சுதந்திர தியாகிகள்
சுதந்திர தினத்தையொட்டி தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதா தலைமை செயலகத்தில் உள்ள கோட்டை கொத்தளத்தில் தேசிய கொடியை ஏற்றி வைத்து உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:-
பாட்டுக்கொரு புலவன் பாரதி, “தேசியமும், தெய்வீகமும் எனது இரு கண்கள்” என்று சொன்ன பசும்பொன் முத்துராமலிங்க தேவர், வீரமங்கை வேலு நாச்சியார், வீரமங்கை வேலுநாச்சியாரின் படை தளபதி வீரத் தாய் குயிலி, வட இந்தியாவை சேர்ந்த பகத் சிங், குருதேவ், ராஜகுரு என எண்ணற்ற வீரர்களை நெஞ்சில் நினைத்து போற்றுவதற்கும், அவர்களின் புகழை பாடுவதற்கும், அவர்களின் தியாகங்களை நினைவு கூறுவதற்கும், இந்த சுதந்திர திருநாளை நாம் இங்கே இன்று கொண்டாடிக் கொண்டு இருக்கிறோம்.
பொருளாதார சுதந்திரம்
சுதந்திரத்தின் இலக்கணம் என்ன என்பது ஒவ்வொருவரின் மனப்பாங்கை பொறுத்து அமைகிறது. இருப்பினும் சுதந்திரத்தின் அடித்தளமாக ஆணிவேராக, அச்சாணியாக விளங்குவது பொருளாதார சுதந்திரம். பொருளாதார சுதந்திரம் என்பது இன்றியமையாத தேவைகள் அனைத்தையும் நிறைவேற்றிக் கொள்ளும் வகையிலும், பிறரை சார்ந்திராமல் சொந்த காலில் நிற்பதை உறுதி செய்யும் வகையிலும், அனைவருக்கும் வாய்ப்புகள் கிடைக்க பெறுதலே ஆகும்.
அனைவருக்கும் தேவையான வாழ்வாதாரம் கிடைப்பதும், சமூக ரீதியில் ஏற்ற தாழ்வுகள் இல்லாத நிலையுமே உண்மையான சுதந்திரம் அனைவருக்கும் கிடைக்கப் பெற்றுள்ளதை பறைசாற்றுவதாக அமையும்.
“ஏழை யென்றும் அடிமை யென்றும் எவனுமில்லை சாதியில்;
சாதியில் இழிவு கொண்ட மனிதரென்பர் இந்தியாவில் இல்லையே!” என்ற மகாகவி பாரதியாரின் பாடல் வரிகளே சுதந்திரம் என்பதற்கான உள்ளார்ந்த பொருள்.
கல்விக்கு முக்கியத்துவம்
இதையே தான் நமது ஆன்றோர்களும், சான்றோர்களும்
“ ஏழை ஈடேற வேண்டும்
ஏழை உரிமை பெற வேண்டும்
சாதி பேதம் ஒழிய வேண்டும்
ஒற்றுமை மலர வேண்டும்” என்று கூறினர்.
பாரதி கண்ட கனவை நனவாக்கும் வகையில் “ எல்லோரும் எல்லாமும் பெற வேண்டும்; இங்கு இல்லாமை இல்லாத நிலை வேண்டும்” என்ற லட்சியத்தை இலக்காக கொண்டு தமிழகம் அனைத்து துறைகளிலும் வளர்ச்சி பெறும் நடவடிக்கைகளை எனது தலைமையிலான அரசு கடந்த 4 ஆண்டுகளாக எடுத்து வருகிறது.
ஏழைகள் ஏற்றம் பெறுவதற்கு அடித்தளமாக விளங்கும் அறிவை தரக்கூடிய கல்விக்கு எனது அரசு மிகுந்த முக்கியத்துவம் அளித்து வருகிறது. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் அனைவருக்கும் கட்டணமில்லா கல்வி, ஆண்டுதோறும் 4 இணை விலையில்லா சீருடைகள், உபகரணங்கள் ஆகியவை வழங்கப்பட்டு வருகின்றன.
72,843 ஆசிரியர்கள் நியமனம்
இவையன்றி விலையில்லா மிதிவண்டிகள் மற்றும் மடிக்கணினிகள் வழங்கப்பட்டு வருகின்றன. இடை நின்றலை தவிர்க்கும் வகையில் 10-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ-மாணவியருக்கு 5 ஆயிரம் ரூபாய் ஊக்கத் தொகை வழங்கப்பட்டு வருகின்றது. தமிழக வரலாற்றிலேயே இதுவரை இல்லாத அளவிற்கு கடந்த 4 ஆண்டுகளில் மட்டும் 72,843 ஆசிரியர்கள் பணி நியமனம் செய்யப்பட்டு இருக்கிறார்கள். 1,319 பள்ளிகள் தரம் உயர்த்தப்பட்டுள்ளன. 182 தொடக்க பள்ளிகள் புதிதாக தொடங்கப்பட்டுள்ளன.
