சென்னை ஐகோர்ட்டில், மாணவன் எம்.கபிலன் உட்பட பலர் தாக்கல் செய்துள்ள மனுவில், ‘கடந்த கல்வியாண்டில் பிளஸ்-2 பொதுத்தேர்வு எழுதிய மாணவர்கள் அதிக மதிப்பெண் எடுத்தனர். ஆனால், நடந்து முடிந்த பொது தேர்வில் கலந்துக் கொண்டவர்கள் குறைவான மதிப்பெண்களே எடுத்துள்ளனர். எனவே, மருத்துவ கல்விக்காக கலந்தாய்வில் கடந்த கல்வியாண்டில் தேர்ச்சிப்பெற்ற மாணவர்களை கலந்துக்கொள்ள அனுமதித்தால், அவர்களுக்குத்தான் அதிக வாய்ப்பு கிடைக்கும். இதனால், இந்த கல்வியாண்டில் தேர்ச்சிப்பெற்ற மாணவர்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்படும். வாய்ப்புளும் கிடைக்காது. எனவே, கடந்த கல்வியாண்டில் தேர்ச்சிப் பெற்றவர்களை மருத்துவ கல்விக்கான கலந்தாய்வில் அனுமதிக்கக்கூடாது என்று தமிழக அரசுக்கு உத்தரவிடவேண்டும்’ என்று கூறியிருந்தனர்.
தடை உத்தரவு
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சத்தீஷ்குமார் அக்னிகோத்ரி, எம்.வேணுகோபால் ஆகியோர், ‘இந்த வழக்கு விசாரணை முடியும் வரை மருத்துவ கல்விக்கான கலந்தாய்வில் கலந்துக் கொண்ட மாணவர்களுக்கு கல்லூரிகளை ஒதுக்கீடு செய்து ஆணை பிறப்பிக்கக்கூடாது’ என்று தடை விதித்து உத்தரவிட்டனர்.
பின்னர், இந்த வழக்கிற்கு பதில் மனு தாக்கல் செய்யும்படி தமிழக உயர்கல்வித்துறை செயலாளர், மருத்துவ கல்வி இயக்குனர் ஆகியோருக்கு நோட்டீசு அனுப்ப உத்தரவிட்டனர்.
இந்த வழக்கு நீதிபதிகள் முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, மருத்துவ கல்வி இயக்குனர் டாக்டர் எஸ்.கீதாலட்சுமி பதில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது:-
மாணவர்கள் சேர்க்கை
தமிழ்நாடு தொழில் கல்வி மாணவர்கள் சேர்க்கை சட்டத்தை 2006-ம் ஆண்டு தமிழக அரசு உருவாக்கியது. இந்த சட்டத்துக்கு இந்திய மருத்துவ கல்வி கவுன்சில், மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் உட்பட அனைத்து அமைப்புகளும் ஒப்புதல் அளித்துள்ளது. இந்த சட்டத்துக்கு கடந்த 2007-ம் ஆண்டு மார்ச் 3-ந் தேதி ஜனாதிபதி ஒப்புதல் அளித்துள்ளார்.
இந்த சட்டத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை இந்த ஐகோர்ட்டு கடந்த 2007-ம்ஆண்டு தள்ளுபடி செய்துள்ளது. இவ்வாறு அனைத்து தரப்பினராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட இந்த சட்டத்தின் அடிப்படையில்தான் தமிழகத்தில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். மருத்துவ படிப்புகளுக்கு மாணவர்கள் சேர்க்கை நடைபெறுகிறது.
முதல் சுற்று
மருத்துவ படிப்புக்கு சேர மதிப்பெண், வயது உள்ளிட்ட தகுதிகளை கொண்டவர்கள் விண்ணப்பம் செய்யலாம். லிபிகா குப்தா என்பவர் தொடர்ந்த வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, மருத்துவ கல்விக்கான முதல் சுற்று கலந்தாய்வை ஜூன் 25-ந் தேதிக்குள் நடத்த வேண்டும். அந்த முதல் சுற்றில் தகுதியான மாணவர்களுக்கு, ஜூலை 3-ந் தேதிக்குள் கல்லூரி ஒதுக்கீட்டு ஆணை கொடுக்கவேண்டும் என்று கூறியுள்ளது. இதேபோல்தான், 2-வது சுற்று, 3-வது சுற்று கலந்தாய்வுகளுக்கும் தேதியை சுப்ரீம் கோர்ட்டு நிர்ணயம் செய்துள்ளது. இந்த உத்தரவின் அடிப்படையில் கலந்தாய்வு நடத்தப்பட்டு வருகிறது.
