வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு - திருத்தம்:மாநிலம் முழுவதும் இன்று சிறப்பு முகாம்கள்:
வாக்காளர் பட்டியலில் பெயர்
சேர்ப்பு, நீக்கம் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள சிறப்பு முகாம்கள் தமிழகம்
முழுவதும் ஞாயிற்றுக்கிழமை (செப். 20) நடைபெறுகிறது.
தமிழகத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் கடந்த 15 ஆம்
தேதியன்று வெளியிடப்பட்டது. அதன்படி, மாநிலத்தில் மொத்தம் 5.66 கோடி
வாக்காளர்கள் உள்ளனர். வரைவு வாக்காளர் பட்டியலில் உரிய திருத்தங்கள்
செய்யும் பணி, வட்டாட்சியர், மாநகராட்சி மண்டல அலுவலகங்களில்
மேற்கொள்ளப்பட்டு வருகிறது. எனினும், பணிக்குச் செல்பவர்களும் வாக்காளர்
பட்டியலில் திருத்தங்களைச் செய்ய ஏதுவாக விடுமுறை தினமான
ஞாயிற்றுக்கிழமைகளில் சிறப்பு முகாம்களுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளளன.
அதன்படி, செப்டம்பர் 20, அக்டோபர் 4 ஆகிய இரண்டு ஞாயிற்றுக்கிழமைகளிலும் முகாம்கள் நடத்தப்பட உள்ளன.
இன்று சிறப்பு முகாம்கள்:
தமிழகம் முழுவதும் 66 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்குச்
சாவடிகளில் ஞாயிற்றுக்கிழமை (செப். 20) சிறப்பு முகாம்கள் நடத்தப்பட
உள்ளன. இந்த முகாம்கள் அனைத்தும் மாநிலங்களவைத் தேர்தலின் போது வாக்களித்த
வாக்குச் சாவடிகளில் நடத்தப்படும். காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை
சிறப்பு முகாமில் அதிகாரிகள் பணிகளை மேற்கொள்வர்.
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு, நீக்கல்,
திருத்தம், இடம்மாறியது ஆகிய பணிகளைச் செய்வதற்குரிய விண்ணப்பப் படிவங்களை
வாக்குச் சாவடி அலுவலர்களிடம் அளிக்கலாம். இதற்கான விண்ணப்பங்கள் வாக்குச்
சாவடியிலேயே வழங்கப்படும்.
புகார்களைத் தெரிவிக்கலாம்:
சிறப்பு முகாமில் ஏதேனும் புகார்கள், குறைபாடுகள்
இருந்தால் அதுகுறித்து தேர்தல் துறையிடம் தெரிவிக்கலாம் என்று தமிழக
தலைமைத் தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனா கூறியுள்ளார். இதுகுறித்து, அவர்
சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில், சிறப்பு முகாம்கள் குறித்த புகார்கள்,
குறைகள், ஆலோசனைகளை மாவட்டங்களில் ஆட்சியர் அலுவலகங்கள், சென்னையில்
மாநகராட்சி ஆணையாளர் அலுவலகம் ஆகிய இடங்களில் அமைக்கப்பட்டுள்ள உதவி
மையங்களில் தெரிவிக்கலாம்.
பெயர் நீக்கம், சேர்த்தல் ஆகிய பணிகளை இணையதளம்
வாயிலாகவும் மேற்கொள்ளலாம். இதற்கென தமிழக தேர்தல் துறையின் இணையதளத்தில்
(elections.tn.gov.ineregistration) சிறப்பு வசதி செய்யப்பட்டுள்ளதாக
சக்சேனா தெரிவித்துள்ளார்.
எதற்கு என்னென்ன விண்ணப்பங்கள்?:
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்கம் செய்ய
எத்தகைய எண் கொண்ட விண்ணப்பங்களைப் பயன்படுத்த வேண்டுமென தேர்தல் ஆணையம்
அறிவுறுத்தியுள்ளது. அதன் விவரம்:
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, படிவம் 6. பெயரை நீக்கம் செய்ய படிவம் 7.
அயல்நாடுகளில் வசிப்போர் பட்டியலில் பெயர் சேர்க்க
படிவம் 6 ஏ. வாக்காளர் பட்டியலில் உள்ள விவரங்களைத் திருத்தம் செய்வதற்கு
படிவம் 8. வாக்காளர் பட்டியலில் உள்ள பதிவை இடமாற்றம் செய்வதற்கு படிவம் 8
ஏ. வாக்காளர் அடையாள அட்டை தொலைத்தால் புதிய அட்டையைப் பெற படிவம் 001.
