வாய்க்கிழமை மாலை வரை 7.30 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளதாக அதிகாரிகள்
தெரிவித்தனர்.வேலைவாய்ப்புப் பதிவு எண் உள்ளிட்டவற்றுக்காக ஒரே
நேரத்தில் ஆயிரக்கணக்கானோர் பயன்படுத்தியதால், தமிழ்நாடு வேலைவாய்ப்பு
மற்றும் பயிற்சித் துறையின் இணையதளம் செவ்வாய்க்கிழமை முடங்கிவிட்டது. இதன்
காரணமாக, விண்ணப்பதாரர்கள் சிரமப்பட்டனர்.இதையடுத்து,விண்ணப்பங்களைப் பதிவேற்றம் செய்யும்போதே வேலைவாய்ப்புப் பதிவு எண்ணைச்
சமர்ப்பிக்க வேண்டும் என்று விண்ணப்பதாரர்களைக் கட்டாயப்படுத்த வேண்டாம் என
அதிகாரிகளுக்கு பள்ளிக் கல்வி இயக்ககம் உத்தரவிட்டது.
விண்ணப்பதாரர்கள்
எழுத்துத் தேர்வில் வெற்றி பெற்று நேர்முகத் தேர்வில் கலந்துகொள்ளும்போது
வேலைவாய்ப்புப் பதிவு எண்ணைச் சமர்ப்பித்தால் போதும் எனவும் அந்த உத்தரவில்
தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் 4,362
பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்தப் பணியிடங்களுக்கு மே 31-ஆம் தேதி
போட்டித் தேர்வு நடைபெற உள்ளது. இந்தத் தேர்வுக்கு ஏப்ரல் 24-ஆம் தேதி
முதல் அந்தந்த மாவட்டங்களில் உள்ள சிறப்பு மையங்களில் ஆன்-லைனில்
விண்ணப்பங்கள் பதிவு செய்யப்பட்டு வருகின்றன.
இந்தப் பணியிடங்களுக்கு
விண்ணப்பிக்க குறைந்தபட்ச கல்வித் தகுதி 10-ஆம் வகுப்பு தேர்ச்சி ஆகும்.
போட்டித் தேர்வில் வெற்றி பெறுபவர்களில் இருந்து 1:5 என்ற விகிதத்தில்
நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்பட உள்ளனர். நேர்முகத் தேர்வு மொத்தம் 25
மதிப்பெண்ணுக்கு நடத்தப்பட உள்ளது.