குரூப் 1 தேர்வுக்கு விண்ணப்பிக்க ஞாயிற்றுக்கிழமை (ஆக.
9) கடைசி நாளாகும். இதுவரை 1.6 லட்சம் பேர் தங்களது விண்ணப்பங்களை
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய இணையதளம் மூலம் பதிவேற்றம்
செய்துள்ளனர்.
துணை ஆட்சியர், மாவட்ட துணை கண்காணிப்பாளர் உள்பட பல
முக்கியப் பதவிகள் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் குரூப் 1
தொகுதியில் வருகின்றன. இந்தத் தொகுதியில் காலியாகவுள்ள பணியிடங்களுக்கு
இப்போது தேர்வு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இதற்கான தேர்வு அறிவிக்கை கடந்த ஜூலை 10-ஆம் தேதி
வெளியிடப்பட்டது. அதன்படி, 19 துணை ஆட்சியர் பணியிடங்களும், 26 மாவட்ட துணை
கண்காணிப்பாளர் பணியிடங்களும், வணிகவரித் துறையில் 21 உதவி ஆணையாளர்
பணியிடங்களும், மாவட்டப் பதிவாளர் இடங்கள் 8-ம் காலியாக உள்ளன. இந்த
காலியிடங்களுக்கு விண்ணப்பிக்க ஆகஸ்ட் 9-ஆம் தேதி கடைசி நாள் என
அறிவிக்கப்பட்டிருந்தது.
இதுவரை 1.6 லட்சம் பேர்: குரூப் 1
முதல்நிலைத் தேர்வை எழுதுவதற்கு இதுவரை தமிழகம் முழுவதும் இருந்து 1.6
லட்சம் பேர் விண்ணப்பம் செய்துள்ளனர். தேர்வுக்கு விண்ணப்பிக்க
ஞாயிற்றுக்கிழமை (ஆக. 9) கடைசி நாளாகும். ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு வரை
விண்ணப்பிக்கலாம். தேர்வுக்கென தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின்
இணையதளத்தில் (ஜ்ஜ்ஜ்.ற்ய்ல்ள்ஸ்ரீ.ஞ்ர்ஸ்.ண்ய்) பிரத்யேக விண்ணப்பம்
உள்ளது. இந்த விண்ணப்பத்தை நிறைவு செய்தவர்கள், தேர்வுக்கான கட்டணத்தைச்
செலுத்த ஆகஸ்ட் 11-ஆம் தேதி கடைசியாகும். முதல்நிலைத் தேர்வு நவம்பர் 8-ஆம்
தேதி நடைபெறுகிறது.
குரூப் 1 தேர்வை எழுதுவதற்கு ஏதாவது ஒரு
பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருந்தால் போதும். குறைந்தபட்ச வயது வரம்பு
21. அதிகபட்ச வயது வரம்பு 30 முதல் 35 ஆகும். முதல்நிலைத் தேர்வானது 3 மணி
நேரம் நடைபெறும். மொத்தம் 300 மதிப்பெண்களுக்கு கேள்விகள் கேட்கப்படும்.
பொதுவான பிரிவில் இருந்து 150 கேள்விகளும், அறிவுக்கூர்மையைப்
பரிசோதிக்கும் வகையில் 50 கேள்விகளும் என மொத்தம் 200 கேள்விகள்
கேட்கப்படும். முதல்நிலைத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள், பிரதானத் தேர்வை
எழுத அனுமதிக்கப்படுவர். பட்டதாரிகளும், ஏற்கெனவே அரசுத் துறைகளில் சாதாரண
நிலைகளில் பணிபுரிபவர்களும் (வயது வரம்புத் தகுதியுள்ளவர்கள்) குரூப் 1
பிரதானத் தேர்வுக்கு அதிக அளவில் விண்ணப்பித்து வருவதாக தேர்வாணைய
வட்டாரங்கள் தெரிவித்தன.