உயர் கல்வியை பொறுத்த வரையில் கடந்த 4 ஆண்டுகளில் 4 அரசு பொறியியல் கல்லூரிகள் உள்ளிட்ட 53 கல்லூரிகள் தொடங்கப்பட்டுள்ளன. தேசிய சட்டப் பள்ளி தொடங்கப்பட்டுள்ளது. அனைத்து தரப்பு மக்கள் குறிப்பாக ஏழை, எளிய மக்கள் உடல் நலன் பேணும் வகையில் பற்பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
பெண்கள் திருமணஉதவி திட்டம்
முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டம், 12 ஆயிரம் ரூபாய் நிதியுதவி வழங்கும் மகப்பேறு உதவி திட்டம், வளரிளம் பெண்களுக்கு விலையில்லா சானிடரி நாப்கின் வழங்கும் திட்டம் என பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. 122 ஆரம்ப சுகாதார நிலையங்கள் 30 படுக்கை வசதி கொண்ட மருத்துவமனைகளாக மாற்றப்பட்டுள்ளன. இவை தவிர புதிதாக 172 ஆரம்ப சுகாதார நிலையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் வகையில் விலையில்லா அரிசி வழங்கும் திட்டம், சிறப்பு பொது வினியோக திட்டம், தாலிக்கு தங்கத்துடன் 50 ஆயிரம் ரூபாய் வரை நிதி உதவி வழங்கும் திருமண உதவி திட்டம் ஆகியன செயல்படுத்தப்பட்டு வருகின்றன. கடந்த 4 ஆண்டுகளில் சுமார் 6 லட்சம் பெண்கள் திருமண உதவி திட்டத்தின் கீழ் பயனடைந்துள்ளனர். இவர்களுக்கு 1,948 கோடி ரூபாய் நிதியுதவியும், 2,154 கிலோ தங்கமும் வழங்கப்பட்டுள்ளன.
நலன் காக்கும் திட்டங்கள்
மேலும் விலையில்லா மிக்சி கிரைண்டர் மற்றும் மின்விசிறி வழங்கும் திட்டம், மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் ஓய்வூதிய திட்டம், விலையில்லா கறவை பசுக்கள் மற்றும் வெள்ளாடுகள் வழங்கும் திட்டம் என பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இவை தவிர ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் வண்ணம் “அம்மா உணவகங்கள்”, “அம்மா குடிநீர்”, “அம்மா உப்பு”, “அம்மா மருந்தகங்கள்”, “அம்மா சிமெண்ட்”, “அம்மா திட்டம்” என எண்ணற்ற மக்கள் நலன் காக்கும் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
மின்வெட்டு என்ற பேச்சுக்கே இடமில்லாத வகையில் மின் உற்பத்தியை நாங்கள் பெருக்கி இருக்கிறோம். தொழில் வளர்ச்சி, வேலைவாய்ப்பு ஆகியவை ஏற்படுத்தப்பட்டு உள்ளன. அடுத்த மாதம் நடைபெற உள்ள தொழில் முதலீட்டார்கள் மாநாட்டில் ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கும் மேலான முதலீடுகள் கிடைக்கப் பெறும். மொத்தத்தில் நான்காண்டு ஆட்சியில் நாலாபுறமும் வளர்ச்சி ஏற்பட்டு இருக்கிறது. மக்கள் உள்ளம் துள்ளும் அளவுக்கு துறைதோறும் ஒளி வெள்ளம் ஏற்பட்டு இருக்கிறது.
ஓய்வூதியம் உயர்வு
69-வது சுதந்திர தினத்தை கொண்டாடும் இந்த தருணத்தில் சுதந்திர போராட்ட வீரர்களை கவுரவிக்கும் வகையில், அவர்களுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் ஓய்வூதியம் 10 ஆயிரம் ரூபாயில் இருந்து 11 ஆயிரம் ரூபாயாகவும், அவர்களின் வாரிசுதாரர்களுக்கு வழங்கப்பட்டு வரும் குடும்ப ஓய்வூதியம் 5 ஆயிரம் ரூபாயில் இருந்து 5,500 ரூபாயாக உயர்த்தப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். இதன் மூலம் 1,881 நபர்கள் பயன் அடைவார்கள். இதனால் அரசுக்கு ஆண்டு ஒன்றிற்கு 1 கோடியே 37 லட்சத்து 16 ஆயிரம் ரூபாய் கூடுதல் செலவு ஏற்படும்.
லட்சியப் பாதையில் பயணம்
இது தவிர விடுதலை போராட்டத்தில் பங்கு கொண்டு நாட்டிற்காக சிறப்புற பணியாற்றியவர்களின் தியாகங்களை போற்றும் வகையில், அவர்களது வாரிசுதாரர்களுக்கு சிறப்பு ஓய்வூதியம் வழங்கப்பட்டு வருகிறது. மருது சகோதரர்களின் வழித்தோன்றல்கள், முத்துராமலிங்க விஜய ரகுநாத சேதுபதியின் வழித்தோன்றல்கள், வ.உ.சிதம்பரனாரின் பேரன் ஆகியோர் பெற்று வரும் 4,500 ரூபாய் சிறப்பு ஓய்வூதியம் இனி 5 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.
இதன் மூலம் 185 நபர்கள் பயனடைவர். இதனால் அரசுக்கு ஆண்டொன்றுக்கு 11 லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் கூடுதல் செலவு ஏற்படும். “ஒட்டுமொத்த வளர்ச்சி; அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி” என்ற லட்சிய பாதையில் தொடர்ந்து நாங்கள் பயணிப்போம் என்ற உறுதிமொழியை தெரிவித்துக்கொள்கிறேன்.
இவ்வாறு ஜெயலலிதா பேசினார்.