மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில்
வியாழக்கிழமை (டிச.10) முதல் பள்ளிகள் திறக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு
எழுந்துள்ளது.ஆனால், பள்ளி-கல்லூரிகள் வெள்ள நிவாரண முகாம்களாக
மாற்றப்பட்டுள்ளதால் அவற்றைத் தவிர்த்து மற்ற பள்ளி-கல்லூரிகள் திறக்கப்பட
வாய்ப்பிருப்பதாக அரசுத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
தமிழகத்தில்
கடந்த மாதம் தீபாவளி பண்டிகையை ஒட்டி கன மழை பெய்யத் தொடங்கியது. கடலூரில்
தொடங்கிய கனமழை, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களை புரட்டிப்
போட்டது. இந்த நிலையில், அந்த மாவட்டங்களுக்கு கடந்த மாதம் 9-ஆம் தேதியில்
இருந்து விடுமுறை விடப்பட்டது.நவம்பர் மாத இறுதியில் ஒருசில நாள்கள்
மட்டுமே பள்ளி-கல்லூரிகள் இயங்கின. அதிலும், சில குறிப்பிட்ட பள்ளிகளுக்கு
தொடர் விடுமுறைகள் கொடுக்கப்பட்டன. இந்த நிலையில், கடந்த 1-ஆம் தேதி முதல்
சில நாள்களுக்கு பெய்த கனமழை காரணமாக பள்ளி-கல்லூரிகளுக்கு மீண்டும்
விடுமுறை விடப்பட்டது.வரும் புதன்கிழமை (டிச.9) வரை சென்னை, திருவள்ளூர்,
காஞ்சிபுரம் மாவட்டங்களுக்கு விடுமுறை விடப்படுவதாக சம்பந்தப்பட்ட
மாவட்டங்களின் ஆட்சியர்கள் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில், வியாழக்கிழமை
(டிச.10) முதல் பள்ளிகள் திறக்கப்படுமா என்ற கேள்வி பெற்றோர்களிடையே
எழுந்துள்ளது.நிவாரண முகாம்கள்: மழையால் பாதித்த மூன்று மாவட்டங்களிலும்
உள்ள பெரும்பாலான பள்ளி-கல்லூரிகள் நிவாரண முகாம்களாக மாற்றப்பட்டுள்ளன.
அதில் தங்கியிருந்த மக்கள் மெதுவாக தங்களது வீடுகளுக்குத் திரும்பி
வருகின்றனர்.
இந்த நிலையில்,
அனைத்துப் பள்ளிகளிலும் பிளீச்சிங் பவுடர் போட்டு அவற்றை சுத்தப்படுத்தும்
பணிகள் நடைபெற்று வருகின்றன.வியாழக்கிழமை கன மழை இல்லாத நிலையில்,
அனைத்துப் பள்ளிகளும் திறக்கப்படும் என அரசுத் துறை வட்டாரங்கள்
தெரிவித்தன. நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ள பள்ளிகள் மட்டும்
செயல்படாது என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், வியாழக்கிழமை முதல்
பெரும்பாலான பள்ளி-கல்லூரிகள் திறக்கப்பட வாய்ப்பிருப்பதாகத் தெரிகிறது.