அப்துல்கலாம் பெயரில் முதல் விருது
ஆண்டு தோறும் சுதந்திர தின விழாவின்போது, சாதனையாளர்களுக்கு முதல்- அமைச்சரால் விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. விஞ்ஞான சாதனையாளர்களுக்கு இந்த ஆண்டில் இருந்து, மறைந்த முன்னாள் ஜனாதிபதி ஏ.பி.ஜே.அப்துல்கலாம் பெயரில் விருது வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் ஜெயலலிதா ஏற்கனவே அறிவித்திருந்தார்.
சென்னை கோட்டையில் நேற்று நடைபெற்ற சுதந்திர தினவிழாவின் போது அந்த விருதை முதல்-அமைச்சர் ஜெயலலிதாவிடம் இருந்து வளர்மதி பெற்றுக்கொண்டார். அப்துல்கலாம் விருதைப் பெற்ற வளர்மதிக்கு ரூ.5 லட்சம் ரொக்கப்பரிசு, 8 கிராம் தங்கப் பதக்கம் ஆகியவை வழங்கப்பட்டன.
கல்பனா சாவ்லா விருது
துணிவு மற்றும் சாகச செயலுக்கான தமிழக அரசின் உயரிய விருதான கல்பனா சாவ்லா விருது, ஈரோடு மாவட்டம், கனகம்பாளையத்தைச் சேர்ந்த லாரி பெண் டிரைவர் ஜோதிமணிக்கு வழங்கப்பட்டது.
இவருக்கு ரூ.5 லட்சம் ரொக்கப் பரிசு மற்றும் ரூ.5 ஆயிரம் மதிப்புள்ள தங்கமுலாம் பூசப்பட்ட பதக்கம் வழங்கப்பட்டது.
மாற்றுத்திறனாளிகள் நலன் விருது
மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக மிகச்சிறந்த சேவையாற்றியவர்களுக்கும் விருதுகளை முதல்-அமைச்சர் ஜெயலலிதா நேற்று வழங்கினார்.
அதன்படி, சென்னை மருத்துவக் கல்லூரி பேராசிரியர் டாக்டர் எஸ்.சம்பத்குமார் (சிறந்த மருத்துவர்), தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் நலச்சங்க கூட்டமைப்பு பொதுச்செயலாளர் பி.சிம்மச்சந்திரன் (சிறந்த சமூகப் பணியாளர்),
திருநெல்வேலியில் உள்ள ஸ்காட் நிறுவனம் (சிறந்த தொண்டு நிறுவனம்), காஞ்சீபுரம் மாவட்டம், மேல்மருவத்தூரில் உள்ள ஆதிபராசக்தி அன்னை இல்லம் (சிறந்த தொண்டு நிறுவனம்), மாற்றுத்திறனாளிகளுக்கு அதிக அளவு வேலை வாய்ப்பு அளித்த காஞ்சீபுரம் மாவட்டம், பிளக்ஸ்ட்ரானிக்ஸ் நிறுவனம்,
சேலம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி (சிறந்த மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி) ஆகியோருக்கு மாற்றுதிறனாளிகளுக்கான சேவை விருதுகளை முதல்-அமைச்சர் ஜெயலலிதா வழங்கினார்.
மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக அரும்பணியாற்றிய மாவட்ட கலெக்டர்களாக த.பொ.ராஜேஷ் (கிருஷ்ணகிரி), எம்.ரவிகுமார் (தூத்துக் குடி), இல.சுப்பிரமணியன் (மதுரை) ஆகியோரின் பெயர்கள் இந்த விழாவில் வெளியிடப்பட்டன.
மகளிர் நலனுக்கான விருதுகள்
அதுபோல் மகளிர் நலனுக் காக சிறப்பாக தொண்டாற்றிய தொண்டு நிறுவனம் மற்றும் சமூகப் பணியாளர்களுக் கான விருதுகளையும் முதல்- அமைச்சர் ஜெயலலிதா நேற்று வழங்கினார். அதன்படி, தஞ்சாவூர் மாவட்டம், தில்லைஸ்தானம் ஸ்ரீவெங்கடேஸ்வரர் ஆதரவற்றோர் இல்லம் மற்றும் நாமக்கல் மாவட்டம் பொத்தனூரைச் சேர்ந்த ஆர்.சிவகாமவள்ளி அதற்கான விருதுகளை முறையே பெற்றுக்கொண்டனர்.
முதல்-அமைச்சரின் மாநில இளைஞர் விருதுகளை பெண்கள் பிரிவில் எஸ்.அன்னகாமு என்பவரும், ஆண்கள் பிரிவில் மணிமாறன், டெனித் ஆதித்யா ஆகியோரும் பெற்றுக்கொண்டனர்.
