சென்னை உள்பட 20 அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள 2,257 எம்.பி.பி.எஸ். இடங்கள், சென்னை பாரிமுனை அரசு பல் மருத்துவக் கல்லூரியின் தமிழக ஒதுக்கீட்டுக்கு உரிய 85 பி.டி.எஸ். இடங்கள் என அனைத்திலும் மாணவர் சேர்க்கைக்கான இரண்டு கட்ட கலந்தாய்வு நடந்து முடிந்துள்ளது.
செப்டம்பர் 15-ஆம் தேதிக்குப் பிறகு...எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ்., மொத்த இடங்களில் 15 சதவீத இடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு ஒதுக்கப்படுகிறது. அதன்படி தமிழக அரசு மருத்துவக் கல்லூரிகளில் 398 இடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கான இடங்கள் ஆகும். அகில இந்திய ஒதுக்கீட்டின் அடிப்படையிலான கலந்தாய்வு அடிப்படையில் உரிய மருத்துவக் கல்லூரிகளில் மாணவர்கள் சேருவதற்கு செப்டம்பர் 15-ஆம் தேதி கடைசி நாளாகும். எனவே, செப்டம்பர் 15-ஆம் தேதிக்குப் பிறகுதான் அகில இந்திய ஒதுக்கீட்டில் எம்.பி.பி.எஸ். படிப்பில் சேராத மாணவர்களின் காலியிடம் குறித்த விவரம் தெரிய வரும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
கூடுதல் இடங்களில் சேர...இந்த நிலையில் 69 சதவீத இட ஒதுக்கீடு காரணமாக இடம் கிடைக்காத பொதுப் பிரிவைச் சேர்ந்த 8 மாணவர்கள் அண்மையில் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து, அரசு மருத்துவக் கல்லூரிகளில் ஏற்படுத்தப்பட உள்ள கூடுதல் எம்.பி.பி.எஸ். இடங்களில் சேர உத்தரவைப் பெற்றுள்ளனர். இவ்வாறு அரசு மருத்துவக் கல்லூரிகளில் இடம் கிடைக்காமல் பொதுப் பிரிவைச் சேர்ந்த 27 மாணவர்கள் உள்ளனர். எனவே, உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்த 8 மாணவர்கள் உள்பட பொதுப் பிரிவைச் சேர்ந்த 27 மாணவர்கள் அரசு மருத்துவக் கல்லூரிகளில் சேருவதற்கான வாய்ப்பு உருவாகியுள்ளது.
3-ஆம் கட்டக் கலந்தாய்வு: எனவே, அகில இந்திய ஒதுக்கீட்டில் ஏற்படும் காலியிடங்கள், அரசு மருத்துவக் கல்லூரிகளில் 27 மாணவர்களுக்காக ஏற்படுத்தப்பட உள்ள கூடுதல் இடங்கள், சுயநிதி மருத்துவக் கல்லூரிகளின் அரசு ஒதுக்கீட்டு எம்.பி.பி.எஸ். காலியிடங்கள், சுயநிதி பல் மருத்துவக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு பி.டி.எஸ். காலியிடங்கள் ஆகியவை செப்டம்பர் 20-ஆம் தேதிக்கு மேல் நடத்தப்படும் 3-ஆம் கட்டக் கலந்தாய்வில் நிரப்பப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.








