மூத்த குடிமக்களுக்கு
பயண சலுகை
இதுகுறித்து மாநகர போக்குவரத்து கழக மேலாண்மை இயக்குனர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
மாநகர போக்குவரத்துக் கழக பேருந்து நிலையங்கள் மற்றும் பணிபனைகளில் இதற்கான விண்ணப்பங்களை பெற்றுக் கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை பேருந்து நிலையங்கள் மற்றும் பணிமனைகள் உள்பட 42 இடங்களில் விண்ணப்பதாரர்கள் நேரில் சென்று அளித்து கட்டணமில்லா பயண அடையாள அட்டை மற்றும் மாதம் ஒன்றுக்கு தலா 10 டோக்கன்களை பெற்றுக் கொள்ளலாம். இத்திட்டம் முதல்-அமைச்சரால் கடந்த 20-ந்தேதியன்று தொடங்கி வைக்கப்பட்டது.
கட்டணமில்லா டோக்கன்
பஸ்சில் பயணம் செய்யும் போது புகைப்படத்துடன் கூடிய அசல் பயண அடையாள அட்டையை நடத்துனரிடம் காண்பித்து அசல் கட்டணமில்லா பயண டோக்கனை பேருந்து நடத்துனரிடம் அளித்து அதற்குரிய கட்டணமில்லா பயணச்சீட்டு பெற்றுக் கொண்டு பயணம் செய்ய வேண்டும். பரிசோதகர்கள் பரிசோதனையின் போது பயண அடையாள அட்டை மற்றும் கட்டணமில்லா பயணச்சீட்டு ஆகியவற்றை கேட்கும் போது காண்பிக்க வேண்டும்.
கட்டணமில்லா டோக்கன்களில் அச்சடித்துள்ள மாதத்திற்கு மட்டுமே அந்தந்த டோக்கன்கள் செல்லுபடியாகும். குறிப்பிட்ட மாதம் கடந்துவிட்டால் அந்த டோக்கன்கள் காலாவதியானதாக கருதப்படும்.
சான்றிதழ் நகல்
கட்டணமில்லா பயண அட்டை மற்றும் டோக்கன்கள் குறிப்பிட்ட பஸ் நிலையங்கள் மற்றும் மாநகர பேருந்து பணிமனைகள் உள்பட 42 இடங்களில் அனைத்து நாட்களிலும் காலை 8½ மணி முதல் மதியம் 1½ விரையிலும், மதியம் 2 மணி முதல் இரவு 7 மணி வரையிலும் விண்ணப்பதாரர்களுக்கு நேரில் வழங்கப்படும்.
விண்ணப்பம் அளிக்கும் போது வயது மற்றும் இருப்பிட சான்றுக்காக ஆதார் அட்டை அல்லது வாக்காளர் அட்டை, ஓட்டுனர் உரிமம் அல்லது ரேஷன் கார்டு அல்லது பள்ளி சான்றிதழ் இதுபோன்ற சான்றின் நகலை இணைக்கப்பட வேண்டும். மேலும் பாஸ்போர்ட் அளவு 2 புகைப்படங்கள் விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும். மூத்த குடிமக்களுக்கான கட்டணமில்லா பஸ் வசதியை சென்னை மாநகர் பேருந்துகளில், இரவு நேரப்பேருந்துகள் உள்பட அனைத்து பேருந்துகளிலும் (குளிர்சாதன பேருந்து நீங்கலாக) பயணம் செய்யலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.








