கிராம நிர்வாக அலுவலர் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு இரண்டாம் கட்டக்
கலந்தாய்வு வருகிற செப்டம்பர் 2-ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் திங்கள்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:தமிழ்நாடு
அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால், 2013-14-ஆம் ஆண்டுகளுக்கான கிராம
நிர்வாக அலுவலர் பதவிக்கான எழுத்துத் தேர்வு கடந்த ஆண்டு ஜூனில்
நடத்தப்பட்டது. அதற்கான தேர்வு முடிவுகள் கடந்த ஆண்டு டிசம்பரில் வெளியானது. இரண்டாம்
கட்ட கலந்தாய்வில் மீதமுள்ள 660 காலிப் பணியிடங்களுக்கு தாற்காலிகமாக
தேர்வு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு-
கலந்தாய்வு முறையிலான ஒதுக்கீடு செப்டம்பர் 2-ஆம் தேதி முதல் 11-ஆம் தேதி
வரை அரசுப் பணியாளர் தேர்வாணைய அலுவலகத்தில் நடைபெறும்.
சான்றிதழ்
சரிபார்ப்பு- கலந்தாய்வுக்கு அழைக்கப்படும் விண்ணப்பதாரர்களின் பதிவெண்கள்
அடங்கிய தாற்காலிகப் பட்டியல் தேர்வாணைய இணையதளத்தில் (www.tnpsc.gov.in)
வெளியிடப்பட்டுள்ளது.சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வில் கலந்து கொள்வதற்காக அழைக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் அவர்கள் பெற்றுள்ள மதிப்பெண்கள், தரவரிசை, அவர்களின் இட ஒதுக்கீட்டுப் பிரிவு, விண்ணப்பத்தில் அளித்துள்ள தகவல்கள், தகுதியுடைமை, நிலவும் காலிப் பணியிடங்களுக்கு ஏற்ப அனுமதிக்கப்படுவர் என்று தனது அறிவிப்பில் டி.என்.பி.எஸ்.சி. தெரிவித்துள்ளது.