வீட்டை வாடகை விடுவோர், பல மடங்கு முன்பணம் வசூலிக்க தடை செய்யும்,
அதேநேரத்தில், மூன்று மடங்கு மட்டுமே முன்பணமாக வசூலிக்க வகை செய்யும்,
மத்திய அரசின் புதிய சட்டத்தை அமல்படுத்த, தமிழக அரசு சம்மதம்
தெரிவித்துள்ளது.
கல்வி, வேலை வாய்ப்பு உள்ளிட்ட காரணங்களுக்காக, நகரங்களுக்கு
குடிபெயர்வோர், வாடகை வீடுகளையே சார்ந்திருக்கின்றனர். ஆனால், வீட்டை
வாடகைக்கு விடுவோர், எவ்வளவு வாடகை வசூலிக்க வேண்டும்; முன்பணம் எவ்வளவு
பெற வேண்டும்; குடியிருந்தவர்கள் வீட்டை காலி செய்யும் போது, பின்பற்ற
வேண்டிய நடைமுறை என்ன என்பதில், பல குழப்பங்கள் நிலவுகின்றன. அதனால்,
வீட்டை வாடகைக்கு விடும் பலர், வாடகையில், 10 மடங்கு மற்றும் அதற்கு மேலான
தொகையை, முன்பணமாக பெறுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.
புதிய சட்டம்:
நாடு
முழுவதும் வாடகை கட்டுப்பாட்டுக்காக, 1948ல் சட்டம் ஒன்று இயற்றப்பட்டது.
இந்தச் சட்டம், தற்போதைய சூழ்நிலைக்கு உகந்ததாக இல்லை. அதனால், மத்திய
அரசு, மாதிரி வாடகை சட்டத்தை, 2015ல் உருவாக்கியது.இந்த சட்ட மசோதாவுக்கு,
மாநில அரசுகளின் ஒப்புதலை பெறும் பணிகள் நடந்து வருகின்றன.வீடுகளுக்கான
வாடகையை முடிவு செய்தல்; மூன்று மாத வாடகையை முன்பணமாக வசூலித்தல்;
உரிமையாளர் - வாடகைதாரர் இடையேயான ஒப்பந்தம் போன்றவற்றுக்கான விதிகள்,
இச்சட்டத்தில் வகுக்கப்பட்டு உள்ளன.
ஒப்புதல்:
மத்திய
அரசின் இந்த சட்டத்தை அமல்படுத்த, தமிழகம் உட்பட, பல மாநிலங்கள் ஒப்புதல்
தெரிவித்து விட்டன. இது குறித்து வீட்டுவசதி துறை உயர் அதிகாரிகள்
கூறுகையில், 'மத்திய அரசின் மாதிரி வாடகை சட்டத்தை கொள்கை அளவில் தமிழக
அரசு ஏற்றுள்ளது. இதை அமல்படுத்துவதற்கானசாத்தியக்கூறுகள் ஆராயப்பட்டு
வருகின்றன. சில ஆண்டுகளில், இந்தச் சட்டம் முழுமையாக அமல்படுத்தப்படும்'
என்றனர்.இதையடுத்து, வீட்டை வாடகைக்கு விடுவதில், இருந்து வரும்
பல்வேறுசச்சரவுகளுக்கு விரைவில் தீர்வு ஏற்படும் என,
எதிர்பார்க்கப்படுகிறது.
சிறப்பு அம்சங்கள் என்ன?
*வீட்டை வாடகைக்கு விடுவோர், முன்பணமாக மூன்று மாத வாடகையை மட்டுமே வசூலிக்க முடியும்
*வீட்டை
வாடகைக்கு விடும் போது, 12 மாத ஒப்பந்தம் கையெழுத்திடப்பட வேண்டும்.
ஒப்பந்தத்தை புதுப்பிப்பது, வாடகையை உயர்த்துவது குறித்து உரிமையாளர்
இரண்டு மாதங்களுக்கு முன்னரே, வாடகைதாரருக்கு தெரிவிக்க வேண்டும்*மாநில
அளவில் வாடகை தொடர்பான புகார்களை விசாரிக்க, தனி ஆணையம் அல்லது தீர்ப்பாயம்
அமைக்கப்படும். ஒப்பந்த மீறல்கள் நடந்தால், வீட்டு உரிமையாளர்கள்,
வாடகைதாரர்கள் இவற்றில் முறையிடலாம்.
- நமது நிருபர் -