குமரப்பருவ மன்றம்:
10 வயது முதல் 19 வயதுக்குள்பட்ட மாணவ, மாணவிகள் வளர் இளம்பருவத்தினராக கருதப்படுவர். இவர்களுக்கு உடலியல், உளவியல் சார்ந்த பல்வேறு வளர்ச்சியும், பிரச்னைகளும் இயல்பாகவே அமைவதுண்டு. எனவே, இவர்களது உடல், மனநிலை மாற்றங்களுக்கு ஏற்ப தகுந்த வழிகாட்டுதலும் தேவைப்படும்.தகுதிவாய்ந்த உளவியல், மருத்துவ நிபுணர்களைப் பள்ளிக்கு அழைத்து தகுந்த ஆலோசனைகளை வழங்கச் செய்தல், பாலுணர்வு தொடர்பான இயல்பான உடல்நிலை, மனநிலை மாற்றங்கள் குறித்த அறிவினை வழங்குதல் ஆகிய பணிகளை இந்த மன்றங்களின் மூலம் மேற்கொள்ளலாம்.ஒத்த வயதுள்ளவர்களைத் தங்களுடைய பிரச்னைகள் குறித்து வெளிப்படையாகப் பேசிப் பகிர்ந்துகொள்ளச் செய்தல், அந்தப் பிரச்னைகளுக்கு ஆசிரியர்கள் மூலம் தீர்வுகள் வழங்கச் செய்தல், எந்த வகையான செயல்பாடுகள்வன்கொடுமையாகும் என்ற விழிப்புணர்வையும் மாணவர்களிடையே ஏற்படுத்தலாம். மாணவியர்களிடம் சரியான தொடுதல், தவறான தொடுதல்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். உளவியல், உடலியல் மாற்றங்கள் குறித்த நூல்கள், கட்டுரைகளை வாங்கிப் படிக்கவும் ஏற்பாடு செய்ய வேண்டும்.பாலியல் வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் பற்றிய கருத்துரைகளை அறியச் செய்தல், மேலும் கட்டுரை, கதை, கவிதைப் போட்டிகளை நடத்தி, வென்றவர்களுக்குப் பரிசுகளை வழங்குதல் போன்றவற்றையும் இந்த மன்றங்கள் மூலம் செய்ய வேண்டும்.
கலை, இலக்கிய மன்றங்கள்:
கலை இலக்கிய மன்றங்களின் மூலம் பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி, தமிழ் இலக்கியம் சார்ந்த போட்டிகள், கவியரங்கம், பட்டிமன்றம், பொழிவரங்கம் போன்ற நிகழ்ச்சிகளுக்கு இந்த மன்றங்களின் மூலம் ஏற்பாடு செய்ய வேண்டும். பள்ளி ஆண்டு விழா, விளையாட்டு விழா, குடியரசு தின விழா, ஆசிரியர்கள் தினம் போன்றவற்றை இந்த மன்ற உறுப்பினர்களை முன்னின்று நடத்த ஏற்பாடு செய்ய வேண்டும். கலை விழாக்களையும் நடத்த வேண்டும்.
விழிப்புணர்வு மன்றங்கள்:
அரசு, சிறப்புத் திட்டங்கள் மூலமாக மாணவர்களுக்குக் கிடைக்கும் சலுகைகளை எல்லா மாணவர்களும் உணரும்படி செய்யவும், சமூகக் கொடுமைகளை எதிர்த்துப் போராடும் துணிவு பற்றிய கருத்துரைகளை வழங்கவும் இந்த மையங்களைத் தொடங்க வேண்டும்.தொற்றுநோய்கள், நோய்த் தடுப்பு முறைகள், மருத்துவத்தின் தேவை, அவசியம் போன்ற விழிப்புணர்வை பள்ளியிலும், பள்ளி சார்ந்த இடங்களிலும் இந்த மன்றங்கள் மூலமாக அறியச் செய்ய வேண்டும் என அந்தச் சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.








