இதுகுறித்து பி.எஸ்.என்.எல், நிறுவனத்தின் சென்னை மண்டல தலைமை பொதுமேலாளர் கலாவதி கூறியதாவது:-
இலவச ரோமிங்
பி.எஸ்.என்.எல், வாடிக்கையாளர்கள் பயனடையும் வகையில் நாடு முழுவதும் பேசும் வகையில் இலவச ரோமிங் வசதி அறிமுகப்படுத்தப்படும் என்று மத்திய தொலைத்தொடர்பு துறை மந்திரி அறிவித்திருந்தார். இந்த அறிவிப்பு இன்று (நேற்று) முதல் அமலுக்கு வந்துள்ளது. இதற்கு இளையதலைமுறையினர் மற்றும் மாணவர்களிடம் இருந்து நல்ல வரவேற்பு கிடைக்கும் என்று நம்புகிறோம். ஏற்கனவே வெளிமாநிலங்களில் இருந்து தமிழகத்தில் உள்ள கல்வி நிறுவனங்களில் படிப்பவர்களும், தமிழகத்தில் இருந்து வெளிமாநிலங்களில் வேலைபார்த்து வருபவர்களும் 2 சிம்கார்டுகளை பயன்படுத்தி வந்தனர்.
மாமல்லபுரம், தஞ்சாவூர்
தமிழகத்தில், வை-பை என்று அழைக்கப்படும் கம்பியில்லா இணையதள இணைப்பு வசதி முதன் முறையாக, சுற்றுலா பயணிகள் அதிகம் வந்து செல்லும் மாமல்லபுரம் கடற்கரை கோவில் பகுதி மற்றும் தஞ்சாவூர் பெரிய கோவில் ஆகியவற்றில் விரைவில் அறிமுகப்படுத்த உள்ளது. ஏற்கனவே வாரணாசி மற்றும் தாஜ்மகால் இருக்கும் பகுதியில் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. கம்பியில்லா இணையதள சேவையை அனைவரும் பயன்படுத்துவதற்காகத்தான் இந்த திட்டம் தொடங்கப்படுகிறது. இந்த திட்டத்தின் படி 30 நிமிடம் இலவசமாக பயன்படுத்த முடியும். அதற்கு பிறகு கூப்பன்களை பயன்படுத்தி தொடர்ந்து சேவையை பெறலாம்.
தரைவழி தொலைபேசியில் இரவு 9 மணி முதல் காலை 7 மணி வரை இலவசமாக பேசும் திட்டம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த திட்டத்தில் சேர்ந்து பயனடைய சென்னை மண்டலத்தில் மட்டும் 5 ஆயிரம் வாடிக்கையாளர்கள் புதிதாக இணைந்துள்ளனர். இதேபோன்று இலவச ரோமிங் வசதியும் நல்ல வரவேற்பை பெறும்.
இவ்வாறு அவர் கூறினார்.








