திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ஜூலை 8-ஆம் தேதி வெளியிட்ட செய்திக் குறிப்பில், ஒன்று முதல் 10-ஆம் வகுப்பு வரை பயிலும் கிறிஸ்தவர்கள், முஸ்லிம்கள், புத்த மதத்தினர், சீக்கியர்கள், பார்சியர்கள், ஜெயின் வகுப்பைச் சேர்ந்தவர்கள் உள்ளிட்டோருக்கு 2015-16-ஆம் கல்வி ஆண்டுக்கான கல்வி உதவித் தொகை வழங்கப்படவுள்ளது. இதற்கான விண்ணப்பங்களை உரிய ஆவணங்களை இணைத்து அந்தந்த கல்வி நிலையங்களில் சமர்ப்பிக்க வேண்டும். இதை உரிய தணிக்கை செய்து கல்வி நிறுவனங்கள் மாவட்ட சிறுபான்மை நல அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும் எனக் கூறியிருந்தார்.
இந்த நிலையில், திருவள்ளூர் மாவட்டத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மெட்ரிக். பள்ளிகள் உள்ளன. இதுவரை 100 மெட்ரிக். பள்ளிகளில் இருந்து கூட விண்ணப்பங்கள் வந்து சேரவில்லை.
இதுகுறித்து பெற்றோர்கள் கூறியதாவது:
விண்ணப்பப் படிவங்களைப் பூர்த்தி செய்து பள்ளியில் எடுத்துச் சென்று கொடுத்தால், பள்ளி நிர்வாகத்தினர் உத்தரவு ஏதும் வரவில்லை என அலட்சியமாக கூறுகின்றனர். இதுகுறித்த விவரங்களைக் கூறினால், விண்ணப்பத்தில் கையெழுத்திட்டு தருகிறோம். அதற்கு மேல் எதுவும் தெரியாது எனக் கூறுகின்றனர்.
பூர்த்தி செய்த விண்ணப்பப் படிவத்தை சிறுபான்மை நல அலுவலகத்துக்குக் கொண்டு சென்றால், பள்ளி நிர்வாகத்தினர் மூலமாக மொத்தமாக வர வேண்டும் எனத் திருப்பி அனுப்புகின்றனர்.
அடிக்கடி பெற்றோர்கள் கூட்டம் நடத்தும் பள்ளிகள், இதுபோல் அரசு திட்டம் உள்ளது. உங்களது பிள்ளைகளுக்கு விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்து கொடுங்கள் என இதுவரை எந்தப் பள்ளியும் அறிவிக்கவில்லை. இதனால் அரசு மாணவர்களுக்கு உதவித் தொகை வழங்கியும், அது முழுமையாக உரியவரைச் சென்று சேருவதில்லை என்றனர்.
எனவே மாணவர்களுக்கு அரசு கல்வி உதவித் தொகை கிடைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.








