கலந்தாய்வுக்கு கோவை செல்வதற்கு பதிலாக சென்னை வந்த மாணவி சுவாதிக்கு, தந்தி டி.வி. முயற்சியால் இலவசமாக பல் மருத்துவ படிப்பு வழங்க மதுரவாயலில் உள்ள டாக்டர் எம்.ஜி.ஆர். கல்வி மற்றும் ஆராய்ச்சி பல்கலைக்கழகம் முன்வந்துள்ளது.
மாணவி சுவாதி
திருச்சியை சேர்ந்த கணவரால் கைவிடப்பட்ட தங்கப்பொண்ணு என்பவரின் மகள் சுவாதி. இவர் பிளஸ்-2 தேர்வில் 1200-க்கு 1117 மதிப்பெண் எடுத்தார். டாக்டருக்கு படிக்க வேண்டும் என்ற கனவில் இருந்த சுவாதிக்கு எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர இடம் கிடைக்கவில்லை.
பின்னர் கோவையில் உள்ள வேளாண் பல்கலைக்கழகத்தில் பி.டெக். பயோ டெக்னாலஜி படிக்க விண்ணப்பித்தார். அவருக்கு ஆகஸ்டு மாதம் 8-ந்தேதி கோவை வேளாண்மை பல்கலைக்கழகத்தில் அண்ணா கலை அரங்கில் நடைபெறும் கலந்தாய்வில் கலந்துகொள்ள அழைப்பு வந்தது. ஆனால் கடிதத்தை சரியாக படிக்காமல் சுவாதி தாயாருடன் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்திற்கு அன்று காலை வந்தார்.
அப்போது அங்கு நடைபயிற்சியில் இருந்த அண்ணா பல்கலைக்கழக நூலகர் ஆர்.பாண்டியன், தனியார் நிறுவன மனிதவள மேம்பாட்டுத்துறையில் பணிபுரியும் எம்.சரவணன் ஆகியோர் சுவாதியிடம் விவரத்தை எடுத்துக் கூறியதுடன், கோவைக்கு விமான டிக்கெட் எடுத்துக் கொடுத்து அனுப்பிவைத்தனர்.
அன்று மதியம் அங்கு நடந்த கலந்தாய்வில் கலந்துகொண்ட சுவாதிக்கு பி.டெக். பயோ டெக்னாலஜி கிடைத்தது.
தந்தி டி.வி. நிறுவனம்
ஆனாலும் சுவாதிக்கு மருத்துவம் படிப்பதிலேயே நாட்டம் இருந்தது. இதை அறிந்த தந்தி டி.வி. நிறுவனம், சுவாதிக்கு உதவுவதற்காக மதுரவாயலில் உள்ள டாக்டர் எம்.ஜி.ஆர். கல்வி மற்றும் ஆராய்ச்சி பல்கலைக்கழக தலைவர் ஏ.சி.எஸ்.அருண்குமாரை தொடர்புகொண்டது.
அவர் சுவாதியை தனது பல்கலைக்கழகத்தில் பல் மருத்துவ படிப்பில் இலவசமாக சேர்த்துக்கொள்வதாக தெரிவித்தார்.
இதுபற்றி ஏ.சி.எஸ்.அருண்குமார் கூறியதாவது:-
இலவசமாக படிக்கலாம்
சுவாதிக்கு டாக்டர் எம்.ஜி.ஆர். கல்வி மற்றும் ஆராய்ச்சி பல்கலைக்கழகத்தின் நிறுவன தலைவர் ஏ.சி.சண்முகத்தின் கல்வி உதவித்தொகை வருடந்தோறும் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதனால் மாணவி சுவாதி எந்த கட்டணமும் செலுத்ததேவையில்லை. அவர் நன்றாக படிக்க வேண்டும் என்பதுதான் எங்கள் அன்பு வேண்டுகோள்.
என்ஜினீயரிங் படிப்பில் அதிக மதிப்பெண் எடுக்கும் ஏழை மாணவ-மாணவிகளுக்கு பல்கலைக்கழக நிறுவன தலைவர் ஏ.சி.சண்முகத்தின் கல்வி உதவித்தொகை கொடுக்கப்படுகிறது. பல் மருத்துவப்படிப்பில் இலவசமாக சேர்ந்த முதல் மாணவி இவர்தான் என்பது குறிப்பிடத்தக்கது.
இவ்வாறு ஏ.சி.எஸ்.அருண்குமார் கூறினார்.
ஆணை வழங்கப்பட்டது
சுவாதிக்கு பல் மருத்துவப்படிப்பில் சேர்வதற்கான ஆணையையும் அவர் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் பல்கலைக்கழக ரெக்டர் ஜி.கோபாலகிருஷ்ணன், பதிவாளர் சி.பி.பழனிவேலு, இணை பதிவாளர் பி.காளிதாஸ், டீன்கள் வி.சிறில்ராஜ், பி.கலியபெருமாள் மற்றும் எம்.ரெங்கராஜ், முகமது ரபீக், ஜெமீமா ஜெயா உள்பட பலர் கலந்துகொண்டனர். மாணவி சுவாதி நேற்றே பல் மருத்துவ படிப்பில் சேர்ந்தார்.
இலவசமாக பல் மருத்துவப்படிப்பில் சேர வாய்ப்பு அளித்ததற்காக சுவாதியும் அவரது தாயார் தங்கப்பொண்ணும் கண்ணீர் மல்க தந்தி டி.வி. நிறுவனத்திற்கும், ஏ.சி.சண்முகம் மற்றும் ஏ.சி.எஸ்.அருண்குமாருக்கும் நன்றி தெரிவித்தனர்.
கிராம மக்களுக்கு சேவை
மாணவி சுவாதி கூறும்போது, ‘‘சிறுவயதில் இருந்தே எனக்கு மருத்துவம் படிக்கவேண்டும் என்று ஆசை. என் ஆசை நிறைவேற காரணமாக இருந்த தந்தி டி.வி. நிறுவனத்திற்கும், டாக்டர் எம்.ஜி.ஆர். கல்வி மற்றும் ஆராய்ச்சி பல்கலைக்கழகத்திற்கும் எனது உளம்சார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். நான் நன்றாக படித்து பட்டம் பெற்று, பின்னர் எம்.டி.எஸ்.சும் படிப்பேன். பிறகு கிராமத்தில் வசிக்கும் ஏழை மக்களுக்கு மருத்துவ சேவை செய்வேன். கலந்தாய்வுக்கு தவறுதலாக சென்னைக்கு வந்தபோது கோவை செல்வதற்கு உதவிய பரமசிவன், அண்ணா பல்கலைக்கழக நூலகர் பாண்டியன், தொழில் அதிபர் ஜெய்சங்கர் உள்பட 4 பேர்களுக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்’’ என்றார்.








