இதற்கிடையே, இந்த நிலைமை ஒரு வாரத்தில் சரி செய்யப்படும் என்று பாட நூல் கழக வட்டாரங்கள் தெரிவித்தன.
தமிழகத்தில் உள்ள அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு அரசு சார்பில் ஆண்டுதோறும் பாடப் புத்தகங்கள் இலவசமாக வழங்கப்படுகின்றன. இந்த நிலையில் நிகழ் கல்வியாண்டில் பயிலும் 1 முதல் 10-ஆம் வகுப்பு மாணவர்கள், 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பாடப் புத்தகங்கள் ஏற்கெனவே வழங்கப்பட்டுள்ளன.
ஆனால், தனியார் பள்ளிகளுக்கான பாடப் புத்தகங்களை பாட நூல் கழகம் இதுவரை விற்பனைக்கு வழங்கவில்லை என்று கூறப்படுகிறது.
தமிழகத்தில் தனியார் பள்ளிகளுக்கான புத்தகங்களும் தமிழ்நாடு பாடநூல் - கல்வியியல் பணிகள் கழகம் சார்பில், தனியார் மூலம் அச்சடிக்கப்பட்டு தனியார் பள்ளிகளுக்கு விலைக்கு விற்கப்படுகின்றன. இந்த பள்ளிகள் புத்தகங்களை மாநிலம் முழுவதிலும் உள்ள 22 மண்டல அலுவலகங்களில் கேட்பு வரைவோலை கொடுத்து நேரடியாகவோ, ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து உரிய கட்டணம் செலுத்தியோ பெற்றுக் கொள்ளலாம் என்றும் பாட நூல் கழக விற்பனை மையங்களில் மாணவ-மாணவிகளுக்கு புத்தகம் விற்பனை செய்வதில்லை என்றும் பாடநூல் கழகம் ஏற்கெனவே அறிவித்துள்ளது. புத்தகங்கள் கிழிந்தாலோ, அவசர தேவை ஏற்பட்டாலோ மட்டுமே விற்பனை மையங்களில் புத்தகங்களைப் பெற முடியும். ஒட்டு மொத்தமாக புத்தகங்கள் தேவைப்படுவோர், மண்டல அலுவலகங்களையே நாட வேண்டும்.
இந்த நிலையில் மண்டல அலுவலகங்களில் தனியார் பள்ளிகளுக்குத் தேவையான அளவு பாடப் புத்தகங்கள் விற்பனைக்கு இல்லை என்று கூறப்படுகிறது.
இதனால் தனியார் பள்ளி ஊழியர்களும், மாணவர்களின் பெற்றோரும் சென்னை டி.பி.ஐ. வளாகத்தில் உள்ள பாட நூல் கழக விற்பனை மையங்களை கடந்த சில வாரங்களாக நாடி வருகின்றனர்.
இருப்பினும் ஒட்டு மொத்தமாக கேட்பவர்களுக்கு பாட நூல்கள் விற்பனை செய்யப்படுவதில்லை என்பதால் அங்கு பணியாற்றும் ஊழியர்களுக்கும் மாணவர்களின் பெற்றோருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு வருகிறது. இதேபோல் செவ்வாய்க்கிழமையும் நீண்ட நேரம் காத்திருந்த பள்ளி ஊழியர்கள், பெற்றோர்களுக்கு பிளஸ்-1 பாடப் புத்தகங்கள் கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது.
தொடர்ந்து ஒரு வாரமாக புத்தகங்களுக்காக அலைந்து வருவதாகவும் ஆனால் பாட நூல்கள் இதுவரை கிடைக்கவில்லை என்றும் கூறிய பெற்றோர், இதனால் தங்கள் குழந்தைகளின் கல்வி பாதிக்கப்படுவதாகக் கூறி, பாட நூல் கழக அலுவலர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
இதற்கிடையே, தனியார் பள்ளிகளுக்கான 11-ஆம் வகுப்பு பாடப் புத்தகங்கள் அடுத்த ஒரு வாரத்தில் கிடைக்கும் என்றும் பாட நூல்களை அச்சிட்டு மண்டல அலுவலகங்களுக்கு அனுப்புவதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் பாட நூல் கழக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.








