டில்லியில், அதிநவீன வசதிகளுடன், 'எய்ம்ஸ்' மருத்துவமனை செயல்படுகிறது. 'இதன் கிளை, தமிழகத்திலும் அமைக்கப்படும்' என, மத்திய அரசு அறிவித்தது. இதற்காக, 200 ஏக்கர் இடத்தை தேர்வு செய்து தருமாறு, தமிழக அரசிடம் கோரியது. இதன்படி, மதுரை -- தோப்பூர்; ஈரோடு -- பெருந்துறை; காஞ்சிபுரம் -- - செங்கல்பட்டு; தஞ்சை - செங்கிப்பட்டி; புதுக்கோட்டை என, ஐந்து இடங்களை தமிழக அரசு பரிந்துரைத்தது.மத்திய சுகாதாரத்துறை அமைச்சக அதிகாரிகள் குழு, 2015 ஏப்., மாதம், ஐந்து இடங்களையும் ஆய்வு செய்தது. அதில், ஈரோடு - பெருந்துறை; மதுரை - தோப்பூர் இடங்கள், 'எய்ம்ஸ்' கிளை அமைக்க ஏற்றது என, அக்குழு தெரிவித்தது.
இதுகுறித்து, மத்திய சுகாதார அமைச்சக அதிகாரி ஒருவர் கூறுகையில், 'மதுரை - தோப்பூரில், 'எய்ம்ஸ்' மருத்துவமனை கிளை அமைவது உறுதி செய்யப்பட்டாலும், இறுதி அறிவிப்பு வெளியாகிவில்லை. மேலும் சில மாநிலங்களிலும், 'எய்ம்ஸ்' மருத்துவமனை கிளைகள் அமைக்க இடம் தேர்வு பட்டுள்ளது. அவற்றையும் சேர்த்து, மத்திய பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியாகும்' என்றார்.