இந்த விருதுகளைப் பெற்றவர்கள் அளித்த பேட்டி வருமாறு:-
இஸ்ரோவுக்கு அர்ப்பணம்
என்.வளர்மதி:- அரியலூரைச் சேர்ந்த நான் நிர்மலா உயர்நிலைப் பள்ளியில் படித்தேன். பிறகு கோவை ஜி.சி.டி.யிலும், எம்.இ. பட்டப்படிப்பை அண்ணா பல்கலைக்கழகத்திலும் படித்தேன். எனது தந்தை தமிழக அரசின் ஊழியராக இருந்தார்.
இஸ்ரோவில் கடந்த 32 ஆண்டுகளாகப் பணியாற்றுகிறேன். செயற்கைக் கோள்களை உருவாக்குவது எனது பணி. ஏ.பி.ஜே.அப்துல்கலாம் பெயரிலான விருதை அளித்து என்னை கவுரவித்ததன் மூலம் இஸ்ரோ நிறுவனத்தை தமிழக அரசு கவுரப்படுத்தியுள்ளது. இந்த விருதை நான் இஸ்ரோவுக்கு அர்ப்பணிக்கிறேன்.
இளைஞர்களை உற்சாகப்படுத்தும்
இந்த விருதை எனக்கு வழங்கிய முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு நெஞ்சார்ந்த நன்றி. தமிழக அரசுக்கும், தமிழக மக்களுக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த விருது எனக்கு கிடைத்தது பெருமையையும், மகிழ்ச்சியையும் அளிக்கிறது.
வருங்கால இளைஞர் சமுதாயத்தினரையும், சமுதாய நற்பணி மற்றும் பொது சேவையில் இருப்பவர்களையும் ஊக்குவிக்கும், உற்சாகப்படுத்தும் விருதாக இது அமைந்துள்ளது. இந்த விருதை நிறுவியிருப்பது வரவேற்கத்தகுந்தது.
2012-ம் ஆண்டில் நிகழ்த்திய ரேடார் இமேஜிங் சாட்டிலைட் (ஆர்.ஐ.சாட்) என்ற தொழில்நுட்பம்தான் எனது சாதனையாக நான் கருதுகிறேன். நான் அந்த திட்டத்தின் இயக்குனர். அது ஒரு மைக்ரோ வேவ் ரிமோட் சென்சிங் சாட்டிலைட். 24 மணிநேரமும் செயல்படக் கூடியது. அதன்மூலம் படங்களை தொடர்ந்து எடுத்துக் கொண்டே இருக்கலாம்.
இது நாட்டுக்கு பல்வேறு விதங்களில் உதவிக்கொண்டிருக்கிறது. இதனால் பலர் பயனடைந்து இருக்கிறார்கள்.
லாரி ஓட்டும் பெண்
ஜி.ஜோதிமணி:- எனக்கு ஈரோடு மாவட்டம், கனகம்பாளையம் சொந்த ஊர். நான் கடந்த 6 ஆண்டுகளாக லாரி ஓட்டும் பெண்ணாக இருப்பதால், எனக்கு இந்த சாதனை விருதை முதல்-அமைச்சர் ஜெயலலிதா வழங்கியுள்ளார். இது எனக்கு பெருமையாக உள்ளது. லாரியை கணவருடனும், தனியாகவும் ஓட்டிச்செல்கிறேன்.
நான் ஓட்டுவது அசோக் லேலாண்ட் 10 சக்கரங்களைக் கொண்ட “ஹெவிவெகிக்கிள்’’ லாரியாகும். 4 ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் லாரியை ஓட்டி இருக்கிறேன். குஜராத் வரை லாரியை செலுத்திய சாதனை எனக்கு உண்டு. எனது தந்தை, கணவரும் லாரி டிரைவர்களாக உள்ளனர்.
வார்த்தைகளால் வந்த உணர்வு
எஸ்.அன்னகாமு:- மாற்றுத்திறனாளிகளுக்கு கடன், தொழில் உபகரணங்கள் வாங்கித் தருவது போன்ற சேவைகளை செய்து வருகிறேன். இலவச சட்ட சேவையையும் வழங்குகிறேன். இளம் பெண்களுக்காகவும் நான் பல நற்பணிகளை செய்து வருகிறேன்.
இதற்காக எனக்கு விருது அளித்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு நன்றி. நான் திருமணம் செய்யவில்லை. எங்கள் வீட்டில் 4 பெண்கள் உண்டு. ஏழ்மையான குடும்பத்தில் 2 பேர் மாற்றுத்திறனாளிகள். இவர்களால் என்ன சம்பாதித்து குடும்பத்தை காப்பாற்ற முடியும் என்று உறவினர்கள் கூறிய வார்த்தைகளால் ஏற்பட்ட உணர்வுதான் என்னை மாற்றுத்திறனாளிக் காக சேவையாற்றத் தூண்டியது.
