விநாயகர் சதுர்த்தி விழா
விநாயகர் சதுர்த்தி விழா இன்று (வியாழக்கிழமை) கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி சென்னை உள்பட தமிழகம் முழுவதும் இந்து முன்னணி, இந்து மக்கள் கட்சி, சிவசேனா உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் சார்பில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் தெருக்களில் வைத்து வழிபாடு செய்யப்படுகிறது. வழிபாட்டுக்கு வைக்கப்பட்ட விநாயகர் சிலைகள் வருகிற 20-ந் தேதி முதல் ஊர்வலமாக எடுத்துச்செல்லப்பட்டு கடலில் கரைக்கப்படும்.
கடந்த ஆண்டைப்போல...
சென்னை நகரில் கடந்த ஆண்டு 2093 இடங்களில் 2,093 பெரிய விநாயகர் சிலைகள் வைக்க அனுமதிக்கப்பட்டது. அதே இடங்களில் தற்போதும் சிலைகள் வழிபாட்டுக்காக வைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்து முன்னணி சார்பில் மட்டும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெரிய சிலைகள் வழிபாட்டுக்காக வைக்கப்படுகிறது. இந்து முன்னணி தவிர மேலும் 14 அமைப்புகள் சார்பில் சென்னையில் சிலைகள் வழிபாட்டுக்காக வைக்கப்படுகின்றன. நேற்று இரவோடு இரவாக சென்னையில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டன.
18 ஆயிரம் போலீஸ் குவிப்பு
விநாயகர் சதுர்த்தி விழா மற்றும் விநாயகர் சிலைகள் ஊர்வலத்தையொட்டி சென்னையில் பலத்த போலீஸ் பாதுகாப்புக்கு கமிஷனர் ஜார்ஜ் உத்தரவிட்டுள்ளார். சுமார் 18 ஆயிரம் போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்படுகிறார்கள். சென்னையில் வைக்கப்படும் ஒவ்வொரு சிலைக்கும் போலீஸ் பாதுகாப்பு வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சில இடங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசாரும் பாதுகாப்பாக நிறுத்தப்படுகிறார்கள்.
தீவிரவாதிகள் அச்சுறுத்தல் இருப்பதால், தமிழகம் முழுவதும் போலீசாரை உஷார்படுத்தி டி.ஜி.பி. அசோக்குமார் ஆணையிட்டுள்ளார்.








