புடைசூழ வந்தார்
தமிழக அரசின் சார்பில் சென்னை ஜார்ஜ் கோட்டையில் சுதந்திர தின விழா நிகழ்ச்சிகள் நேற்று நடைபெற்றன. இதில் கலந்து கொள்வதற்காக போயஸ் தோட்ட இல்லத்தில் இருந்து நேற்று காலை 8.20 மணிக்கு காரில் முதல்-அமைச்சர் ஜெயலலிதா புறப்பட்டார்.
மரபுப்படி அறிமுகம்
அங்கு அவரை தலைமைச் செயலாளர் கு.ஞானதேசிகன் வரவேற்றார். அங்கிருந்த தென்னிந்திய பகுதிகளின் தலைமைப் படைத் தலைவர் லெப்டினெட் ஜெனரல் ஜக்பீர் சிங், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி கடற்படை பொறுப்பு அதிகாரி கமோடர் அலோக் பட்னாகர், தாம்பரம் விமானப்படைத் தளம் விமானப்படை அதிகாரி ஏர் கமோடர் ரிப்பன் குப்தா, கிழக்கு மண்டல கடலோரக் காவல்படை கமாண்டர் ஐ.ஜி. எஸ்.பி.ஷர்மா
தமிழக டி.ஜி.பி. அசோக்குமார், கூடுதல் டி.ஜி.பி. (சட்டம் ஒழுங்கு) டி.கே.ராஜேந்திரன், சென்னை போலீஸ் கமிஷனர் எஸ்.ஜார்ஜ் ஆகியோரை மரபுப்படி முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு தலைமைச் செயலாளர் அறிமுகம் செய்து வைத்தார்.
அணிவகுப்பு மரியாதை
பின்னர் அணிவகுப்பு மரியாதையை ஏற்கும் மேடைக்கு முதல்-அமைச்சர் ஜெயலலிதாவை தலைமைச் செயலாளர் அழைத்துச் சென்றார். அங்கிருந்தபடி போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை அவர் ஏற்றுக் கொண்டார்.
பின்னர் அவர் திறந்த ஜீப்பில் ஏறிச் சென்று, போலீஸ் அணிவகுப்பை பார்வையிட்டார். அப்போது அங்கு கூடியிருந்த பொதுமக்களுக்கு கையசைத்து வாழ்த்து தெரிவித்தார். அவருடன் அணிவகுப்புத் தலைவர் சென்றார்.
சுதந்திர தின உரை
பின்னர் 8.35 மணிக்கு கோட்டை கொத்தளத்திற்கு முதல்-அமைச்சர் ஜெயலலிதா வந்தார். 8.40 மணிக்கு அங்கிருந்த மூவர்ண தேசியக் கொடியை முதல்-அமைச்சர் ஜெயலலிதா ஏற்றினார். அப்போது கொடியில் இருந்து உதிரி மலர்கள் சிந்தின. மூவர்ண பலூன்கள் பறக்கவிடப்பட்டன. கொடிக்கு முதல்-அமைச்சர் ஜெயலலிதா சல்யூட் அடித்து வணக்கம் செலுத்தினார்.
அப்போது போலீஸ் பேண்டு வாத்தியக் குழுவினர் தேசிய கீதத்தை இசைத்தனர். அப்போது அனைவரும் எழுந்து நின்றனர். அதைத் தொடர்ந்து அங்கிருந்தபடி, 8.42 மணிக்கு சுதந்திர தின உரையை முதல்-அமைச்சர் ஜெயலலிதா தொடங்கினார். 12 நிமிடங்கள் அவரது உரை நீடித்தது.
விருதுகள் வழங்கினார்
அப்போது, சுதந்திர போராட்ட வீரர்கள் மற்றும் அவர்களின் வாரிசுகளுக்கான ஓய்வூதிய உயர்வு உள்ளிட்ட சில அறிவிப்புகளை முதல்-அமைச்சர் ஜெயலலிதா வெளியிட்டார். 8.54 மணிக்கு உரையை நிறைவு செய்தார்.
அதன் பின்னர் சிறப்பாக பணியாற்றியவர்களுக்கான விருதுகளை முதல்-அமைச்சர் ஜெயலலிதா வழங்கினார். இந்த ஆண்டு முதல் முதலாக முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் பெயரிலான விருதை முதல்-அமைச்சர் ஜெயலலிதா வழங்கினார்.
இந்த விருதை அவரிடம் இருந்து இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் (இஸ்ரோ) திட்ட இயக்குனர் என்.வளர்மதி பெற்றுக் கொண்டார். அதைத் தொடர்ந்து மற்ற விருதுகளை உரியவர்களுக்கு முதல்-அமைச்சர் ஜெயலலிதா வழங்கினார். இந்த விழா நிகழ்ச்சிகள் 9.05 மணிக்கு நிறைவடைந்தன.
குழந்தைகளுக்கு இனிப்புகள்
பின்னர் விருது பெற்றவர்களுடன் அவர் குழுப் புகைப்படம் எடுத்துக் கொண்டார். அதைத் தொடர்ந்து கோட்டை கொத்தளத்தில் போடப்பட்டிருந்த பந்தலில் அமர்ந்திருந்த குழந்தைகளுக்கு இனிப்புகள் வழங்கினார். அப்போது குழந்தைகளின் கன்னத்தை செல்லமாக தட்டிக் கொடுத்தும், அவர்களின் கையைக் குலுக்கியும் முதல்-அமைச்சர் ஜெயலலிதா வாழ்த்தினார்.
அதன் பின்னர் 9.15 மணிக்கு கோட்டையில் இருந்து முதல்-அமைச்சர் ஜெயலலிதா புறப்பட்டுச் சென்றார். அப்போது பொதுமக்களுக்கு காரில் இருந்தபடி கையசைத்து வாழ்த்துக்களை தெரிவித்தார்.
கலந்துகொண்டோர்
இந்த நிகழ்ச்சியை காண்பதற்காக கோட்டை கொத்தளத்துக்கு எதிரே பந்தல்கள் போடப்பட்டிருந்தன. அங்கு முக்கியஸ்தர்கள் அமர்ந்திருந்தனர். இந்த நிகழ்ச்சியில் பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை, தமிழக சட்டசபை சபாநாயகர் தனபால், அமைச்சர்கள் ஓ.பன்னீர்செல்வம், நத்தம் விஸ்வநாதன் உள்ளிட்ட தமிழக அமைச்சர்கள்
ஐகோர்ட்டு மற்றும் கீழமை கோர்ட்டு நீதிபதிகள், அ.தி.மு.க. எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், தே.மு.தி.க. அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள், கூட்டணிக் கட்சி நிர்வாகிகள், ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகள், அவர்கள் குடும்பத்தினர், அரசு ஊழியர்கள் உட்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர். சுதந்திர தின நிகழ்ச்சிகள் அனைத்தும் திட்டமிட்ட நேரத்திற்கு 10 நிமிடங்கள் முன்னதாக நடைபெற்று முடிந்தன.