சட்டப் படிப்புகளுக்கான
விண்ணப்பங்களை கால தாமதமின்றி விநியோகிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று
தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர்
சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:
தமிழகம் முழுவதும் 7 சட்டக் கல்லூரிகளும், சென்னையில்
தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழக வளாகத்தில் ஒரு சட்டப்
பள்ளியும் செயல்பட்டு வருகின்றன. இந்த சட்டக் கல்லூரிகள், சட்டப்
பள்ளிகளில் மாணவர் சேர்க்கை ஆண்டுதோறும் மே முதல் வாரத்தில் தொடங்கி ஜூன்
இரண்டாம் வாரத்தில் முடிவடையும். ஆனால், அறிவித்தபடி மே 8-ஆம் தேதி
விண்ணப்பங்கள் வழங்கப்படவில்லை.
இதனால், மாணவர்களும், பெற்றோரும் பல்கலைக்கழக கல்லூரி வளாகத்திற்கு நாள்தோறும் வந்து ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனர்.
அதேநேரத்தில் அண்டை மாநிலங்களில் உள்ள சட்டக்
கல்லூரிகளில் விண்ணப்பங்கள் வழங்கப்பட்டுள்ளதால், தமிழக மாணவர்கள்
பெரும்பாலானோர் அங்கு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளதுடன், தமிழகத்தில் உள்ள
தனியார் சட்டக் கல்லூரிகளில் சேரும் நிலைக்கும் மாணவர்கள்
தள்ளப்பட்டுள்ளனர். இதனால் ஏழை, நடுத்தர மாணவர்களுக்கான கல்விச் செலவு
அதிகரிக்கும். எனவே, மாணவர்களின் கல்வி அவசியத்தை உணர்ந்து விண்ணப்பங்கள்
கால தாமதமின்றி வழங்குவதுடன், போதுமான ஆசிரியர்கள், கட்டடங்களை ஏற்பாடு
செய்ய மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.