எனக்கு ஏற்பட்ட துன்பம் வேறு மாற்றுத்திறனாளிக்கு ஏற்படக்கூடாது என்ற எண்ணத்தின் அடிப்படையில் செயல்படுகிறேன். பஞ்சாலை, கல்குவாரி பெண்களுக்கு எனது சேவை கிடைக்கிறது.
புதிய தொழில்நுட்பம்
எம்.டெனித் ஆதித்யா:- எனக்கு விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு. அங்குள்ள இந்து மேல்நிலைப்பள்ளி, ஐஐஎம். மெட்ரிக் பள்ளி ஆகியவற்றில் படித்தேன். எனக்கு 17 வயதாகிறது. எனது தந்தை வி.மாவேல்ராஜன். தற்போது 12-ம் வகுப்பு நிறைவு செய்துவிட்டு, கோவை எஸ்.வி.எஸ். பொறியியல் கல்லூரியில் படிக்கிறேன்.
அறிவியலில் புதிய கண்டுபிடிப்புகளுக்காக எனக்கு விருது வழங்கப்பட்டுள்ளது. 17 புதிய கண்டுபிடிப்புகளை கண்டுபிடித்துள்ளேன். வாழை இலையை பதப்படுத்தும் தொழில்நுட்பத்தை நான் கண்டுபிடித்தேன். இதன்மூலம் வாழை இலையை ஓராண்டுகள் கெடாமல் பாதுகாக்க முடியும். இதில் வேதிப்பொருள் சேராது. இதனால் பிளாஸ்டிக் பேப்பர்களை தவிர்க்கலாம்.
சர்வதேச விருதுகள்
மின்னலில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் எலக்ட்ரோ போல்ட்ஸ் என்பதும் எனது கண்டுபிடிப்புதான்; முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாமிடமும் விருது பெற்றிருக்கிறேன். இதுவரை 13 சர்வதேச விருதுகள் கிடைத்துள்ளன. 9 தேசிய விருதுகள், 9 மாநில விருதுகள் கிடைத்துள்ளன.
தற்போது கம்ப்யூட்டர் கல்வி கற்கிறேன். அதில் 11 வயதிலேயே இரண்டு முறை கின்னஸ் பதக்கத்துக்கு முயற்சி செய்தேன். இதுவரை 28 மென்பொருட்களையும் உருவாக்கியிருக்கிறேன். நான் ஒரு கம்ப்யூட்டர் நிறுவனத்தையும் நடத்தி வருகிறேன்.
இதுபோன்ற விருதுகள் எங்களை ஊக்குவிப்பதாகவும், அங்கீகரிப்பதாகவும் உள்ளன. இளைஞர்கள் இன்னும் சமுதாய மேம்பாட்டுப் பணியில் ஈடுபட இதன்மூலம் ஊக்கம் ஏற்படும்.
தொழுநோயாளிகளுக்கு சேவை
பி.மணிமாறன்:- திருவண்ணாமலை மாவட்டம், தலையாமளை என்ற கிராமத்தைச் சேர்ந்த நான் 8-ம் வகுப்பு வரை படித்திருக்கிறேன். அதிலும் நான் தோற்றுவிட்டேன். எனது குரு அன்னை தெரசா. சேவையில் எனக்கு எப்போதுமே ஈடுபாடு உண்டு. அன்னை தெரசா மேற்கொண்டு வந்த சேவையை நானும் செய்து வருகிறேன்.
தொண்டுக்காக கொல்கத்தாவுக்குச் சென்றேன். நாட்டுக்குத் தேவையான சேவை எது என்பதைக் கண்டறிந்து அதைச்செய்கிறேன். தொழுநோயாளிகளுக்கு உதவி செய்ய யாரும் இல்லாத நிலையில் அவர்களின் புண்களைக் கழுவி, புழுக்களை அகற்றி, கட்டுப்போட்டு ஆசிரமங்களில் சேர்த்துவிடுகிறேன்.
மாணவர்களுக்கு விழிப்புணர்வு
இறந்துவிட்டால் எனது சொந்த செலவில் அடக்கம் செய்கிறேன். இதுவரை இந்தியாவில் 50 ஆயிரம் தொழுநோயாளிகளை சந்தித்திருக்கிறேன். 2006-ம் ஆண்டு முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாமை சந்தித்தேன். அவர் பல ஆலோசனைகளை வழங்கினார்.
தொண்டுகளை அவர் கடமை என்றுதான் கூறினார். மாணவர்கள் மத்தியில் தொண்டு, தர்மம் பற்றிய விழிப்புணர்வையும் ஏற்படுத்தி வருகிறேன். இந்த விருதை எனக்கு வழங்கிய, முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு நன்றி.