வாலாஜாபாத் அருகே தென்னேரி கிராமத்தைச் சேர்ந்த அசோகன் மகள் கனிமொழி. ஆதிதிராவிடர் பிரிவைச் சேர்ந்த இவர், காஞ்சிபுரம் காமராஜர் சாலையில் உள்ள ஆற்காடு நாராயணசாமி முதலியார் அரசுப் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 படித்து முடித்தார். இயற்பியல், வேதியியல், உயிரியல், கணிதம் ஆகியவற்றை முதன்மைப் பாடங்களாகக் கொண்டு படித்த இவர், 1,142 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் முதல் மாணவியாகத் தேர்ச்சி பெற்றார். மருத்துவர் ஆவதே லட்சியம் என்று கூறிவந்த கனிமொழி, எம்.பி.பி.எஸ். படிப்புக்கு 194.5 கட்-ஆஃப் மதிப்பெண் பெற்றிருந்தார்.
இதுகுறித்து பள்ளித் தலைமை ஆசிரியர் குமரேசன் கூறுகையில், கனிமொழி நிச்சயம் மருத்துவப் படிப்பில் இடம்பெறுவார் என்ற நம்பிக்கை இருந்தது. அது தற்போது நனவாகி உள்ளது. இந்தப் பள்ளி தொடங்கி 142 ஆண்டுகள் ஆன நிலையில், மருத்துவப் படிப்புக்கு முதன் முறையாக ஒரு மாணவி தேர்வாகி உள்ளது எங்கள் பள்ளிக்குக் கிடைத்த பெருமை.
நிச்சயமாக முதல்கட்ட கலந்தாய்வின் போதே கனிமொழிக்கு சென்னை அல்லது செங்கல்பட்டு மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைக்கும் என்று நம்புகிறேன் என்றார்.








