தகவல் தொடர்பு மேம்பாட்டுக்கான ‘ஜி சாட்–6’ செயற்கைகோளை சுமந்தப்படி
‘ஜி.எஸ்.எல்.வி’ – டி6 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.
இதைத்தொடர்ந்து, இந்திய விஞ்ஞானிகளுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்து
உள்ளது.
‘ஜி.எஸ்.எல்.வி’ –டி6 ராக்கெட்
விண்வெளி ஆய்வு தொழில்நுட்பத்தில் இந்தியா பல்வேறு சாதனைகளை
படைத்து வருகிறது. இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ)
செயற்கைகோள்களையும், அவற்றை விண்ணில் ஏவுவதற்கான ‘பி.எஸ்.எல்.வி‘,
‘ஜி.எஸ்.எல்.வி‘, ஆகிய இரு வகை ராக்கெட்டுகளையும் தயாரித்து வருகிறது.
அந்த வகையில், தகவல் தொடர்பு மேம்பாட்டுக்காகவும், காலநிலையை முன்கூட்டியே
தெரிந்துகொள்வதற்காகவும் ‘ஜி சாட்–6‘ என்ற செயற்கைகோளை இந்திய விஞ்ஞானிகள்
உருவாக்கினார்கள். இந்த செயற்கை கோளை, சென்னையை அடுத்த ஸ்ரீஹரிகோட்டாவில்
உள்ள சதீஷ்தவான் விண்வெளி மைய ஏவுதளத்தில் இருந்து ‘ஜி.எஸ்.எல்.வி – டி6‘
ராக்கெட் மூலம் நேற்று விண்ணில் செலுத்த திட்டமிடப்பட்டது. இதற்கான இறுதிக்
கட்ட ஆயத்த பணிகள் எனப்படும் 29 மணி நேர ‘கவுண்ட்டவுன்’, நேற்று முன்தினம்
காலை 11.52 மணிக்கு தொடங்கியது.
விண்ணில் சீறிப்பாய்ந்தது
திட்டமிட்டபடி, நேற்று மாலை 4.52 மணிக்கு ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள
2–வது ஏவுதளத்தில் இருந்து ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.
2,117 கிலோ எடை கொண்ட ஜி சாட்–6 செயற்கைகோளை சுமந்து கொண்டு ஜி.எஸ்.எல்.வி –
டி6 ராக்கெட் தீப்பிழம்பை கக்கியபடி விண்ணை நோக்கி சீறிப்பாய்ந்து
சென்றது. ராக்கெட்டின் முதல் இரண்டு நிலைகள் எரிந்து முடிந்ததும்,
மூன்றாவது நிலையில் பொருத்தபட்டு இருந்த ‘கிரையோஜெனிக்’ என்ஜின்
வெற்றிகரமாக இயங்கி செயற்கைகோளை விண்வெளியில் குறிப்பிட்ட உயரத்துக்கு
கொண்டுசென்று புவி வட்டப்பாதையில் நிலைநிறுத்தியது.
அதாவது,
ஏவுதளத்தில் இருந்து புறப்பட்ட 17 நிமிடம் 4 வினாடிகளில், பூமியில் இருந்து
214.35 கிலோ மீட்டர் உயரத்தை எட்டியதும், ராக்கெட்டில் இருந்து செயற்கை
கோள் வெற்றிகரமாக பிரிந்தது. அந்த உயரத்தில் செயற்கை கோள்
நிலைநிறுத்தப்பட்டது. பூமியில் இருந்து குறைந்தபட்சமாக 214.35 கிலோ மீட்டர்
தொலைவிலும், அதிகபட்சமாக 35 ஆயிரத்து 925 கிலோ மீட்டர் தொலைவிலும் செயற்கை
கோள் பூமியை சுற்றி வருகிறது.