ஒரேவிதமான கல்வி
கடந்த கல்வியாண்டில் தேர்ச்சிப்பெற்றவர்கள் அதிக மதிப்பெண் எடுத்துள்ளனர் என்று மனுதாரர்கள் கூறுவதை ஏற்கமுடியாது. இந்த இரண்டு கல்வியாண்டு மாணவர்களும் ஒரேவிதமான பாடத்திட்டத்தின் கீழ்தான் படித்துள்ளனர். ஒரேவிதமான தேர்வு முறையில்தான் தேர்வை எழுதியுள்ளனர். அவர்களது விடைத்தாள்களும் ஒரேவிதமாகத்தான் மதிப்பீடு செய்து, மதிப்பெண் வழங்கப்பட்டுள்ளது.
எனவே, எங்களை விட கடந்த கல்வியாண்டு மாணவர்கள் அதிக மதிப்பெண் எடுத்து விட்டனர் என்று மனுதாரர்கள் கூறுவதை சட்டப்படி ஏற்கமுடியாது. மேலும் மனுதாரர்கள் மருத்துவ கல்விக்கான கலந்தாய்வு விளக்க குறிப்பேட்டை எதிர்த்து வழக்கு தொடரவில்லை. எனவே, இந்த வழக்கை தள்ளுபடி செய்யவேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.
தகுதி
இதன்பின்னர் தமிழக அரசு சார்பில் அட்வகேட் ஜெனரல் ஏ.எல்.சோமயாஜி, சிறப்பு அரசு பிளீடர் டி.கிருஷ்ணகுமார், மனுதாரர்கள் சார்பில் வக்கீல் ராகவாச்சாரி உட்பட பலர் ஆஜராகி வாதிட்டார்கள். அப்போது நடந்த வாதம் பின்வருமாறு:-
அட்வகேட் ஜெனரல்:- எந்த ஆண்டு தேர்ச்சிப் பெற்றார் என்ற வித்தியாசம் எதுவும் இல்லாமல், யார் தகுதியானவர்களோ? அவர்கள் மருத்துவ படிப்பில் சேர விண்ணப்பிக்கலாம். மருத்துவ படிப்புக்கான தேர்வு நடவடிக்கை அனைத்தும், தகுதியின் அடிப்படையில்தான் நடைபெறுகிறது. எனவே, கடந்த கல்வியாண்டைவிட இந்த கல்வியாண்டில் மாணவர்கள் தேர்ச்சி விகிதத்தை குறிப்பிட்டு, நிவாரணம் கேட்க முடியாது.
என்ன தகுதி?
நீதிபதிகள்:- கடந்த கல்வியாண்டில் மருத்துவ படிப்புக்கான கலந்தாய்வில் தேர்வுச் செய்யப்படாதவர்கள், இந்த கல்வியாண்டில் எந்த வழிமுறையில் மருத்துவ படிப்பில் சேர்த்துக்கொள்ளப்படுகின்றனர். அந்த மாணவர்களின் தகுதியில் ஒரு ஆண்டுக்குள் என்ன முன்னேற்றம் ஏற்பட்டுவிட்டது?
அட்வகேட் ஜெனரல்:- அது அரசின் கொள்கை முடிவுக்கு உட்பட்டது. மேலும், கல்வித் தொடர்பான நடவடிக்கையில் நீதித்துறை ஒரு அளவுதான் தலையிட முடியும். கல்வி தொடர்பான சட்டம், விதிகள் ஆகியவற்றில் உள்நோக்கம் உள்ளது. தன்னிச்சையானதாக உள்ளது என்று கருதும்பட்சத்தில்தான் நீதித்துறை அதில் தலையிட முடியும்.
இவ்வாறு வாதம் நடந்தது.
தீர்ப்பு தள்ளிவைப்பு
இதையடுத்து நீதிபதிகள் பிறப்பித்த இடைக்கால உத்தரவில், ‘இந்த வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைக்கிறோம். அதுவரை மருத்துவ படிப்புக்கான கலந்தாய்வு நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ளலாம். ஆனால், கல்லூரியை ஒதுக்கீடு செய்து இறுதி ஆணை பிறப்பிக்கக்கூடாது’ என்று கூறியுள்ளனர்.








