அகில இந்திய மருத்துவ மறு நுழைவுத் தேர்வுக்கு, தேர்வறையில், மொபைல் போன்,
'ஹேர் பேண்ட், ஹேர் பின்', வளையல், நெக்லஸ் போன்றவற்றுக்கு, மத்திய இடை
நிலைக் கல்வி வாரியமான - சி.பி.எஸ்.இ., தடை விதித்துள்ளது. மே, 3ம் தேதி
நடந்த, அகில இந்திய மருத்துவ நுழைவுத் தேர்வின் போது, வினாத்தாள்,'லீக்'
ஆனது. அத்துடன், காப்பி அடித்தது போன்ற பல பிரச்னைகளால், தேர்வை ரத்து
செய்து, உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
இதையடுத்து, வரும், 25ம் தேதி, மறுபடியும் நுழைவுத்
தேர்வு நடத்தப்பட உள்ளது. இந்தத் தேர்வுக்கு, சி.பி.எஸ்.இ., கடும்
நிபந்தனைகளை அறிவித்துள்ளது.'பெற்றோர் கவனத்துக்கு...' என, சி.பி.எஸ்.இ.,
வெளியிட்டுள்ள தடை உத்தரவு விவரம்: பெற்றோர் தங்கள் பிள்ளைகளை நேர்மையான
முறையில், தேர்வு எழுத அனுமதிப்பர் என, நாங்கள் நம்புகிறோம். தேர்வறைக்கு
வரும்போது, குறிப்பிட்ட பொருட்களை கண்டிப்பாக கொண்டு வரக்கூடாது.
எழுதப்பட்ட,
அச்சடிக்கப்பட்ட, 'பிட்' காகிதம், ஜியோமெட்ரி, பென்சில் பாக்ஸ்,
பிளாஸ்டிக் பவுச், பேனா, கால்குலேட்டர், ஸ்கேல், எழுது பலகை, பென் டிரைவ்,
அழிக்கும் ரப்பர், கணித வாய்ப்பாடு அட்டவணை, மின்னணு பேனா மற்றும் ஸ்கேனர்.
மொபைல் போன், புளூடூத், இயர்போன், பேஜர், மின்னணு இடுப்பு பெல்ட்.
மணிபர்ஸ், கைப்பை, பெல்ட், தொப்பி, தலையில் முஸ்லிம் பெண்கள் அணியும் ஸ்கார்ப்.
மோதிரம், காதுவளையம், பிரேஸ்லெட், மூக்கு வளையம், நெக்லஸ், காது ஜிமிக்கி, தொங்கட்டான்.
கைக்கடிகாரம், கேமரா, தண்ணீர் பாட்டில், பார்சல் செய்யப்பட்ட மற்றும் செய்யப்படாத உணவுப் பொருட்கள்.
இந்த பொருட்களில் எவற்றையும், தேர்வறைக்கு கொண்டு வரக்கூடாது. இவை அனைத்தும் தடை
செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு, சி.பி.எஸ்.இ., உத்தரவிட்டுஉள்ளது.







