
சிலர் ஏ.டி.எம் கார்டை தொலைத்துவிட்டு, தொலைத்தது கூட தெரியாமல் பல
மணிநேரம் இருந்து விடுகிறோம். பிறகு ஞாபகம் வந்து தேடிப் பார்த்துவிட்டு,
வங்கியின் உதவி எண்ணுக்கு தகவல் சொல்வதற்குள், கிட்டத்தட்ட நான்கு, ஐந்து
முறையாவது அந்த கார்டு பயன்படுத்த பட்டு பணம் திருடப்பட்டிருப்பது தெரிய
வரும்.
தொலைந்துபோன ஏ.டி.எம் கார்டைக் கொண்டு, பின் நம்பர் தெரியாமல் எப்படி
பயன்படுத்துவார்கள்? ஒரு ஏ.டி.எம் கார்டை கொண்டு ஏ.டி.எம்-மில் பணம் எடுக்க
தான் பின் நம்பர் தேவை. அதுவே கடைகளில் பொருட்களை வாங்கி அதற்கான தொகையை
ஏடிஎம்-ல் செலுத்தும் போது, பின் நம்பர் தேவையில்லை. எனவே ஏ.டி.எம் கார்டு
தொலைந்தவுடன் அதை உடனே சம்மந்தப்பட்ட வங்கிக்கு தெரியப்படுத்தி கார்டை
பிளாக் செய்வது மிக மிக முக்கியம்
ஏமாற்றுப் பேர்வளிகள் பலவிதம்!
சில சமயங்களில் ஏ.டி.எம். சென்டரில் பின்னால் நிற்கும் ஆட்களோ,
செக்யூரிட்டியோகூட தண்ணீர் எடுக்க வருவதுபோல் வந்து பாஸ்வேர்டை தெரிந்து
வைத்துக்கொண்டு மோசடியில் ஈடுபட வாய்ப்புள்ளது. எனவே, ஏ.டி.எம். மையத்தை
விட்டு வெளியில் வரும்போது கார்டு இருக்கிறதா என்று உறுதி செய்து விட்டு
வெளியேறுவது நல்லது.
வங்கியின் அவுட்சோர்ஸிங் வேலைகளைச் செய்து வரும் பி.பீ.ஓ நிறுவன
ஊழியர்கள் கூட, பின் நம்பர் உள்ளிட்ட தகவல்களை ‘பாதுகாப்புக்காக’
விசாரிப்பது போல் விசாரிப்பார்கள். தகவல்கள் நம்மிடம் இருந்து
கிடைத்துவிட்டால், மின்னல் வேகத்தில் டூப்ளிகேட் கார்டை தயாரித்து
மோசடியில் ஈடுபட அதிக வாய்ப்பு உள்ளது. என்னதான் அவசர வேலையாக இருந்தாலும்
நண்பர்கள், உறவினர்களிடம் ஏ.டி.எம். கார்டைக் கொடுத்து பணம் எடுக்க
அனுப்புவதையும் தவிர்க்க வேண்டும்.
பின் நம்பர் பத்திரம்!
முடிந்தவரை ஏ.டி.எம். பின் நம்பரை யாரும் எளிதில் கண்டுபிடிக்காத மாதிரி
வைத்திருப்பது அவசியம். பிறந்த நாள், திருமண நாள், வண்டி நம்பர், அலுவலக
எண் போன்ற எளிதில் கணிக்கக் கூடிய எண்களைத் தவிர்க்கவும். பாஸ்வேர்ட்
மறந்துவிடும் என ஏ.டி.எம் கார்டின் அட்டையிலேயே பாஸ்வேர்டினை எழுதி
வைக்கும் முட்டாள்தனம் வேண்டவே வேண்டாம்.
ஸ்கேனிங் திருட்டு!
நாம் பயன்படுத்தும் ஏ.டி.எம். கார்டு பிளாஸ்டிக்கால் ஆனது. அதன்
பின்புறம் ஃபிலிம் போல ஒரு ஸ்டிக்கர் இருக்கும். அதில் உள்ள விவரங்கள்தான்
ஏ.டி.எம். மெஷினுக்குத் தேவையான விவரங்கள். ஒரிஜினல் கார்டை ஒரு கருவியில்
சொருகி, அதிலுள்ள தகவல்களை காப்பி எடுத்துக்கொண்டு, அதை வேறொரு பிளாஸ்டிக்
கார்டில் பதிவு செய்து டூப்ளிகேட் கார்ட் ரெடி செய்து மோசடி செய்யவும் அதிக
வாய்ப்பிருக்கிறது.
எனவே, ஓட்டல்கள், பார்கள் போன்ற இடங்களில் கார்டை கொடுத்துவிட்டு பில்
போடச் சொன்னால், அவர்கள் அதைக் ஸ்கேன் செய்துவிடலாம் என்பதால், நேரில்
சென்று பில் போட்டுவிட்டு வருவது முக்கியம்.
ஆன்லைன் திருட்டு!
ஏ.டி.எம். எண், பாஸ்வேர்ட்-ஐ இணையத்தில் அளித்து, டிக்கெட், ஷாப்பிங்
என்று பல தேவைகளுக்கும் பயன்படுத்தும்போது, அது பாதுகாப்பான வலைதளமா,
ஃபிஷிங் திருட்டா என்று விழிப்புடன் இருக்க வேண்டியது அவசியம். இணையத்தில்
பாதுகாப்பில்லாத தளங்களில் பணப் பரிவர்த்தனைகள் மேற்கொள்வதை தவிர்க்கவும்
விழிப்புணர்வு அவசியம்!
திருடர்களுக்கு அரசும், வங்கியும் சேர்ந்து வாயில் லட்டு வைத்து
ஊட்டிவிடுவது போல அல்லாமல், ஒருவர் ஏ.டி.எம். கார்டை எப்படிப் பயன்படுத்த
வேண்டும், எந்தெந்த விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும் என்பது குறித்து,
மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். ஏ.டி.எம். மையம்
அமைக்கும் இடத்தின் பாதுகாப்பு ஏற்பாடுகளை சரிபார்த்தே அதற்கு அனுமதி
அளிக்க வேண்டும்.