நாளுக்கு நாள் உலகம் மாறிக் கொண்டே இருக்கிறது. புதிது புதிதாகத் தேவைகள் உருவாகின்றன. பழைய சூழ்நிலைகள் மாறி புதிய சூழ்நிலைகள் உருவாகின்றன. உங்கள் தொழிலைத் தீர்மானிக்கும் மனிதர்கள் மாறுகிறார்கள். நேற்று வெற்றியை ஏற்படுத்திய வழிமுறைகள் இன்று அதே விளைவுகளை ஏற்படுத்தத் தவறுகின்றன. இப்படிப்பட்ட நேரத்திலும் ஒரே போல் எப்போதும் கண்களை மூடிக் கொண்டு உழைப்பது தான் செக்குமாட்டின் உழைப்பு. இப்படி உழைத்து விட்டு உயரவில்லையே என்று வருத்தப்படுவதில் பயனில்லை.
உயர வைக்கும் உழைப்பு எப்படி இருக்க வேண்டும்?
*செய்யும் செயல் நமது அறிவுக்கும் திறமைக்கும் ஏற்றதாக இருக்க வேண்டும்.
*என்ன செய்கிறோம், ஏன் செய்கிறோம், கிடைக்கக்கூடிய பலன் என்ன, அது உழைப்பிற்குப் போதுமானது தானா என்பதை எப்போதும் தெளிவாக அறிந்திருங்கள்.
*நாம் செயல்புரிகிற விதம் கச்சிதமானது தானா, மற்றவர்கள் எப்படிச் செய்கிறார்கள், நம்மை விட அவர்கள் செயல்புரிகிற விதம் சிறந்ததாக உள்ளதா என்பதை விருப்பு வெறுப்பில்லாமல் பார்க்க வேண்டும். அப்படி நம்மை விடச் சிறப்பாக இருந்தால் அதைப் பின்பற்றத் தயங்கக்கூடாது. நம்முடைய வழிமுறை என்பதற்காக தரம் குறைந்த ஒன்றை கண்ணைமூடிப் பின்பற்றும் முட்டாள்தனத்தை செய்யக்கூடாது.
*செய்யும் செயலில் ஈடுபாடும், முழுக் கவனமும் இருக்க வேண்டும். செய்யச் செய்ய செயலில் நாளுக்கு நாள் மெருகு கூடா விட்டால், தரம் உயரா விட்டால், செயலைக் கச்சிதமாகச் செய்து முடிக்கும் நேரம் கணிசமாகக் குறையா விட்டால் நமக்குள்ள ஈடுபாட்டிலோ, கவனத்திலோ குறை உள்ளது என்பது பொருள்.
*நம் தொழில் சம்பந்தமாக புதிது புதிதாக வரும் மாற்றங்களை கண்டிப்பாக கவனித்து வர வேண்டும்.
*சரியாகச் செய்தும், முயன்றும் போதிய பலன் தராத தொழிலை விட்டுவிடத் தெரிய வேண்டும். 'செண்டிமெண்டல்' காரணங்களுக்காக அதைத் தொடர்ந்து செய்வது முட்டாள்தனம்.
*இதை விட்டால் வேறு வழியில்லை, இது தான் எனக்கு விதித்திருக்கிறது, இதைத் தவிர வேறு எதற்கும் லாயக்கற்றவன் என்று நம்மை நாமே மட்டுப்படுத்திக் கொள்ளக் கூடாது. புதியதை முயன்று பார்க்கத் தயங்கக்கூடாது. முயன்று பார்த்தால் ஒழிய நம் உள்ளே உள்ள திறமைகளை நாம் அறிய முடியாது.
இப்படி எல்லா அம்சங்களையும் உள்ளில் கொண்டு உழைக்கும் உழைப்பே உயர்வைத் தரும்.








