தேசிய ஆசிரியர் கல்வியியல் கவுன்சில் சார்பில், பி.எட்., - எம்.எட்., -
பி.பி.எட்., போன்ற படிப்புகளுக்கு, புதிய விதிமுறைகள் கொண்டு வரப்பட்டன.
இந்த விதிகளின் படி, அனைத்து ஓராண்டு ஆசிரியர் பட்டப் படிப்புகளும், இரண்டு
ஆண்டு படிப்பாக மாற்றப்பட்டுள்ளன. பாடத்திட்டமும் புதிதாக
தயாரிக்கப்பட்டுள்ளது. புதிதாக கணினி அறிவியல், யோகா, விளையாட்டு போன்ற பல
பாடங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.
இந்த விதிமுறைகள் தமிழகத்தில் அமல்படுத்தக்கூடாது
என்று, ஆசிரியர் கல்வியியல் கல்லுாரிகள் சார்பில், உயர் நீதிமன்றத்தில்
வழக்குத் தொடரப்பட்டு, நிலுவையில் உள்ளது.இந்நிலையில், மத்திய அரசின் தேசிய
ஆசிரியர் கல்வியியல் கவுன்சில் பிறப்பித்த உத்தரவில், அனைத்து
மாநிலங்களும், புதிய விதிமுறைகளை, புதிய கல்வி ஆண்டில் கண்டிப்பாக
செயல்படுத்த வேண்டும் என, எச்சரித்துள்ளது. இதன்படி, தமிழகத்தில் இந்த
ஆண்டு, 690 கல்லுாரிகளுக்கு இரண்டாண்டு படிப்புக்கு அனுமதி வழங்கியுள்ளது.
இரண்டாண்டு ஆசிரியர் படிப்பு, இந்தாண்டு முதல் அமலாகும்; புதிய விதிமுறைகளை
அமல்படுத்த வேண்டுமென்றும், தமிழக அரசு, தமிழக ஆசிரியர் கல்வியியல்
பல்கலைக்கு கடிதம் அனுப்பியுள்ளது. இதைத் தொடர்ந்து, அனைத்து
கல்லுாரிகளுக்கும், ஆசிரியர் கல்வியியல் பல்கலை துணைவேந்தர் விஸ்வநாதன்,
அவசரக் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.
அதில், 'வரும் புதிய கல்வி ஆண்டு முதல் அனைத்து கல்வியியல் கல்லுாரிகளும்,
மத்திய அரசின், 2014 புதிய விதிமுறைகளைக் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்.
உயர் நீதிமன்ற உத்தரவின்படி, இந்த உத்தரவு மாறுபடும்' என,
தெரிவிக்கப்பட்டுள்ளது