அயல்நாடுகளில் வசிப்போர் கவனத்துக்கு...: அயல்நாடுகளில்
வசிப்போர் தங்களது பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்ப்பதற்கு படிவம் 6ஏ-ஐப்
பயன்படுத்த வேண்டும். அதில், கடவுச்சீட்டு எண், கடவுச்சீட்டு வழங்கிய
இடம், அதை அளித்த அதிகாரி போன்ற பல்வேறு விவரங்கள் கேட்கப்பட்டிருக்கும்.
எனவே, அவற்றை உரிய முறையில் பூர்த்தி செய்தால் மட்டுமே விண்ணப்பங்கள்
ஏற்கப்படும் என்று தேர்தல் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும், அவர்களது பெயர் வாக்காளர் பட்டியலில்
இருந்தாலும், வாக்குப் பதிவின் போது அவர்கள் தாயகம் வந்து தங்களுக்கான
வாக்குச் சாவடியில் வந்து வாக்கைச் செலுத்த வேண்டும். வேறு வகைகளில்
அவர்கள் தங்களது வாக்கைச் செலுத்த இயலாது என்றும் அவர்கள் கூறினர்.
பொதுச் சேவை மையங்களில் வசதி: வாக்காளர் பட்டியல் பெயர்
சேர்ப்பு, நீக்குதல் தொடர்பாக பொதுச் சேவை மையங்களிலும் விண்ணப்பங்களைப்
பதிவு செய்யலாம்.
வட்டாட்சியர் அலுவலகங்கள், மாநகராட்சி மண்டல
அலுவலகங்களில் உள்ள பொதுச் சேவை மையங்களில் ரூ.10 செலுத்தி அனைத்து விதமான
விண்ணப்பங்களையும் பதிவு செய்யலாம்.
வாக்குச் சாவடியை கண்டறிய புதிய வசதி
வாக்குச் சாவடியையும், அது அமைந்துள்ள இடத்தையும் எளிதில் கண்டறிய வாக்காளர் பட்டியலில் புதிய வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
வாக்காளர் பட்டியலின் முதல் பக்கத்தில் பேரவைத்
தொகுதியின் பெயர், பாகம் எண் உள்ளிட்ட அடிப்படை விவரங்கள் இருக்கும்.
இரண்டாவது பக்கத்தில் வாக்குச் சாவடியை எளிதில் அடையாளம் கண்டுகொள்ளும்
வகையில் புதிய வசதி செய்யப்பட்டுள்ளது.
அதில், ஒரே பக்கத்தில் ஆறு முக்கிய அம்சங்கள்
இடம்பெற்றுள்ளன. அதாவது, வாக்குச் சாவடி அமைந்துள்ள பகுதியின் வரைபடம்,
வாக்குச் சாவடி அமைந்துள்ள பள்ளி அல்லது அலுவலகத்தின் வெளிப்புறத் தோற்றம்,
வாக்குச் சாவடியைச் சுற்றியுள்ள பகுதிகளின் வரைபடம், இணையதளத்தில்
வாக்குச் சாவடி அமைந்துள்ள இடத்தின் தோற்றம், வாக்குச் சாவடி அமைந்துள்ள
தெருவின் புகைப்படம், வாக்குச் சாவடிக்குச் செல்லும் வழி ஆகியன பிரதான
அம்சங்களாக இடம்பெற்றிருக்கின்றன.
இந்த விவரங்களை வாக்காளர்கள் தமிழக தேர்தல் துறையின்
இணையதளம் வாயிலாக (www.elections.tn.gov.inpdfacwisepdf.asp) எளிதில்
பார்வையிட முடியும். இதன் நகல்கள் சிறப்பு முகாம்களின் போது வாக்குச் சாவடி
அமைவிடங்களிலும், பிற நாள்களில் வட்டாட்சியர், மாநகராட்சி மண்டல
அலுவலகங்களிலும் வைக்கப்பட்டிருக்கும்.
"மகனா - மகளா... ஆண்டவன் மீது உறுதி எடுங்கள்'
வாக்காளர் பட்டியலில் 18 வயது நிறைவு அடைந்தவர்கள்
தங்களது பெயரைச் சேர்க்கலாம். அவ்வாறு சேர்க்கும் போது வயதுக்கான உரிய
சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும்.
சான்றிதழை சமர்ப்பிக்காவிட்டால், உறுதிமொழிப் படிவம்
பெற்றோரிடம் இருந்து பெறப்படும். அந்த உறுதிமொழிப் படிவத்தில்,
சம்பந்தப்பட்ட விண்ணப்பதாரர் எனது மகன்-மகள் தான் என்பதை ஆண்டவன் மீது
சூளுரைத்து உறுதி கூறுகிறேன் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த வார்த்தையைத் தவிர்த்து, "உளமார' என்ற வார்த்தையை மட்டுமே பயன்படுத்த வேண்டுமென வாக்காளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.








