ராமநாதபுரம் அருகே, சங்க காலத்தைச் சேர்ந்த இரண்டு ஊர்கள்
கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக, தகவல் வெளியாகி உள்ளது. ராமநாதபுரம் மாவட்டம்,
திருப்புல்லாணி, அரசு மேல்நிலைப்பள்ளி தொன்மை பாதுகாப்பு மன்ற ஆசிரியர்
ராஜகுரு, டாக்டர் ராஜமோகன் மற்றும் மாணவர்கள் கூறியதாவது:
உத்திரகோசமங்கை
அருகே, கீழச்சீத்தை கானத்திடல் என்ற இடத்தில், கசிவுநீர் குட்டைக்காக
தோண்டிய இடத்தை மேற்பரப்பாய்வு செய்தபோது, ரோமானிய, 'ரவுலெட்டட்' ஓடுகள்,
சீனாவின், 'பார்சிலின்' ஓடுகள், இரும்பு கோடாரி, இரும்பு தாதுக்கள்,
சிவப்பு பானை ஓடுகள், சுடுமண் விளக்கு, பவளப்பாறைகள் உள்ளிட்ட, 15 வகை
பொருட்கள் கிடைத்தன.இந்த பழம்பொருட்களை கொண்டு, அங்கு சங்க கால நகரம்
இருந்ததை அறிய முடிகிறது.
கருப்பு, சிவப்பு பானை ஓடுகள் கி.மு., 300 முதல்,
கி.பி., 200 வரை வாழ்ந்த சங்க கால மக்கள் அதிகம் பயன்படுத்தியவை என்பதால்,
இதை சங்க கால பானை ஓடுகள் என, தொல்லியல் வல்லுனர்கள் கருதுகின்றனர்.
இவற்றை வைத்துப் பார்த்தால், இவ்வூர் மக்கள் ரோமானியர், சீனர்களுடன்
வணிகம் செய்திருப்பது உறுதியாகிறது. ரோமானியர்கள், கி.மு., 300 முதல்
கி.பி., 100 வரை தமிழகத்துடன் வணிகம் செய்துள்ளதால், இவ்வூர் 1,500 ஆண்டு
பழமை வாய்ந்ததாக இருக்கலாம் என, கருதத் தோன்றுகிறது.கருப்பு, சிவப்பு,
பழுப்பு நிற பானை ஓடுகள் சிலவற்றில் திரிசூலம், ஏணி குறியீடுகள் உள்ளன.
வெள்ளா மறிச்சுகட்டி கண்மாய் மேற்பரப்பு ஆய்வில், கருப்பு, சிவப்பு பானை
ஓடுகள், கூரை ஓடுகள் கிடைத்துள்ளதால், அவ்விடத்திலும் சங்க கால ஊர்
இருந்திருக்க வாய்ப்பு உள்ளது.
இப்பகுதிகளில் தொல்லியல் துறையினர் அகழாய்வு செய்து, வரலாற்று சிறப்பை வெளிப்படுத்த வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.