விஞ்ஞானிகள் மகிழ்ச்சி
ராக்கெட் வெற்றிகரமாக பறந்ததும், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள
கட்டுப்பாட்டு அறையில் கூடி இருந்த விஞ்ஞானிகள் மிகுந்த மகிழ்ச்சி
அடைந்தனர். இந்திய விண்வெளி ஆராய்ச்சி மைய இயக்குனர் ஏ.எஸ்.கிரண்குமார்
மிகவும் உற்சாகத்துடன் காணப்பட்டார். அவர் இஸ்ரோ விஞ்ஞானிகள்,
என்ஜினீயர்கள் மற்றும் ஊழியர்களுடன் கைகுலுக்கி வாழ்த்துகளை
பரிமாறிக்கொண்டார்.
ராக்கெட் விண்ணில் செலுத்தப்படுவதை பார்வையிட
ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள இஸ்ரோ அலுவலக கட்டிடங்களின் மாடியில் இஸ்ரோ
அதிகாரிகளின் குடும்பத்தினரும், பத்திரிகையாளர்களும் கூடிநின்றனர்.
அவர்களும் தங்கள் மகிழ்ச்சியை பகிர்ந்துகொண்டனர்.
இதுகுறித்து இஸ்ரோ தலைவர் ஏ.எஸ்.கிரண்குமார் மற்றும் விஞ்ஞானிகள் நிருபர்களிடம் கூறியதாவது:–
கிரையோஜெனிக் எந்திரம்
வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்ட இந்த ராக்கெட் இந்தியாவின்
9–வது ‘ஜி.எஸ்.எல்.வி’. ராக்கெட் ஆகும். இதில் அனுப்பப்பட்ட 2 ஆயிரத்து 117
கிலோ கிராம் எடை கொண்ட ‘ஜி சாட்–6‘, செயற்கைகோள் வரிசையில் 12–வது
செயற்கைகோள் ஆகும். உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட ‘கிரையோஜெனிக்‘ என்ஜின்
உதவியுடன் ராக்கெட் செலுத்தப்பட்டு உள்ளது. ஏற்கனவே கடந்த ஆண்டு ஜனவரி 5–ந்
தேதி, உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட கிரையோஜெனிக் என்ஜின் பொருத்தப்பட்ட
ராக்கெட் வெற்றிகரமாக செலுத்தப்பட்டது. அதைத்தொடர்ந்து இப்போது மீண்டும்
சாதனை நிகழ்த்தப்பட்டு இருக்கிறது.
ஜி சாட்–6 செயற்கை கோளில்
‘எஸ்.பேண்ட்’ தொலைத்தொடர்பு வசதிக்காக இஸ்ரோ புதிதாக 6 மீட்டர் விட்டத்தில்
மிகப்பெரிய ‘ஆன்டெனா’ ஒன்று பொருத்தப்பட்டு உள்ளது. இஸ்ரோ தயாரித்த
ஆன்டெனாக்களிலேயே இது மிகவும் பெரியதாகும். செல்போன் போன்ற மிகச்சிறிய
மின்னணு சாதனங்களிலிருந்து அனுப்பப்படும் சிக்னல்களையும் முழுமையாக பெற்று
தரும் வசதியை இந்த ‘ஆன்டெனா’ ஏற்படுத்தி தரும். மேலும் தகவல்தொடர்பு
மற்றும் காலநிலை மாற்றங்களை முன்கூட்டியே அறிந்துகொள்ள இது பேருதவியாக
இருக்கும். இது இந்திய விஞ்ஞானிகளின் மிகப்பெரிய சாதனையாகும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
பிரதமர் மோடி வாழ்த்து
‘ஜி.எஸ்.எல்.வி’. டி–6 ராக்கெட்டை வெற்றிகரமாக விண்ணில் செலுத்திய
இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, பிரதமர் மோடி ஆகியோர்
தங்கள் வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்து உள்ளனர்.
‘ஜி
சாட்–6’ செயற்கைகோளுடன் ராக்கெட்டை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தி மற்றொரு
வியத்தகு சாதனை புரிந்துள்ள நமது விஞ்ஞானிகளுக்கு வாழ்த்துகளை தெரிவித்துக்
கொள்வதாக பிரதமர் மோடி டுவிட்டரில் எழுதி இருக்கிறார்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...