அரசு அலுவலகங்களில் காலம் தவறாமையை உறுதிசெய்ய அனைத்து மத்திய அரசு அமைச்சரவைக்கும், மத்திய பணியாளர் மற்றும் பயிற்சித்துறை கடிதம் எழுதிஉள்ளது. “வழக்கமாக அலுவலகத்திற்கு காலதாமதமாக வருவது அரசு ஊழியர்களுக்கு சரியானதா என்று பார்க்கப்படும், இதுபோன்ற அரசு ஊழியர்களுக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படலாம். அனைத்து தரப்பிலும் உள்ள அரசுஊழியர்களிடமும் காலம் தவறாமையான வருகைப்பதிவேடு கவனிக்கப்படும்,” என்று மத்திய அரசு ஊழியர்கள் பயிற்சித்துறை தெரிவித்து உள்ளது. நாடு முழுவதும் சுமார் 48 லட்சம் அரசு ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர்.
பதிவு செய்யப்பட்ட ஊழியர்கள் மற்றும் அலுவலகத்தில் உள்ளவர்கள் விவரங்களை நாள்படி கொடுக்க www.attendance.gov.in என்ற இணையதளம் செயல்பாட்டுக்கு வந்துஉள்ளது. இணையதள தகவலின்படி 1,29,895 ஊழியர்கள் பதிவுசெய்து உள்ளனர். இதில் இன்று 62,761 பேர் வந்து உள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. பயோ-மெட்ரிக் வருகைப்பதிவு ஏடு முறையானது வருகைப்பதிவை குறிப்பிடவே மட்டுமே தவிர அலுவலக நேரம் மற்றும் காலதாமதமான வருகைப்பதிவு தொடர்பான வழிமுறைகளில் எந்தஒரு மாற்றும் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
ஒரு மணி நேரத்திற்கு மேல் காலதாமதமாக அலுவலகத்திற்கு வருதல் என்பது மாதத்திற்கு இரண்டு முறை அனுமதிக்கப்பட்டு உள்ளது. ஆனால் சரியான காரணம் அலுவலகத்தில் தகுதிவாய்ந்த அதிகாரிகளால் ஏற்கப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.








