அம்பேத்கர்–பெரியார் வாசகர் வட்டத்திற்கு அங்கீகாரம் ரத்து
செய்யப்பட்டது குறித்து விளக்கம் கேட்டு ஏற்கனவே அனுப்பிய நோட்டீசுக்கு
உடனடியாக பதிலளிக்காவிட்டால் சம்மன் அனுப்ப நேரிடும் என்றும் தேசிய
ஆதிதிராவிடர் நல ஆணையம் சென்னை ஐ.ஐ.டி.யின் இயக்குனருக்கு நோட்டீசு
அனுப்பியுள்ளது.
அங்கீகாரம் ரத்து
சென்னை ஐ.ஐ.டி.யில் உள்ள அம்பேத்கர்–பெரியார் வாசகர் வட்டம் என்ற
மாணவர் அமைப்பு பிரதமர் நரேந்திர மோடியை விமர்சனம் செய்ததாக கூறி அதன்
அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டது. இந்த சம்பவம் தேசிய அளவில் பெரும்
பரபரப்பையும், எதிர்ப்பையும் ஏற்படுத்தி உள்ளது.
இந்தியாவின் பல்வேறு
இடங்களில் மாணவர் மற்றும் மனித உரிமை அமைப்புகள் மத்திய மனிதவள மேம்பாட்டு
அமைச்சகத்தின் இந்த உத்தரவை எதிர்த்து ஆர்ப்பாட்டங்கள் நடத்தி வருகின்றன.
மீண்டும் நோட்டீசு
இந்நிலையில் தேசிய ஆதிதிராவிடர் நல ஆணையத்தின் சார்பில் அதன்
தலைவரும், காங்கிரஸ் எம்.பி.யான பி.எல்.புனியா தன்னிச்சையாக விளக்கம்
கேட்டு சென்னை ஐ.ஐ.டி. இயக்குனர் மற்றும் மனிதவள மேம்பாட்டு
அமைச்சகத்துக்கு கடந்த மாதம் 30–ந்தேதி நோட்டீசு அனுப்பியிருந்தார். அதில்
ஜூன் 1–ந்தேதிக்குள் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டது குறித்து விளக்கம்
அனுப்ப வேண்டும் என்றும் குறிப்பிட்டு இருந்தார்.
இந்த நோட்டீசு மீது
எந்த விளக்கமும் அளிக்கப்படாத நிலையில் நேற்று மீண்டும் சென்னை ஐ.ஐ.டிக்கு
ஒரு நோட்டீசு தேசிய ஆதிதிராவிட நல ஆணையம் அனுப்பி உள்ளது.
நேரில் ஆஜராக...
அதில், ஏற்கனவே அனுப்பப்பட்ட நோட்டீசுக்கு இதுவரை எந்தவிதமான
விளக்கமும் அளிக்கப்படவில்லை. தேசிய ஆதிதிராவிடர் நல ஆணையம் கோரியுள்ள
விளக்கத்தை உடனடியாக அனுப்பாவிட்டால் சென்னை ஐ.ஐ.டி.யின் இயக்குனர்
ஆணையத்தின் முன்பு நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கும்படி சம்மன் அனுப்ப
நேரிடும் என்று அந்த நோட்டீசில் குறிப்பிடப்பட்டுள்ளது. மத்திய மனிதவள
மேம்பாட்டு துறைக்கும் இதே போன்று நோட்டீசு அனுப்பப்பட்டுள்ளது.







